Monday 11 May 2020

கொங்கு வேளாளக்கவுண்டர் வரலாறு


                                கொங்குவேளாளக் கவுண்டர்களின்  வரலாறு
                                     திருமணச்சீர்கள்
                                       அருமை சீர்
                      கொங்கு மங்களவாழ்த்தின் தொகுப்பு..
கொங்கு வேளாளர் கவுண்டர் என்றுப் பொதுவாக அழைக்கப்படும் கொங்கு கவுண்டர் இனம் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத்(கொங்கு தமிழ்) தாய் மொழியாகக் கொண்ட ஒரு சமுதாயமாகும். தமிழகத்தில் இவர்களை பொதுவாகkdகவுண்டர் சமுதாயம் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர்.

 கொங்குவெள்ளாளக்கவுண்டர் என்ற சொல்லுக்கு நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்பது பொருளென்று புலவர் ராசு கூறுகின்றார்
தென்திசை வேளாளர் அல்லது செந்தலைக் கவுண்டர் அல்லது நாட்டுக் கவுண்டர் என்பது"கங்கா குல" கொங்கு (வேளாள)வெள்ளாளர் கவுண்டர்களைக் குறிக்கும். இவர்களே கொங்கு வேளாளரில் பெரும் பான்மையானவர்கள். கொங்கு வெள்ளாளக்கவுண்டர்கள் இன்று பெருமளவு உழவிலும் தொழிற்றுறையிலும் ஈடுபட்டு வருவதோடு தமிழக அரசியலிலும் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கருர், திண்டுக்கல் மாவட்டங்களில் மேலும் இவர்கள்  சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
                          கவுண்டர்கள் வரலாறு:
கவுண்டர்கள் கரூர் வளநாட்டை ஆண்ட அண்ணமாரைச் சேரர் என வரலாற்று ஆதாரங்களைத் திரட்டி வரும் கே.ராஜா குறிப்பிடுவதால், கவுண்டர்கள் சேரர்களின் வழி வந்தவர்களாக இருந்திருக்கலாம் எனக்  கருதப்படுகிறது. தகடூரை ஆண்ட சத்யபுத்திர அதியமான்கள் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி குறிப்பிடுகிறார். 13ம் நூற்றாண்டில் கொங்குப் பகுதியை ஆட்சி செய்த காளிங்கராயர் எனப்படும் லிங்கைய கவுண்டர், கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் ஆவார்.காளிங்கராயர் ஈரோடு பகுதியில் பாயும் பவானி நதியையும், கோவை பகுதியில் பாயும் நொய்யல் நதியையும் இணைத்து, கொங்கு நாட்டை வளப்படுத்தினார்....
   விஜயநகர அரசிற்கு பிறகு, பதினாறாம் நூற்றாண்டில், தமிழகம் பல்வேறு பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கு தமிழக பகுதியில் பல்வேறு பாளையங்களை கவுண்டர்கள் ஆண்டு வந்திருக்கின்றனர். அவற்றுட் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சமத்தூர் வானவராயர் ( பொள்ளாச்சிபகுதி)*. குமாரமங்கலம் ஜமீன்  திருச்செங்கோடுபகுதி)*. சங்கராண்டாம்பாளையம் வேணானுடையார் ( பழனி தாராபுரம் பகுதி). ஊத்துக்குளி ஜமீன் ( பொள்ளாச்சி_பகுதி). பழையகோட்டை பட்டக்காரர் ( காங்கேயம் பகுதி)*.கொங்கணாபுரம் ஜமீன் (#சங்ககிரி_பகுதி)

🌹சரித்திரவீரர்கள் அண்ணமார் சுவாமி- அண்ணமார் எனப்படும் பொன்னர் - சங்கர் என்ற இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையே அண்ணமார் சுவாமி கதையாகும். பொன்னரும் சங்கரும் எவ்வாறு தங்கள் நாட்டை அமைத்தனர், தங்கள் மாமனின் சதி, எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தனர், தங்கள் நாட்டை காக்க எவ்வாறு போராடினர் என அண்ணமார் சுவாமி கதை விவரிக்கின்றது. தங்கள் நாட்டையும், இனத்தையும் காக்க பொன்னர் - சங்கர் நடத்திய வீரப் போரினைபோற்றும் விதமாக இன்றும் இவர்களை தெய்வமாக கொங்கு வேளாள கவுண்டர்கள் வழிபடுகின்றனர்.

🍀#தீரன்சின்னமலை- இவரது இயற்பெயர் #தீர்த்தகிரிகவுண்டர் என்பதாகும். காங்கேய பகுதி பாளையக்காரரான இவர், இரண்டாவது பாளையப் போரில், பல்வேறு பாளையங்களுக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தார். மைசூர் அரசன் திப்பு சுல்தானுக்கு, தனது படைகளுடன் உதவி புரிந்தார். ஓடாநிலையில் கோட்டை கட்டி, கொங்கு நாட்டை ஆண்டார். 1801ல் காவேரி கரையில் நடந்த போரிலும், 1802ல் ஓடாநிலையில் நடந்த போரிலும்,1804ல் அரச்சலூரில் நடந்த போரிலும், #ஆங்கிலேயரை தோற்கடித்து வெற்றி கொண்டார். பழனி பகுதியில் கொரில்லாப் போர் மேற்கொண்டிருந்த போது, சமையல்காரனால் காட்டி கொடுக்கப்பட்டு, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
 தொடர்ச்சி
அரசியல் செல்வாக்குகொங்கு மண்டல அரசியலில், கவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழக அரசியலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு பெரும் கட்சிகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் பல பேர் கொங்குவேளாளர்கள். தமிழக அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் கொண்ட சாதியினர் இவர்களே.........🌷🌷🌷
இந்திய மத்திய அரசிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில், திமுகவைச் சேர்ந்த ஒரு கொங்கு வேளாளர் அமைச்சராக உள்ளார். கொங்கு வேளாளர் நலனுக்காக தமிழ்நாட்டில் இரு சிறிய கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. 
அவை #ஈஸ்வரன் தலைமையிலான #கொங்குநாடுமுன்னேற்றகழகமும் மற்றும் #உதனியரசு தலைமையில் செயல்படும் #தமிழ்நாடுகொங்குஇளைஞர்பேரவை..

தொழில்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொங்கு மாவட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
#கோயம்புத்தூர், #திண்டுக்கல்,#தர்மபுரி, #ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் போன்ற கொங்கு மாவட்டங்களில் பல்வேறு தொழில்களில் கவுண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் உள்ள பெரும்பாலான நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் கொங்கு வேளாளர்களுக்கு சொந்தமானவை. #நாமக்கல் பகுதியில் லாரி பாடி பில்டிங் தொழிற்கூடங்கள், #கோழிப்பண்ணைகள், #கல்விநிறுவனங்கள் போன்ற தொழில்கள் கொங்கு வேளாளர் கவுண்டர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. #ஈரோடு பகுதியில் #மஞ்சள் உற்ப்பத்தி, #ஜவுளித்துறை, #பின்னலாடை......
மற்றும் கொங்கு மண்டலத்தில்  #ஆட்டோமொபைல் #கனரக_பாகங்கள், மற்றும் மஞ்சள் ஏற்றுமதி போன்ற துறைகளில் கொங்கு வேளாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

🌳சமூக நிலை இந்திய சுதந்திரத்தின் போது கவுண்டர்கள், #முன்னேறியவகுப்பினராக வரையறுக்கப்பட்டிருந்தனர். 1970 களின் ஆரம்பங்களில் மாநாடுகள் நடத்தி, தங்களை #பிற்பட்டவகுப்பினராக வரையறுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அவர்களை பிற்பட்ட வகுப்பினராக அறிவித்தது. கிராமபுறங்களில் இன்னும் கல்லூரி வசதி இல்லாததால், ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கொங்கு வேளாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

🍂🍃பண்பாடு மற்றும் கலாசார பழக்க வழக்கங்கள்குலதெய்வ வழிபாடு, கூட்டம் மற்றும் பங்காளிமுறை கொங்கு வேளாள கவுண்டர்கள் தனது குலத் தொழிலான விவசாயத்தை பெருக்க பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது, ஆகையால் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கை உறவுகள் மாறிவிடாமல் இருக்க அதாவது உறவு மாறி தனது தங்கையை அல்லது அண்ணன் போன்றஉறவு முறை உள்ளவர்களை திருமணம் செய்யாமல் இருக்கவும் உரிய உறவுமுறை அடையாளம் தெரிந்து கொள்வதற்கும் கூட்ட முறையை உருவாக்கினர். இதற்கு தங்களது தந்தையர் பெயரை வைத்தனர். அதாவது செல்லன் கூட்டத்தார் செல்லன் வழிவந்தவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து செல்லன் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் செல்லன் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும்... ஆகவே ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கூட்டத்தை சேர்த்தவர்களே பங்காளிகள் ஆவர். கவுண்டர்கள் மற்ற இனத்தினரைப் போல் பொதுவான தெய்வத்தை மட்டும் வணங்காமல் தாங்கள் எவ்வழி வந்தனரோ - அதாவது தங்கள் ஆதி தாய் தந்தையரை மட்டுமே #குலதெய்வமாக வணங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு குலதெய்வமாகும். இங்கு வருடம் ஒருமுறையேனும், ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து ஆதி தாய் தந்தையரை வணங்குவதுடன் தமது உறவுகளை சந்தித்து செல்கிறார்கள்.

