Saturday 15 September 2018

கோர்ட்டார் நினைவு அஞ்சலி



                          கோர்ட்டார் நினைவு அஞ்சலி
           காந்தி கலா நிலையம் மேனிலைப் பள்ளி நிறுவனர் நினைவு நாள்(18-௦6-2௦15)
ஞானமும் கல்வியும் நாளும் நல்கிடும்
காந்திகலா நிலையம் கண்டெடுத்த முத்து
கோதில்  கோர்ட்டார்தாள் போற்றி
ஆடைமட்டும் அல்ல அகமும் வெள்ளை
சிவந்த வாயின் சொல்லோ செம்மை
சுற்றமே ஆயினும் குற்றம் பொறாஅர்
நற்றமிழ் பள்ளிக்கே நாளும் உழைத்திடும் 
நம்பள்ளிச் செயலருக்கு சிரம்தாழ்ந்த வணக்கம் 
அகன்ற அறிவோடு அனுபவ நெறியோடு
புகழ்மிகு பள்ளியை பொறுப்புடன் வழிநடத்த
தலைமைப் பொறுப்பேற்ற தஞ்சைச் செல்வமே
ஓங்கு கல்வியோடு ஒழுக்க நெறியையும்
தீங்குஅகல எடுத்துரைக்கும் எனதருமை ஆசான்களே
கலாநிலையப் பெருமையை காசினியில் விதைப்பதற்கு
கடுமையாய் உழைப்பதற்குக் காத்திருக்கும் செல்வங்களே
வள்ளுவன் தமிழால் வணக்கம் கூறுகிறேன்
கோர்ட்டார் நினைவுநாள் கொள்கை மறவன் மறைந்தநாள் அவர் புகழ் பாடி அத்தோடு விட்டு விடும் நாளல்ல இது அவரது கொள்கையை எண்ணத்தில் கொண்டு செயல்பட உருட்டி ஏற்கும் நாளிது அவரது எண்ணம் இதோ

*அனைவரிடத்திலும் அன்பாய் இருத்தல்
*ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்
*இளகிய மனதுடன் ஏழைக்கு உதவுதல்
*ஈகை செய்யவே செல்வம் தேடல்
*உழைப்பைக் காட்டிலும் உயர்ந்த தில்லை
*ஊரின் நன்மைக்கு ஒருப்பட்டு நிற்றல்
*எண்ணமும் ஆடையும் வெள்ளையாய் இருத்தல் 
*எர்த் தொழிலுக்கு இணை  ஏதுமில்லை
*ஐயம் கொண்டால் அனைத்தும் வீண்     
*ஒழுக்கமும் பண்பும் சிறப்பைத் தரும்                                                                                          *ஓதிய கல்வியே உயர்வைத் தரும்                                                                            *ஔவியம்(பொறாமை)பேசாது அனைவரையும் நேசி
இப்பன்னிரண்டு கட்டளைகளை நம் நினைவில் கொண்டு அவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிப்பதே நம் பள்ளித் தந்தைக்குச் செய்யும் நன்றிக்கடனாகும் .இத்திருநாளில் ஐயாவைப் பற்றிப் பேசி செஞ்சோற்றுக் கடன் கழிக்க  வாய்பளித்த தலைவர் அவர்களுக்கு என்நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன் நன்றி வணக்கம். 

 


No comments:

Post a Comment