💐திருமண முறைகவுண்டர்களின் திருமணங்கள் விமர்சையாக நடக்கும்.
பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித்திருமணங்களில்காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த '#அருமைப்பெரியவர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். இவரைஅருமைக்காரர்என்றும் அழைப்பர். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப கொங்கு சிவபிராமணர்களையும், குலகுருக்களையும் மங்கிலியம் என்ற தாலிபூட்டும் பொழுது வைப்பதாக கொங்கு மங்கல வாழ்த்திலுள்ளது.கம்பர்வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்தமங்கல வாழ்த்துகொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது.கவிச்சக்கரவர்த்தி கம்பர்கொங்கு வேளாளர்வள்ளல் சடையப்ப கவுண்டரைபெருமிதப்படுத்தும் விதமாககொங்கு மங்கல வாழ்த்தைபாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்அல்லல்வினை எல்லாம் அகலுமே -சொல்லரியதும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்நம்பிக்கை உண்டே நமக்கு.என்று அப்பாடல் தொடங்கும். கொங்கு வேளாளரின் திருமணம் மூன்று நாட்களும், பெண் வீட்டிலும் நடக்கும்.
முதல் நாள் (நாள் விருந்து) - இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள். இரண்டாம் நாள்:(கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்) - இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும்.காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும். ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர். இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப்பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலைநடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர்.

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்...

திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் பயலாள்என்று குறிக்கிறது. திருமணமே ஒருவரை முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது.

தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு  உரியது என்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று நாள் திருமணம் மிக அருகி வருகிறது. நெருங்கிய உறவினரை அழைத்துக் கோயிலில் திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து விடுகின்றனர்.

காதல் மணத்துடன், பெற்றோர் சம்மதத்தோடு நடைபெறும் பிற மத, இன, மொழி, சாதித் திருமணங்கள் பெருகி வருகின்றன. எனவே, திருமணச் சீர்கள் குறைந்தாலும், மறைந்தாலும் சமுதாயப் பண்பாட்டைக் காக்கும் எண்ணத்தோடு சீர்களின் சிறப்புக்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன. இன்னும் விரிவாக இவைகளைப் படத்துடன் ஆவணப்படுத்த வேண்டும். அதற்கு முன் முயற்சியே இச்சீர்கள் பற்றிய தொகுப்பாகும்.

 சீர்கள் தொடக்கம்

சங்க அகப்பொருள் இலக்கணங்களில் கூறப்பெறும் களவுமணத்தில் சீர்கள் இல்லை. தொன்மை ஆய்வாளர்கள் பண்டைச் சமுதாய வாழ்வில் சீர்கள் இல்லை என்றே கூறுகிறார்கள். முல்லை நில ஆயர் மகள் காளையை அடக்கியவனுக்கு மாலையிட்டார். அங்கும் சீர்கட்கு இடம் இல்லை.

முன்பு வாழ்ந்த இல்லற வாழ்வில் நாளடைவில் பொய்’ ‘வழு  இவை தோன்றின. எனவே, சமூகப் பெரியவர்கள் அவை ஏற்படா வண்ணம் பலர் சாட்சியோடு, பலர் கூடிச் செய்யும் சில சீர்களை ஏற்படுத்தினர் என்று கூறுகிறார் தொல்காப்பியர்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப

என்பது தொல்காப்பிய நூற்பா. ஐயர் என்பது சான்றோராகிய பெரியவர்களைக் குறிக்கும். கரணம் என்பது சீர்களாகும்.

திருமண முன் ஏற்பாடு

மணமகன், மணமகளின் பெற்றோர் தங்கள் மக்களுக்குத் திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்வதற்கு ஏற்ப குருபலன்வந்துவிட்டதா? என்று தெரிந்து கொள்வர். முன்பு பெரும்பாலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தில் மணமகன் அத்தை, தாய்மாமன் வீட்டுப் பெண்களையே திருமணம் முடிப்பது வழக்கம். அப்பெண்ணை உரிமைப் பெண்என்று அழைப்பர்.

அந்நாளில் சாதகப் பரிவர்த்தனை நிறுவனங்கள் எதுவும் கிடையாது. மணமகன்-மணமகள் வீட்டாரிடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள இடையில் இருப்பவரை தானாவதிக்காரர்என அழைப்பர். அவர் மூலம் சாதகம் பெற்றுப் பொருத்தம் பார்க்கச் செல்லும் போதே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துச் சகுனம்வழியில் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவர். பூனை குறுக்கே போகக் கூடாது. விறகுக்கட்டு எதிரே வரக்கூடாது. வண்ணான் அழுக்கு மூட்டை எதிர்வருவது, கழுதை கத்துவது நல்லது; பறவை- விலங்கு வலம் போக வேண்டும் என பலவற்றை எதிர்கொண்டு அதன்படி நடப்பர்.

ஒரே குலத்தில் பெண் எடுக்கும் அகமணம்கொங்கு வேளாளரிடை இல்லாத காரணத்தால் முதலில் கூட்டத்தை (குலத்தை) விசாரித்து அறிவர். பொருத்தம் பொருந்தி வந்தால் கூடச் சிலர் குலதெய்வக் கோயிலில் பூவாக்குகேட்டோ அல்லது பல்லி சகுணம்கேட்டோதான் மேற்கொண்டு செயல் செய்யத் தொடங்குவர்.

பல்லியும்  பாங்கொத்து இசைத்தன

நல்எழில் உண்கண ஆடுமால் இடனே

என்று சங்க இலக்கியத்திலேயே சகுணம் பற்றிய குறிப்பு வருகிறது.

 பெண் பார்த்தல்

சாதகம் பொருந்தியவுடன் பெண் பார்க்கும் நிகழ்வை கொங்குச் சமுதாயம் அண்மைக்காலம் வரை வெளிப்படையாகச் செய்வது இல்லை. பத்துப்பேர் கூடிக் சென்று பெண்ணை சிற்றுண்டி, காப்பி கொடுக்கச் செய்து, நடக்கச் செய்து, பாடச் சொல்லிப் பின்னர் பெண் பிடிக்கவில்லை என்று கூறுவதைக் கொங்குச் சமுதாயம் நாகரிகமுடையதாகக கருதவில்லை என்பதே இதற்குக் காரணம் ஆகலாம்.

கோயிலுக்கு அழைத்துச் சென்றோ, கிராமம் ஆயின் தண்ணீர் எடுக்கச் செல்லும்போதோ அல்லது ஏதாவது திருவிழவின்போதோ பெண்ணை செய்யும்போதோ பெண்ணைப் பார்க்குமாறும் செய்வர்.

காட்டுக்குக் களை வெட்டினது போலவும் இருக்கணும்

வீட்டுக்குப் பெண் பார்த்தது போலவும் இருக்கணும்

ஆடு மேச்ச மாதிரி

அண்ணனுக்குப் பெண் பார்த்த மாதிரி

என்ற பழமொழிகளும் இதனை விளக்கும். இருவீட்டார் சம்மதம் ஆனவுடன் அருமைக்காரருக்குச் சொல்லச் செல்வர்.

நிச்சயதார்த்தம்

ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தப் புடவை, நகை, மங்கலப் பொருள்களுடன் மணமகன் வீட்டார் தங்கள் நெருங்கிய சுற்றமுடன் மணமகள் வீடு செல்வர். மாத்து விரிக்கப்பட்ட தரையின் இடையில் மங்கலப் பொருள் முன் அருமைக்காரர் அமர்ந்திருப்பார்.

அவர் முன் எதிர் எதிராக இரு வீட்டாரும் அமர்வர். மணமகன் வீட்டுச் சார்பில் பெண் கேட்க வந்ததாகக் கூறப்படும்.

பெண் வீட்டார் சார்பில் சம்மதம் தெரிவித்தபின் இரு வீட்டாரும் வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வர்.

அருமைக்காரர், பெண் வீட்டு மங்கலப் பெண்களிடம் நீர் விளாவி தூபம் காட்டி மணமகன் வீட்டுத் தட்டத்தைக் கொடுப்பார். மணப்பெண் மணமகன் வீட்டார் கொண்டு வந்த நகையை அணிந்து சேலையை உடுத்தி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி வந்து சபையில் அமர்ந்து எல்லோரையும் கும்பிடுவாள். பெரியவர்களை வணங்குவாள். மணமகன் வீட்டுப் பெண்கள் மணமகளுக்குச் சந்தனம் பூசிப் பூ வைப்பர். முடிவு செய்த திருமணத் தேதியை சபையில் அனைவருக்கும் அறிவிப்பர்.

இப்போது சிலர் மேற்கண்ட நிகழ்வை உறுதிவார்த்தைஎன்று சுருக்கமாக முடித்து விட்டு அழைப்பிதழ் அச்சிட்டு திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர். இது நிச்சய தாம்பூலம்என்றும் கூறப்படும்.

நிச்சயதார்த்தத்தில் திருமண நாள் குறித்து அறிவிப்பது மிக முக்கியம். நிச்சயம் முடிந்து உறுதியாகும்வரை ஒருவர் வீட்டில் மற்றவர் சாப்பிட மாட்டார்கள். உறுதியாகும் வரை கை நனைக்கக் கூடாதுஎன்பர். நிச்சயதார்த்தத்தில் விருந்து உவசாரம் முதலில் நடைபெறுவதால் பருப்புச்சாத விருந்துஎன்றும் அழைப்பர். மங்கல வாழ்த்தில் இந்நிகழ்ச்சி

உரியவர் வந்திருந்து உங்களுக்கு என்று சொல்லி

நாளது குறித்து நல்விருந்து உண்டு

என்று கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்திற்கு மணமகன் செல்வது முன்பு வழக்கம் இல்லை.

மாங்கல்யத்திற்குப் பொன் கொடுத்தல்

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மணமகன் வீட்டார் கொண்டு வந்த மாங்கல்யம் செய்வதற்குரிய தங்கத்தை மங்கலப் பொருள்களோடு அழைக்கப்பட்டுள்ள ஆசாரியாரிடம் கொடுப்பர். சில இடங்களில் ஆசாரியார் அங்கேயே உலை வைத்துப் பணியைத் தொடங்குவதும் உண்டு. ஆசாரியார்க்குப் பால் கொடுத்து அருந்தச் செய்வர். பால் சாப்பிட்ட வீட்டுக்குப் பாதகம் செய்யக் கூடாது என்பது பழமொழி அல்லவா?.

இதனை மங்கல வாழ்த்து பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்துஎன்று கூறுகிறது. கொங்கு வேளாளர் தாலி முப்பிரிவு உடையதாய் நடுவே உயர்ந்திருக்கும். முப்பிரிவு சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்பர். நிச்சயதார்த்தம் முடிந்தபின் இரு வீட்டாரும் அமங்கல நிகழ்ச்சிகட்குச் செல்ல மாட்டார்கள்.

உப்புச் சர்க்கரை மாற்றுதல்

நிச்சயதார்த்தம் முடிந்தபின் சில நாட்களில் இரு வீட்டாரும் கூடைகளுடன் கடைக்குச் சென்று தனித்தனியாக உப்பும், சர்க்கரையும் வாங்கி இருவரும் பரிமாறிக் கொள்வர். நன்மையிலும், தீமையிலும் நாம் இனிமேல் ஒருவருக்கொருவர் பங்கு கொள்ள வேண்டும்என்பது இதன் குறிப்பாகும். உப்பிட்டவரை உள்ளளவும் நினைஎன்பது பழ மொழியல்லவா? இதனை உப்பு சத்தியம்என்றும் சில இடங்களில் அழைப்பர். உப்பு சர்க்கரை வாங்கி வந்து பிள்ளையார் கோயிலிலும் பரிமாறிக் கொள்வது உண்டு.

விறகு வெட்டல்

அருமைக்காரருடன் அருகில் உள்ள காட்டுக்குச் சென்று ஆல், அரசு, பாலை முதலிய பால் உள்ள மரத்திற்குப் பூசை செய்து ஒரு கிளையை வெட்டி மூன்று சிறு கட்டுக்களாகக் கட்டி எடுத்து வந்து வீட்டுக் கூறைமேல் வைப்பர். இதனை எரிக்கப் பயன்படுத்தக்

கூடாது. இதன் பின்னர்தான் சமையலுக்கு வேண்டிய பிற மரங்களை விறகுக்காக வெட்டுவர். பூசை செய்து வெட்டுவது, வெட்டுவதால் மரத்தினிடம் மன்னிப்புக் கேட்பதற்குச் சமம் என்பர்.

நெல் குத்துதல் அல்லது நெல் போடுதல்

 மணமகள் வீட்டில் எழுதிங்கள் செய்த பெண்கள் ஒரு மிடாவில் 5 வள்ளம் நெல்போடுவர். அந்நெல்லை மணமகள் தந்தை வழிப் பெண்கள் வேக வைத்துக் காய வைத்துக் குத்தி அரிசி யாக்கி வைப்பர். இது சீர் அரிசி என்று கூறப்படும்.

கூறைப்புடவை எடுத்தல்

இரு வீட்டுப் பெண்களும் சில ஆடவர்களும், கூட்டமாக ஜவுளிக் கடைக்குச் சென்று மணமகளுக்கு மணமகன் வீட்டுச் செலவில் கூறைப்புடவை எடுப்பர். மணமகனுக்குரிய ஆடைகளை மணமகள் வீட்டார் எடுப்பர். இணைச்சீர், மாமன்மார், கைக்கோர்வைக்காரர் போன்ற சீரோடு தொடர்புடைய அனைவருக்கும் உரியவற்றை எடுப்பர். கூட்டமாகச் செல்லுவது இப்போது குறைந்து விட்டது.

 #திருமண அழைப்பு

முன்பு பனை ஓலையில் திருமண அழைப்பை கணக்கர் அல்லது புலவரைக் கொண்டு எழுதி அதன் மூலம் நேரில் அழைப்பவர்களையும், மங்கலன் (நாவிதர்) மூலம் அழைப்பவர்களையும் அழைப்பர். முக்கியமானவர்களை நேரில் அழைப்பர். இதனை மங்கல வாழ்த்து

கற்றோர் புலவர் கணக்கரை அழைத்து

தேன்பனை ஓலை சிறக்கவே வாரி

திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பி

கலியாண நாளைக் கணித்து அறிவித்தார்

என்று கூறுகிறது.

விருந்து அல்லது சோறாக்கிப் போடுதல்

திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் விருந்து புதுவிதமானது. திருமணத்தன்று திருமண வீட்டார் இருவரும் எல்லோருக்கும் விருந்தளிப்பார்கள். இந்த விருந்து மணமகளின் சகோதரிகளும், சகோதரி முறை ஆகின்றவர்கள் அனைவரும் மணமகன் வீட்டாருக்கும், மணமகளின் அத்தை, மாமன் முறை ஆகின்றவர்கள் மணமகள் வீட்டாருக்கும் அளிக்கும் விருந்தாகும். விருந்தின் எல்லாப் பொருள்களையும் அவர்கள் வாங்கி வருவர்; அல்லது எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்வர். பெரிய கூட்டத்தை ஒருவரே சமாளிக்க முடியாது என்று உறவினர் செய்யும் உதவியாகும். இந்த விருந்தை சோறாக்கிப் போடுதல்என்றும் குறிப்பர்.

பட்டினிச் சாதம்

மேற்கண்ட விருந்தின் போது மணமகன், மணமகள் உண்ணும் உணவை ஒரு சந்திச் சாப்பாடுஎன்று கூறுவர். முகூர்த்தத்திற்கு முன் இந்த ஒரு வேளை உணவே அவர்கட்கு வழங்கப்படும். இதைப் பட்டினிச்சாதம்’ ‘விரத விருந்துஎன்றும் கூறுவர். அவர்கள் விரதத்தின் பயனை அறியவும் திருமண நாளில் வயிற்றுக்கோளாறு எதுவும் ஏற்படாதிருக்கவும் இவ்வழக்கம் அவசியமானதாகும். இந்த நிகழ்விற்குப் பின் அவர்கள் வெளியில் வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தோழனும், தோழியும்

திருமண நாட்களில் மணமகன், மணமகள் இருவரும் தோழன், தோழி பொறுப்பில் இருப்பர். மணமகனின் சகோதரி கணவன்மார்களும், மணப்பெண்ணின் நங்கை, கொழுந்திமார்களும் பெரும் பாலும் தோழன், தோழியாக இருப்பர். மணமகன், மணமகளின் எல்லாத் தேவைகளையும் இவர்களே கவனித்துக் கொள்ளுவார்கள். இது சங்க காலத் தலைவி, தலைவர்மார்களின் பாங்கி, பாங்கன் பாத்திரத்தை நினைவூட்டுகிறது.

முகூர்த்தக்கால் போடுதல்

திருமண நாளின் முதல் நிகழ்ச்சி முகூர்த்தக்கால் போடுவதாகும். அருமைக்காரருடன் மூன்று பேர் சென்று பால்மரமான ஆல், அரசு, பாலை, பாச்சான் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றுக்குப் பூசை செய்து முக்கவர் (கிளை) உள்ள சிறு கொம்பை வெட்டி வந்து தோலைச்சீவி மஞ்சள் பூசி வைத்திருப்பர். அதை மணப்பந்தலில் நீர் மூலை அல்லது ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கில் பந்தல்காலில் ஆண்களும், பெண்களுகமாக ஐந்து அல்லது ஏழுபேர் பிடித்துக் கொள்ள மஞ்சள் தோய்ந்த துணியில் நவதானியத்தைக் கட்டி அருமைக்காரர் பால் வார்த்துப் பூசை செய்து கட்டுவார்கள்.

 படைக்காலம் வைத்தல்

முன்பே வெற்றிலை பாக்கு வாங்கி உறுதி பெற்று மண் பாண்டங்கள் செயது குயவர் திருமண வீட்டு முற்றத்தில் கொண்டு வந்து வைப்பார். மதுக்கரைப் பட்டயம் மிடா 4, தண்ணீர்ச்சால் 1, பெரிய சால் 2, தண்ணீக்குடம் 4, தாளி 4, கரிச்சட்டி 4, உரிச்சட்டி4, நெய்க்கலயம் 2, பெரிய தடச்சட்டி 1, தண்ணீர்க் கலயம் 4 என்று கூறுகிறது.

குருவர்கட்கு 2 வள்ள அரிசி, 1 வள்ளம் பருப்பு, 8 வட்டுக் கருப்பட்டி, 1/2 படி நெய், 1 பணம் அளிக்க வேண்டும்.

மடைக்கயப் பானைப் பொங்கலுக்கும் தேவையான மண்பாத்திரமும் அளிப்பர். சுண்ணாம்பு, செஞ்சாயம் பூசி அலங்கரிக்கப்பட்ட அவை எழுத்துப்பானைஎனப்படும்.

ஆசாரிமார்களும் தேவையான இரும்புப் பாத்திரம், கருவிகள் கொடுப்பர். இவை படைக்காலம் வைத்தல் எனப்படும்.

பிறைமண் எடுத்தல் பேய்க் கரும்பு நாட்டல்

குலதெய்வக் கோயிலுக்குச் சென்று புற்றுமண் கொண்டு வர இயலாது ஆகையால் அருகில் உள்ள புற்றுக்கு அருமைக்காரருடன் சென்று பால்வார்த்ததுப் பூசை செய்து மூன்று கூடைகளில் மண் எடுத்து வருவர். மங்கலன் ஆகிய குடிமகன் கல்நீக்கி மேடை போல அமைப்பான். அதில் பச்சை மூங்கிலையும் பேய்க்கரும்பு என அழைக்கப்படும் வேர்க்கரும்பினையும் நடுவான். அரசு இலையும் நவதானிய முடிச்சும் கட்டி அதற்குப் பூசை செய்வர். இது மண மேடையில் அமைக்கப்படும்.

நாற்சதுர மேடை படைப்புக் கடவுளாகிய நான்முகனைக் குறிக்கும் என்பர். அதனால் இதனை பிரமத்தானம் அல்லது பிரம்மாவை எழுந்தருளச் செய்தல் என்பது பொருளாகும். கரும்பு வான் பயிர் எனக்குறிக்கப்பெறும் நன்செய்ப் பயிர்களில் முக்கியமானது, இனிமையுடையது.

ஒரு காலத்தில் கொங்கு மன்னன் அதியமான கரும்புப் பயிரைத் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தினான் என்பது புறநானூற்றுச் செய்தி. அது மட்டுமல்ல கரும்பு மன்மதனின் வில்லாகவும் பயன்படுகிறத
 அது மட்டுமல்ல கரும்பு மன்மதனின் வில்லாகவும் பயன்படுகிறது என்பர். இதற்காகவே கரும்பு நடப்படுகிறது.

மங்கல வாழ்த்து, ‘பேய்க்கரும்பை நாட்டிப் பிறை மண்ணும் தான்போட்டுஎன்று கூறுகிறது. புற்று வணக்கத்திற்கு உரியது மாரியம்மன் தோற்றத்திலும் புற்று இடம் பெறுகிறது. வால்மீகி புற்றிலிருந்து வெளிப்பட்டார் என்பது வரலாறு. சில இடங்களில் சிவ பெருமான் புற்றிடங்கொண்டீசுவரர் என அழைக்கப்படுகிறார்.

காப்புக் கட்டுதல்

மணமகனுக்கும், மணமகளுக்கும் காம்பு இல்லாத சிறு விறலி மஞ்சளை மஞ்சள் தோய்த்த நூலில் இணைத்து அருமைக்காரர் மண மகனுக்கு வலக்கையிலும், மணமகளுக்கு இடக்கையிலும் கட்டுவார். எந்த இடையூறு ஏற்படினும் மண நிகழ்வை இனிதே முடிப்பேன் என்பதற்காகவும், ஏற்படும் இன்னல்களிலிருந்து பாதுகாப்புக்காகவும் காப்புக் கட்டப்படுகிறது. மங்கல நாண் பூட்டிய பின்னரே இவை அவிழ்க்கப்பெறும். காப்புடன் கங்கணம் கனமதாய்க் கட்டிஎன்பது மங்கல வாழ்த்துத் தொடர். முங்கையில் கடிகை நூல் கட்டுதல்என்று நெடுநல்வாடையில் காப்புக் கட்டுதல் குறிக்கப்படுகிறது. மஞ்சள் கிருமி நாசினியாகும்.

சீர்த்தண்ணீர் கொண்டு வருதல்

எழுதிங்கள் சீர் முடித்த பெண்களோ அல்லது சுமங்கலிப் பெண்களோ ஐந்து அல்லது ஏழுபேர் குடங்களுடன் அருமைக்காரரை வணங்கித் தாம்பூலம் பெற்றுக் குடங்களுடன் பெண் வீட்டின் அருகில் உள் நீர்நிலைக்கு மேள தாத்துடன் சென்று சீர்த்தண்ணீர் கொண்டு வரச் செல்வர். தண்ணீர்க் குடங்களைப் பிள்ளையார் கோயிலில் வைத்து பூசை செய்து நடைபாவாடையில் நடந்து வீட்டுக்கு எடுத்து வருவர்.

அத்தண்ணீரைக் கொண்டு முகூர்த்த நெல்லைக் குத்திய அரிசியைச் சமைத்து மணமக்களுக்கு அளிப்பர். மீதித் தண்ணீரைச் சீருக்குப் பயன்படுத்துவர். மணமகன் இல்லத்துப் பெண்களே சீர்த் தண்ணீர் கொண்டு வரும் சடங்கைச் செயவதால் பெண்வீட்டுத் தண்ணீருக்குப் போகுதல்என்றும் இது அழைக்கப்பெறும். பெண் வீட்டு நீர் நிலையை அறிந்து கொள்வதும், புதிய தண்ணீரைப் பயன்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கலாம்.

 மங்கலன் முகம் துடைத்தல்

அருமைக்காரர் பூசை செய்து கொடுத்த பாலைப் பெற்றுக் கொண்டு நாவிதர் மணமகனை முக்காலியில் அமர வைத்து முகச் சவரம் செய்வார். மணமகன் வீட்டு நாவிதர் செய்யும் இந்தச் சடங்கைப் பிரமச்சரியம் கழித்தல் என்று கூறுவர். இதன் பின்னர் மணமகன் உப்பில் பல் துலக்குவார். இதனை மங்கலவாழ்த்து தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்து அரும்பு மீசையை அழகுற ஒதுக்கிஎன்று கூறுகிறது.

ஆக்கை சுற்றிப் போடுதல்

ஆக்கை என்பது புளிய மரத்து விளார். மூன்று ஆக்கைகளைக் கொண்டு வந்து இரண்டிரண்டாகப் பிளப்பர். பிளந்த ஆக்கையின் முனையை இருவர் பிடித்துக் கொள்ள இடையில் மணமகனை கிழக்கு நோக்கி நிறுத்துவர். அந்த இரண்டு ஆக்கைகளையும் சீர் செய்யும் பெண் தலையைச் சுற்றி எறிவார். மூன்றாவது ஆக்கையை மணமகன் காலடியில் போட்டு மிதித்து நிற்பார். இச்சீரை ஆக்கை சுற்றிப் போடுதல்என்று கூறுவர்.

ஆக்கையின் இடையில் மணமகனை நிறுத்துவது இனி அவர் ஒரு கட்டுக்கோப்புக்குள் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும். புளிய மரத்து விளார் மிக உறுதியானதாகும். பிடித்தாலும் புளியங் கொம்பாகப் பிடித்தார்என்பது பழமொழி. அதனால், உருதியாக இருக்க வேண்டும் என்பதனையும் குறிப்பதாகலாம். ஆககையைத் தாண்டச் செய்வதும் உண்டு.

செஞ்சோறு அஞ்சடை கழித்தல்

குளிக்கும் போது முக்காலியில் அமர்ந்துள்ள மாப்பிள்ளைக்கு செஞ்சோறு அஞ்சடை கழிக்கும் சீரைச் செய்வது. சுண்ணாம்பு, மஞ்சள் கலந்துள்ள சோற்றைப் பிசைந்து, நாவிதன் ஐந்து அல்லது ஏழு உருண்டைகளாகச் செய்து வைத்திருப்பான். சீர்க்காரப் பெண் அதனை வாங்கி மணமகன் தலை, இரு தோள், இரு பாதம் ஆகிய ஐந்து இடங்களில் வைத்து நிறைநாழியில் உள்ள தார்க்கருது மூலம் எடுத்து எறிவாள். இது திருஷ்டி கழிப்பதாகும். மங்கல வாழ்த்து செஞ்சோறு அஞ்சடையும் சிரமதைச் சுற்றி திட்டிக் கழித்து சிவசூரியனைத் தொழுது என்று கூறுகிறது. மணமகளுக்கும் இவ்வாறு செய்வர்.

 உருமால் கட்டுதல்

நீராடல் முடிந்த மணமகனுக்குத் தாய்மாமன் புத்தாடைகள் கொடுப்பதுடன் தலையில் உருமால் குஞ்சம் விட்டுக் கட்டி விடுவார். மோதிரம், சங்கிலி போன்ற அணிகலன்கள் ஏதேனும் கொடுப்பார். மணமகன் வேறு இடத்தில் பெண் எடுத்தாலும் தாய் மாமனின் உறவைக் காட்ட இச்சீர் செய்யப்படுகிறது எனலாம்.

கோயில் மாலை பெறுதல்

மணமகனின் காணி ஊரைச் சேர்ந்த சிவங்கோயில், பெருமாள் கோயில், குலதெய்வக் கோயில், பிற கோயில்கள் ஆகியவற்றில் அர்ச்சகர்களான சிவாச்சாரியார்களும், பண்டாரங்களும், பிற பூசாரிகளும் அந்தந்தக் கோயிலுக்குரிய மாலையைக் கொண்டு வந்து அளிப்பர். காணித் தெய்வங்கள் அனைத்தும் மணமக்களை வாழ்த்துகின்றன என்பது இதன் அடையாளமாகும்.

குப்பாரி கொட்டல்

மணமகன் தான் மணமகளை மணக்கப்போகும் செய்தியை ஊரார் அனைவரும் அறிய முழ்ங்கும் கருவிகளாகிய பெரிய மேளம், தப்பட்டை ஆகியவற்றைக் கொட்டி அறிவித்தல் குப்பாரி கொட்டல் எனப்படும். இந்நிகழ்ச்சிக்கு இலக்கியச் சான்றுகளும் உண்டு. குலதேவதையை வணங்கி இச்சீர் செய்வர். மங்கல வாழ்த்து குப்பாரி கொட்டிக் குலதேவதையைத் தான் அழைத்துஎன்று கூறுகிறது.

நிறைநாழி

ஒரு இரும்பு வட்டப் படியில் நிறைய நெல்லை நிரப்பி தக்கிளி போன்ற ஒரு கம்பியில் வெண்மையான நூலைச் சுற்றி வட்டப்படியில் உள்ள நெல்லில் குத்தி வைத்திருப்பர். அநேகமாக எல்லாச் சீர்களிலும் சீர்க்காரிப் பெண் அதை எடுத்து மணமக்களின் தலையை மூன்று முறை சுற்றுவாள். அவ்வப்போது செய்யும் நிறைநாழிச் சீரில் நெல் மாற்றப்படும்.

நெல் வட்டப்படியில் நிறைந்திருப்பது போல் அவர்கள் வாழ்வு நிறைவாக இருக்க வேண்டும் என்பதும். கதிரும், நூலும் இரண்டறக் கலந்து சுற்றியிருப்பது போல் மணமக்களும் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதும் அதன் கருத்தாகும். நீர்மை பொருந்த நிறைநாழி வைத்துஎன்று மங்கல வாழ்த்துக் கூறுகிறது.

 கணபதி வணக்கம்

பல சீர்களின் தொடக்கத்தில் விநாயகரை வழிபட்டுச் சீரைத் தொடங்குவர். மஞ்சள் பொடியில் பிள்ளையாரைப் பிடித்து அருகம் புல்லையோ அல்லது மலரையோ சூட்டினால் அங்கு விநாயகர் எழுந்தருளிவிடுவார். சில சந்தர்ப்பங்களில் மஞ்சளுக்குப் பதிலாகப் பசுஞ்சாணத்தைப் பயன்படுத்துவதும் உண்டு. இதனை மங்கல வாழ்த்து சாணாங்கி கொண்டு தரைதனை மெழுகி கணபதி தன்னைக் கருத்துடன் நாட்டி அறுகது சூட்டிஎன்று கூறுகிறது.

குலதெய்வ வழிபாடு

குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது இயலாது. குல தெய்வக் கோயில் தூரமாக இருக்கலாம். அதற்காகக் குழவிக் கல்லை ஓரிடத்தில் வைது நீர் வார்த்து வெற்றிலை வைத்துக் கட்டி விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து குல தெய்வமாக வழிபடுவர். மங்கல வாழ்த்திலும் இது இடம் பெற்றுள்ளது.

நாட்டுக்கல் வழிபாடு

திருமணச் சீர்களில் நாட்டுக்கல் வழிபாடு என்பது மிக முக்கியமான சீராகும். மேளதாளம் முழ்ங்க மணமகனும், மணமகளும் தனித்தனியாக நாட்டுக் கல்லுக்கு வழிபட வருவர். கொங்கு 24 நாடுகளின் தலைவர்கள் நாட்டார்எனப்படுவர். திருமணத்திற்கு அவர்கட்கு அழைப்பு அனுப்பப் பெறும். ஆனால், நாட்டார் எல்லாத் திருமணங்கட்கும் வர இயலாது.

எனவே, திருமண வீட்டின் அருகில் சாலையில் ஒரு கல்லை நட்டு மஞ்சள் பூசிய நூலில் வெற்றிலையைக் கட்டுவர். அந்தக் கல்லில் 24 நாட்டார்களும் எழுந்தருளிருப்பதாக ஐதீகம். மணமகனும், மணமகளும் மேள தாளத்துடன் அங்கு வந்து வழிபடுவர். நாட்டார் கல்லுக்கு வழிபாடு நடத்தி மணமக்களுக்கும் ஆலாத்தி சுற்றி அதைப் பாதகத்தின் அருகில் ஊற்றுவர். எனவே, 24 நாட்டார் வழிபாடே நாட்டுக்கல் வழிபாடு என்பர். இது ஒரு கருத்து.

வேறு சிலர் நாட்டுக்கல் வழிபாட்டுக்கு வேறு காரணமும் கூறுகின்றனர். நடுகல் அல்லது வீரக்கல் (Hero Stone) என்பதை இப்போது நினைவுக்கல் என்று கூறுகின்றனர். அக்கல் பெரும்பாலும் வீதி ஓரங்களில்தான் நடப்பட்டிருக்கும்.

நடுகல் வழிபாட்டுக்கு உரியது. நடுகல் வழிபாடு மட்டுமே தமிழநாட்டில் முன்பு இருந்தது என்று இலக்கியம் கூறுகிறது.

 தெய்வம் இல்லை
என்பது புறநானூற்றுத் தொடர்களாகும். நடுகல் வழிபாடு முன்னோர் வழிபாடு. வள்ளுவர் உபசரிக்க வேண்டியவர்களைக் கூறும்போது தென்புலத்தார்என்று முன்னோர்களைத்தான் முதலாவதாகக் கூறுகிறார். எனவே, மணமக்கள் தங்கள் முன்னோர்களை நடுகல் வடிவில் வழிபடுகின்றனர். அதுவே நாட்டுக்கல் வழிபாடாகும். உயிர்ரோடு இருப்பவர்கட்குக் கல் நடுவது வழக்கம் இல்லை. ஆதலால் இது 24 நாட்டார் கல் அல்ல. முன்னோர் வழிபாடான நடுகல் வழிபாடு என்று கூறுவர்.

வெற்றிலை கட்டுதல்

மணப்பந்தலில் அருமைக்காரர் அமர்ந்துள்ள நிலையில் அவர் முன் மணமகன் வீட்டார் அமர்ந்திருப்பர். அருமைக்காரர் முன் முக்காலி ஒன்று போடப்பட்டிருக்கும். அதன்மீது போடப்படும் வண்ணான் மாத்தில் வெற்றிலை 15 கட்டு, 4 படிபாக்கு, தேங்காய் ஐந்து, பழம் ஒரு சீப்பும் வைத்துக் கட்டுவார். அதனோடு கூறைப் புடவை, கண்ணாடி, சீப்பு, பூ, சந்தனம், எலுமிச்சம்பழம், விரலி மஞ்சள் உள்ள கட்டையும் வைத்துக் கட்டுவார். நிறை செம்பில் நீர் இருக்கும். பூசை செய்வார்.

மேற்கண்டவைகள் அடங்கிய மூட்டையை மேள தாளத்தோடு விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு செய்து கொண்டு வருவர். அருமைக்காரர் ஐந்து பேருடன் அவைகளை மணமகள் வீட்டுக்கு எடுத்துச் செல்வார். அருமைக்காரர் இரு வீட்டாருக்கும் வெற்றிலை, பாக்கு அளிப்பார். மூட்டையை அவிழ்த்துச் சரிபார்த்து மீண்டும் கட்டுவார். அப்போது முகூர்த்த நேரம் அறிவிக்கப்படும்.

வெற்றிலைக் கட்டும், மூட்டையும் இணைத்துக் கூறப்புடவை, நகை ஆகியவைகளும் இணைத்துக் கட்டப்படும். சீருக்குப்பின் வெற்றிலை கட்டிய முட்டையைப் பெண் வீட்டார் பெறுவர். நகை அணிவிக்கக் கொண்டு வந்த மாப்பிள்ளை வீட்டாருக்குப் புதுக் கலங்களில் விருந்தளிப்பர். தாம்பூலம் அளிப்பார். பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான் அனுப்பி அன்பாக வெற்றிலை அடைவாகத் தான் கொடுத்தார்என்று மங்கல வாழ்த்துக் கூறுகிறது. புதுக்கலம் என்பது பூதக்கலம்என ஆகிவிட்டது என்பர்.                       


 இணைச்சீர்

திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது இணைச்சீர்என்பதாகும். இணை உடுத்துதல்என்றும் கூறுவர். திருமணத்திற்கு இணையான சீர் என்றும், மணமகனுக்கும், மணமகன் சகோதரிக்கும் இணைப்பை உறுதிப்படுத்தும் சீர் என்றும், மணமகன், மணமகளோரு இணைவதற்குச் சகோதரி அனுமதியளிக்கும் சீர் என்றும் பலவாறாகக் கருதலாம்.

சில இடங்களில் மணமகன் அமரும் இருக்கையில் சகோதரி முன்னர் வந்து அமர்ந்து கொள்வார். உனக்குப் பிறக்கும் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக உறுதியளித்தால் தான் உனக்கு இடம் கொடுப்பேன்என்பாள். மணமகன் உறுதியளித்தவுடன் எழுந்து மணமகன் அமர இடம் கொடுப்பாள்.

திருமணப் பந்தலின் ஒரு பகுதியில் மணவறை போலவே அலங்கரிக்கப்பட்ட இடத்தில் மாப்பிள்ளை அலங்காரத்துடன் மணமகன் வந்து அமர்வார். மணமகனின் சகோதரிக்கு மணப்பென் போலவே அலங்காரம் செய்து அழைத்து வருவர். பேழை ஒன்றைச் சகோதரி சுமந்து வருவாள். அதில், கூறைப்புடவை, வெற்றிலை பாக்கு, மஞ்சள், தேங்காய், பழம், கண்ணாடி, சீப்பு ஆகியன இருக்கும். இடக்கை பேழையைப் பிடித்துக் கொண்டிருக்க வலக்கையில் ஒரு செம்பு நீர் எடுத்து வருவாள். மணமகனையும், மண அறையையும் சுற்றி வந்து பேழையை மணமகனுக்கு வலப்புறம் வைப்பாள். பேழையில் உள்ள பொருள்கலை அகற்றி அதனுள் சகோதரியை நிறுத்துவர்.  பேழையில் இருந்த கூறைப் புடவையில் இணைப்பவுன்அல்லது தன் சக்திக்கு ஏற்றதை சகோதரி முடிந்து வைத்திருப்பாள்.

இணைச்சீர் மண அறையில் மண் கலசத்தின்மேல்  தேங்காய் வெற்றிலை பாக்கு வைத்து அதன் முன் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பர். நவதானிய முளைப்பாரியும், அணையா விளக்கும் இருக்கும். பிள்ளையாருக்கு முன் தட்டில் அரிசி நிரப்பி அதன்மேல் வெற்றிலை பாக்கும், வெல்லமும் வைக்கப்பட்டிருக்கும். அருமைக்காரர் மணமகனின் சகோதரிக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து அதனை மடியில் கட்டச் சொல்வார். பின் கூறைப்புடவையைக் கொசுவமாக மடித்து ஒரு முனையை மணமகன் கககத்திலும் மறுமுனையைச் சகோதரி கையிலும் கொடுப்பார்.

அருமைக்காரர் மணமகனின் கையை அரிசியில் பதிய வைப்பார். விநாயகருக்குப் பூசை செய்து அரிசியை அள்ளி வெற்றிலையில் வைத்து நாவிதரிடம் கொடுத்து மங்கல வாழ்த்து இசைக்கக் கூறுவார். அருமைக்காரர் பிள்ளையார், மணமகன், சகோதரி ஆகியோருக்கு அருகு மணம் எடுத்துபின் பேழையைத் தலையில் வைத்துத் திருமண வீட்டுக்கு அனுப்பி வைப்பார். இணைச்சீர் பற்றி மங்கல வாழ்த்தி விரிவாகக் கூறுகிறது. ஆடையாபரணம் அழகுபெறத் தான்பூண்டு கூறை மடித்து வைத்தார் குணமுள்ள தங்கையரும் பிறந்தவரைச் சுற்றிப் பேழை மூடி சுமந்து இந்திரனார் தங்கை இணையோங்க வந்த பின்பு பின்னே ஒரு தரம் பிறந்தவர்க்கு இணையோங்கி மின்னனையார் முன்னே விநாயகர்க்கு இணையோங்கிஎன்பது மங்கல வாழ்த்து.

மணமகன்- சகோதரி தொடர்பு திருமணத்தால் குறையாது; சீர்வரிசையில் சம பங்கு அளிப்பேன் என்பதைக் குறிக்கவே இணைச் சீர் செய்யப்படுகிறது. பெண்ணுக்குச் சம உரிமை இல்லாத அந்தக் காலத்திலேயே கொங்கு வேளாளர்கள் பெண்களுக்குச் சம உரிமை கொடுத்தனர். ஆணிற்கு இணையாகப் பெண்ணுக்கும் உரிமையுண்டு என்பதை உணர்த்தும் சடங்கே சட்ட விதியே இணைச்சீர் எனலாம்.

 தாயுடன் உண்ணல்

முன்பு இணைச்சீர் வரை அனைத்துச் சீர்களும் மணமகன் இல்லத்திலேயே நடைபெறும். பின் திருமணத்திற்கு வேண்டிய பொருள்களுடன் தன் உறவினர், குடிபடையுடன் மணமகன் மணமகள் இல்லம் செல்வார். இப்படிச் செல்வதைக் கட்டிலேற்றிச் செல்லுதல்என்பர். அப்படிச் செல்லும் மணமகன் தாயுடன் ஒரே கலத்தில் உணவு உண்பார். மணமகளை மணம் முடிக்கச் செல்ல மணமகனுக்குத் தாயார் அனுமதியளித்து பூங்கொடிக்கு மாலையிடப் போய்வா மகனேஎன்று அனுப்பி வைப்பாள். தாயார் கட்டளை ஏற்றுச் செல்லல்என்பது கட்டிலேற்றிச் செல்லல்என மாறிவிட்டது. தாயோடு உண்ணலைத் தயிர்ச் சோறு உண்ணல்என்றும், தாயார் கையால் உண்ணும் கடைசி உணவு என்றும் சிலர் கூறுவர்.

மாதாவுடனே மகனாரும் வந்திருந்து

போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தி

என்று மங்கல வாழ்த்துக் கூறுகிறது.

கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை

திருமாங்கல்யம், கூறைப்புடவை, பிற அணிகலங்கள், நெல், அரிசி, பழம், வெல்லம், தேங்காய், வெற்றிலைபாக்கு, விளக்கெண்ணெய், நெய், எலுமிச்சம்பழம், விறலி, மஞ்சள், சீப்பு, கண்ணாடி, பொட்டு, குங்குமம், திருநீறு, சந்தனம், பூக்கள் இவை போன்ற திருமணத்திற்கு இன்றியமையாமல் வேண்டப்படுகின்ற அனைத்துப் பொருள்களையும் ஒரு கூடையில் வைத்து மணமகன் இல்லத்தார் மணமகள் இல்லத்திற்கு நாவிதர் தலையில் வைத்து எடுத்து வருவர். இவர்கள் அனைவரும் மணமகள் இல்லத்திற்கு அருகேயுள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். அவர்கள் கொண்டு வந்த திருமணப் பொருள்கள் அடங்கிய கூரைக்கு நாழியரிசிக் கூடைஎன்று பெயர். மணமகள் வீட்டார் எதிர்கொண்டு வரவேற்பர். நாட்டில் உள்ள சீர் சிறப்பு நாங்கள் கொண்டு வந்தோம் என்று நாழியரிசிக் கூடை நன்றாக முன் அனுப்பியதாகமங்கல வாழ்த்துக் கூறும்.

விடுதி வீடு

மணமகன் வீட்டார் தங்கள் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் உறவினருடன் சென்று அவர்களை வரவேற்று அழைத்து வருவர். முக்கியமானவர்கள் தாம்பூலதைப் பரிமாறிக் கொள்வர். மணமகனையும் அவர்கள் சுற்றத் தாரையும் தனி வீட்டில் தங்க வைப்பர். அவ்வீட்டுக்கு விடுதி வீடு என்று பெயர். ஊர்வலமாக ஒழுக்காய் வந்து விநோதம் பொருந்தும் விடுதியில் இறங்கினார்என்பது மங்கல வாழ்த்துத் தொடராகும் மங்கல நாண் பூட்டும் திருமணத்தின் முக்கிய நிகழ்வுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்.

 பால் பழம் சாப்பிடுதல்

முகூர்த்தத்திற்கு முன்னர் பெண்ணின் மாமன்மார்களையும், மாமன் முறையுடைய மற்றவர்களையும் அழைத்து புத்தாடை கொடுத்து விபூதி சந்தனம் அணியச் செய்து மாலை போட்டு மரியாதை செய்வர். மாமா முறையுடைய அனைவரும் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர் என்பதை இது குறிக்கும். சக்கரை கலந்த பாலில் பழம் போட்டுப் பிசைந்து கொடுப்பது பழைய வழக்கம்.

பட்டம் கட்டுதல்

தாய் மாமன் மணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும். இதுவரை குமரிப் பெண்ணாக இருந்தவள் இனி கணவனோடு சேர்ந்து வாழ்ந்து இல்லறம் நடத்துவதற்கு உரிமை உடையவள் என்பதைக் குறிக்கும்.

தாய் மாமனை அழைத்து சந்தோஷ்ம் ஓங்கிடவே பொட்டிட்டு பொன் முடித்துப் போதவே அலங்கரித்து பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தான் அறியஎன்பது மங்கல வாழ்த்துத் தொடர். அரசர் அரசியர்க்குப் பட்டம் கட்டுவது போல் இல்வாழ்வு அரசிக்குச் சூட்டும் பட்டம் இதுவேயாகும்.

பெண்ணெடுத்தல்

பால், பழம் சாப்பிட்டு பட்டம் கட்டியபின் மணமகளைப் பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்று மணவறைக்கு அழைத்துச் செல்லும் உரிமை மாமன்மார்களுக்குரியது. முன்பு மணப்பெண்ணை மாமன் தோளில் அமரச் செய்து தூக்கிக்கொண்டு செல்லுதல் வழக்கமாக இருந்தது. பல சீர்கள் நின்று அல்லது குறைந்து விட்டது போல் இதுவும் நின்று விட்டது. இப்போது, ஒருவர் குடை பிடிக்க மற்றவர்கள் நடந்து மணமகளை அழைத்துச் செல்வர். மணவறையைச் சுற்றி வருவர். பெண்ணை மாப்பிள்ளைக்கு வலப்புறம் நிறுத்துவர்.

மாமன் எடுத்து மணவறையைச் சுற்றி வந்து மகிழ்ச்சி மீதூர வலமதாய் நிறுத்திஎன்பது மங்கல வாழ்த்துத் தொடர்.

மணமேல் பணம்

மணவறைக்கு மாப்பிள்ளை வரும் வரையில் அவர் அமரும் இடத்தில் முறை மாப்பிள்ளை அமர்வார். அவருக்கு மணமகள் வீட்டார் பணம் தருவர். மாமனுக்குப் பெண்ணைக் கொடுப்பதற்குப் பதிலாகப் பொன்னைக் கொடுப்பது என்பது இதன் அடையாளமாகும். கொங்கு வேளாளர் திருமணச் சீர்களைத் தொகுத்து எழுதிய ஒரு நாளிதழ் இதற்குக் கொடுத்த தலைப்பு முறை மாப்பிள்ளைக்கு முதல் மரியாதைஎன்பதாகும்.

                            கவுண்டர் வரலாறு அருமைக்காரர்

நிச்சயதார்த்தம், முகூர்த்தக்கால் போடுதல், வெற்றிலை கட்டல், இணைச்சீர், மாங்கல்ய தாரணம் செய்வித்தல் போன்ற முக்கியமான சீர்கள் அனைத்தையும் முன்னின்று செய்பவர் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த அருமைக்காரர் ஆவார். முன்பு வைதிகத் திருமணம் கொங்கு வேளாளர் மரபில் இல்லை. சமூகப் பெரியவரே சீர்கள் செய்து மணம் செய்விப்பார்’.

எல்லோரும் அருமை செய்ய முடியாது. அருமைக்காரர் ஆவதற்குரிய சீரை அவர் முதலில் செய்து கொள்ள வேண்டும். அருமை செய்து அருமைக்காரர் ஆக விரும்புபவர் மகப்பேறு உடையவராகவும், மனைவியுடன் வாழ்பவராகவும் இருக்க வேண்டும். அவர் தன்னுடைய மகன் அல்லது மகள் திருமணத்தில் அருமை செய்து கொள்ளலாம்.

நெருங்கிய உறவினர்கட்கு முதலில் தன் அருமை செய்து கொள்வதை அறிவிக்க வேண்டும். பின்னர், தன் மககள் திருமணத்திற்கு மூன்று அருமைக்காரர்களை அழைக்க வேண்டும். பிறைமண் எடுத்து வர மூன்று அருமைக்காரர்களும் செல்ல வேண்டும். நீராடிப் புத்தாடை அணிந்து விநாயகரைத் தொழுது பின்னர் மாங்கல்யம் திருப்பூட்டும் போது மற்ற அருமைக்காரர்கள் அருமை செய்த பின் இருவரும் அருமை செய்ய வேண்டும். அப்பொழுதிலிருந்து அவர் அருமைக்காரர் என அழைக்கப் பெறுவார். அருமைக்காரர் மனைவியை அருமைக்காரிஎன்பர். அவரை அருமைப் பெரியவர்என மங்கல வாழ்த்துக் கூறும்.

மற்ற சீர்களில் பங்கு பெறும் பெண்கள் பெரும்பாலும் எழுதிங்கள் சீர் செய்து கொண்டவர்களாகவும், சுமங்கலிகளாகவும், மக்கட்பேறு உடையவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் எழுதிங்கள்காரிகள்என்றே அழைக்கப்பெறுவர்.

                       மண அறை

கிழக்கு நோக்கி சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து மண மக்கள் அமரும் வண்ணம் அமைக்கப் பெற்றிருக்கும். பசுமையான தென்னங்கீற்றாலும், மாவிலைத் தோரணங்களாலும், மலர்களாலும் மணவறை அமைக்கப் பெற்றிருக்கும். மேல்புறம் மணமக்கள் அமர பலகை அல்லது இருக்கை போடப்பட்டிருக்கும். பிறை மண்ணால் பிரம்மஸ்தானம் அமைத்து பேய்க்கரும்பு நாட்டப்பட்டிருக்கும் பச்சை மூங்கில் நட்டு அரசிலை சுற்றப்பட்டிருக்கும்.

இரண்டு கரகப்பானைகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் நீரும், மற்றொன்றில் நெல்லும் நிரம்பியிருக்கும் கரகப் பானைகள் மேல் மாவிலை, வெற்றிலை, தேங்காய் வைக்கப்பட்டிருக்கும். குத்து விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். ஆயிரப் பெருந்திரி ஏற்றப்பட்டிருக்கும். நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டிருக்கும். கை கோர்வைக்காக அரிசித் தட்டும் அதன்மீது வெற்றிலையும், வெல்லமும் வைக்கப்பட்டிருக்கும்.
 ஒரு தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம் பழம் வைக்கப்பட்டு அதன் மீது தாலி வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பிள்ளையார் வைக்கப்பட்டிருப்பார். அருகு மணம் எடுக்கப் பாலும் வெற்றிலையும் ஒரு புறம் இருக்கும்.

மண அறையை மங்கல வாழ்த்து பின் வருமாறு வருணிக்கிறது. மாந்துளிரும் பூங்கொத்தும் வண்ணமுள்ள பட்டாடை மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்கும் கட்டியுள்ள அருமையான பந்தலிலே பூவால் அலங்கரித்து நாற்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டு அம்மி வலமாக அரசாணி முன்பாக ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாக சுத்தமுடன் கலம் விளக்கிச் சோறு, அரிசி, பால், பழமும் பக்தியுடன் அத்தனையும் பாரித்தார் மணவறையில்என்பன மங்கல வாழ்த்துத் தொடர்கள்.

மணமக்கள் வருகை

மணமகன் வரும்போது மணமகள் சகோதரி முறைப் பெண்கள் மணமகனுக்கு ஆலாத்தி எடுப்பர். மணமகன் மணவறையைச் சுற்றி வந்து அமர்வார். மணமகளை மாமன்மார் அழைத்து வந்து மாப்பிள்ளைக்கு வலப்பக்கம் அமர வைப்பர். மணமகன் அருகே மாப்பிள்ளைத் தோழரும், மணப்பெண் அருகே தோழியும் இருப்பர். எல்லோரையும் கும்பிட்டு மண அறையில் மணமக்கள் அமர்வர்.

பாத பூசை

மணமகனும், மணமகளும் தங்கள் பெற்றோர்கட்குப் பாத பூசை செய்வர். பாதங்களை நீர் தெளித்துக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வழிபடுவர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்என்பது தமிழ் நாட்டுப் பழமொழியாகும்.

தாரை வார்த்தல்

மணமகனின் வலது கைமேல் மணப்பெண்ணின் இடது கையை வைத்து ஒரு பணம் வைத்துப் பெண்ணின் பெற்றோர் தன் உறவினர்கள் முன்னிலையில் தன் கையால் தண்ணீர் விட்டுத் தாரை வார்ப்பார்கள். பெண் வீட்டார் கொடுத்தோம் என்று சொல்ல மணமகன் வீட்டார் கொண்டோம் என்று சொல்லுவார்கள். இனி மணமகள் பாதுகாப்பு மணமகனுடையதே என்பதை அறிவிக்க நடக்கும் சடங்காகும். தாரை வார்க்கும் நீரில் பொன் வைத்து வழக்கம். தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன் கொடுத்துஎன்கிறது மங்கல வாழ்த்து.

 திருப்பூட்டுதல்

தாலி வைக்கப்பட்டிருக்கும் தட்டின் ஓரத்தில் சூடம் கொளுத்தப்படும். அருமைக்காரர் விநாயகரை வணங்கித் தட்டை வாங்கி மணமக்களை வணங்கச் செய்து அந்தத் தட்டைப் பண்டாரத்திடம் கொடுப்பார். பண்டாரம் அவையில் உள்ள அனைவருக்கும் தட்டைக் காட்டுவார் எல்லோரும் வணங்கி ஆசீர்வதிப்பர். முகூர்த்த வேளை நெருங்கினால் தட்டை மணவறை அருகே உயர்த்திக் காட்ட எல்லோரும் இருந்த இடத்திலிருந்தே ஆசீர்வதிப்பர்.

கைதாரை செய்தல்
மணவறையில் திருமண நிகழ்ச்சி நடப்பதைக் கைதாரை செய்தல்என மங்கல வாழ்த்து அழைக்கிறது. தாலி அணிதலை திருநாண் பூட்டல் என்பர்.

பண்டாரத்திடம் உள்ள தட்டிலிருந்து அருமைக்காரர் தாலியை எடுப்பார். எடுத்து கிழக்கு நோக்கி நின்று சூரியனை அல்லது சூரியன் உள்ள திசையில், வணங்குவார். பெண்ணைக் கிழக்கு முகமாகவும், மணமகனை மேற்கு முகமாகவும் நிறுத்தி மாங்கல்ய தாரணம் செய்விருப்பார். மாங்கல்யத்திற்குச் சந்தனம் குங்குமம் வைக்கப்படும்.

மாங்கல்யம் திருப்பூட்டும்போது சகல வாத்தியம் முழங்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அட்சதை எனப்படும் மஞ்சள் தோய்ந்த அரிசியை வாழ்த்துக் கூறி மணமக்கள் மீது போடுவர். (அட்சதையை மணமக்கள் அருகில் சென்று அவர்கள் மீது படும்படி போடுவதே முறையானதாகும்).

விரல் கோர்வை

திருநாண் பூட்டுதல் முடிந்த பின் மணமகனது வலதுகைச் சுண்டு விரலையும், மணமகளது இடதுகைச் சுண்டு விரலையும் இணைத்து இருவர் கையையும் பட்டுத் துணியால் சுற்றி மண அறையைச் சுற்றி வரச் செய்வர். இப்போது இணையும் கைகள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சிலப்பதிகாரம் காதலர்ப் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்என்று கூறும். சுண்டு விரலில் தான் இதய நாடி ஓடுகிறது என்பர். இரு இதயங்களும் ஒன்றுபட்டன என்பது இதன் பொருள். பின் மண மக்கள் மாலை மாற்றிக் கொள்வர்.

நலங்கிடல்

பிற சமூகம் போல் நலங்குப் பாடல்கள் பாடுவது கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை. வெற்றிலையில் குங்குமத்தை வைத்துக் குழைத்து மணமகன் மணமகள் ஒருவர் பிறருக்குப் பொட்டு வைப்பது தான் நலங்கிடல் எனப்படுகிறது. மங்கல வாழ்த்து செங்கையினாலே சிகப்பிட்டு இருவருக்கும்என்று கூறும்.

குலம் கோதுதல்

இன்ன குலத்தைச் சேர்ந்த இன்னாருடைய பேரன் இன்னாரது மகன் இன்ன குலத்தை சேர்ந்த இன்னாரது பேத்தி இன்னாரது மகளை உங்கள் முன்னிலையில் சூரியர் சந்திரர் சாட்சியாக முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாம நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் சாட்சியாக மணம் முடித்துக் கொண்டனர் என்பதே குலம் கோதுதல் ஆகும். குலம் ஓதுதல்தான் கோதுதலாக மாறிவிட்டது என்பர்.

 அம்மி மிதித்து அருந்ததி காட்டல்

அம்மியைக் கழுவிச் சுத்தம் செய்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வைத்திருப்பர். மணமகள் தன் வலது பாதக் கட்டை விரலை அம்மியில் வைப்பாள். பின் சாலில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் தன் முகத்தைப் பார்ப்பாள். அம்மி போல் உறுதியாகக் கற்புத் தன்மையைக் காப்பேன் என்பது இதன் பொருள்.

அருந்ததி சப்தரிஷிகளில் ஒருவராகிய வசிட்டர் மனைவி. மும்மூர்த்திகளும் அவள் கற்புத் தன்மையைச் சோதித்தும் நிலை குலையாது இருந்தவள். தன் கணவன் ஐயப்பட நட்சத்திர பதம் பெற்று சப்தரிஷி மணடலத்தின் இடையில் உள்ள வசிட்ட நட்சத்திரத்தின் அருகிலேயே இருக்கும் பேறு பெற்றாள். அருந்ததி பார்ப்பது என் கணவனைப் பிரியாமல் இருப்பேன் என்று மணமகள் உறுதி ஏற்பதாகும். அருந்ததியை வடமீன் என்பர். எப்பொழுதும் அது வடக்கிலேயே இருக்கும். துருவ நட்சித்திரம் என்னும் வடமீன் கடல்பயண மாலுமிகட்கு வழிகாட்டியாக இருப்பது.

வடமீன்போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்

வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை

அம்கண் உலகின் அருந்ததி அன்னாளைஎனக் கலித்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது.



அருகு மணம்

மண அறையில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீரில் உள்ள வெற்றிலையையும், அருகம்புல்லையும் எடுத்துக் கிள்ளி அருமைக்காரர் மணமகனுக்கும், மணமகளுக்கும் பாதம், தோள், தலை இவற்றில் கையை நிறுத்தி மூன்று முறை ஆராதனை செய்வார். இதற்கு அருகு மணம்என்று பெயர்.

பரியம் செலுத்தல்

மணமகன் சார்பில் மணமகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு தொகை பரியம் ஆகும். 37 1/2 ரூபாய், 47 1/2 ரூபாய் என ஊருக்கு ஊர் பலவாறு வேறுபடும். சில இடங்களில் பணத்தோடு அரிசியும் கொடுக்கப்படும். மணமகளுக்குப் பொருள் கொடுத்தே முன்பு திருமணம் நடைபெற்றது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

மஞ்சள் துணியில் கட்டிக் கொடுக்கப்படும்  பணத்தை முக்காலி வேல் வைத்து எண்ணிப் பார்த்து எவ்வளவு என்று அறிவித்து மணமகள் வீட்டுச் சீர்க்காரப் பெண்ணிடம் இதைக் கொடுக்க அவர் வாங்கிச் சென்று தண்ணீர் நிறைந்துள்ள சாலின் மீது வைத்து மணமகள் வீட்டாரிடம் கொடுப்பர்.

பெண்ணை இவ்வளவு நாள் செலவு செய்து வளர்த்தமைக்காகப் பெண் வீட்டாருக்குக் கொடுக்கும் தொகை என்றும், மணமகளைத் தொடுவதற்காகக் கொடுக்கும் ஸ்பரிசத் தொகை பரியம்என மாறி விட்டதென்றும் கூறுவர். அகப்பொருள் இலக்கியங்களில் இது முலைவிலைஎன்று கூறப்படுகிறது. பரிசுஎன்றும் கூறலாம்.

                      கவுண்டர் பாத அணி அணிதல்

மணமக்கள் மண வீட்டின் வாயிலில் வந்து பண்ணையத்து மாதிகன் எனக் கூறப்படும் மாதாரி அளிக்கும் பாத அணிகளை (செருப்பு) அணிவர். அவருக்கு மனம் குளிரப் பணமும், பொருள்களும் கொடுப்பர். பாத அணிகள் கடையில் வாங்கினாலும் அவரிடம் கொடுத்தே அணிவர். கடை நிலையில் உள்ளாரும் திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என்பது இதன் பொருள்.

புலவர் பால் சாப்பிடுதல்

காணிப்புலவருக்கு விருந்தளித்து அதன் பின் மணவீட்டார் தாங்கள் உண்ணும் வெங்கலவட்டிலில் பாலும், பழமும் கலந்து கொடுத்து உண்ணச் செய்வர். புலவருகக்கு தலை, தோள், இடுப்புக்கு 3 ஆடை அளிப்பர். புலவர் பால் சாப்பிடாத வீடு மதிப்புக் குறைந்த வீடாகக் கருதப்படும்.

              கவுண்டர் சடங்குகள் 
            கரகம் இறக்குதல்

இணைச்சீர் நடைபெற்ற இடத்திலும், மண அறையிலும் இருந்த கரகங்களை எடுத்து மூடியைத் திறந்து தாம்பூலம் வைத்து மணப் பெண் வீட்டுக்குக் கொண்டு செல்வர். தண்ணீரைக் கூறைமேல் ஊற்றுவர். நெல் உள்ள கரகத்தை உறியில் வைப்பர்.

பின் மணமக்களின் கங்கணங்கள் அவிழ்க்கப் பெறும் அதைக் கூறைமேல் எறிவர் அல்லது பாலில் போடுவர்.

பந்தல் களறிச் செலவு

திருமண ஏற்பாடுகளில் கலந்து கொண்ட அத்துணை குடிபடைகட்கும் தொழிலாளிகட்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப உரிய தொகையை ஒவ்வொருவராக அழைத்து அருமைக்காரரே மணப்பந்தலில் வழங்குவார். பந்தல் போட்டவர், மேளகாரர், நாவிதர், பண்டாரம், பூசாரி, வண்ணார், பறையர், சக்கிலி, மாலைக்காரர், குயவர், ஆசாரி, புலவர், மாணிக்கத்தி என எல்லோருக்கும் பணம் வழங்கப்படும். இதனோடு ஊப்பணமும் வழங்கப் பெறும். அது பழைய கால் ரூபாலய் (25 பைசா) தான். உரிமையோடு அதைப் பெறுவர்.

சட்டுவச்சாதம் கலக்கல்

மணமகனுக்கு மணமகள் அளிக்கும் முதல் உணவாகும். கையில் போடாமல்  இரும்புக் கரண்டி, சட்டுவம் போன்றதாலும் (தோசை திருப்பி போன்றது) அன்னக் கரண்டியாலும் போடுவதால் இப்பெயர் பெற்றது.

பின்னர் மணமகன் விட்டுக்குப் பெண்ணை முதலில் மணமகன் வீட்டார் அழைத்துச் செல்வர். பெண்ணுடன் அவள் தம்பி செல்வர். பின் பெண் கூட்டி வர மணமகள் வீட்டார் செல்வர். மாலையில் பெண் வீட்டுப் பிள்ளையார் கோயில் புதுப்பாத்திரத்தில் மணப்பெண் பொங்கல் வைப்பார். இது மடைக்கலப் பானைப் பொங்கல்எனப்படும்.

 சம்பந்தம் கலக்கல்

திருமணக் கூட்டத்தில் நெருங்கிய உணவினர்களை அறிமுகம் செய்து வைத்து நேரம் இருக்காது. திருமணம் முடிந்து  இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கட்கு மட்டும் விருந்தளிக்கப்படும். இது சம்பந்தம் கலக்குதல்எனப்படும்.

 கவுண்டர் வரலாறு
தொடர் நிகழ்வுகள்

குலதெய்வக் கோயில்கட்கும், உள்ளூர் கோயில்கட்கும் கல்யாணப்படிஎன்ற பெயரில் மணமக்களோடு சென்று பூசை செய்து வழிபடுவர். பெண்ணெடுக்கி மாமன்மார்கட்கு விருந்து வைக்க அவர்கள் இல்லங்கட்குச் செல்வர். இணைச்சீர் செய்த சகோதரிக்கு இல்லம் சென்று சிறப்புச் செய்வர். பின் மணமகனுக்கு மணமகன் வீட்டிலும், மணமகளுக்கு மணமகன் வீட்டிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவர்.

சாந்தி முகூர்த்தம் என்பதைப் பிறருக்கு அறிவித்தி விமரிசையாகச் செய்வது கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை.

பல சமூகத்தாரும் திருமணச் சீர்களில் பங்கு பெறுவது கொங்கு வேளாளர் சமூக ஒற்றுமைக்கும், பல குடிமக்களை அவர்கள் கொடை கொடுத்துப் பாதுகாக்கும் தன்மைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

திருமண வீட்டில் முன்பு மங்கல வாழ்த்துக்குப் பின் புலவரால் கம்பர் பாடிய வாழி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் ஆகியவை படிக்கப்பட்டது. கொங்கு வேளாளர் திருமணங்கள் இலக்கிய மேடையாகத் திகழ்ந்தன.

 கொங்கு வேளாளர் திருமண இல்லங்களில் சிறப்பிக்கப்பெறும் பதினெட்டுக் குடியினர்.

தொண்டைமண் டலவரிசை நாலாறு கோட்டமும்

சோழநாள் முதலாகவே

சொல்பெரிய நாவிதன் குயவன் வண்ணான் ஓலை

சொன்னபடி எழுதும்உவச்சன்

கண்டதொரு கண்ணாளர் ஐவர் வாணியர் மூவர்

கந்தமணி மாலைகாரன்

கலைமீது சரடோட்டு பாணணும் தலைக்குளம்

காவலாகிய வலைஞனும்

பண்டுமுதலாய் ஊரார்க்குக் கண்டுமே உரைத்திடும்

பறையனொடு பள்ளனுடனே

பதினெண்பேர் மணவறையில் மாகாணம் அளவுபோய்

பணிசெய்து பகரும்முறையால்

கொண்டிடும் பரிவட்டம் கட்டியே மிகவாகை

கூறும் வேளாளருக்குக்

குலவயம் தன்னிலே கச்சி ஏகம்பர்தன்

குமுதத்தில் இட்டவரியே.

-பழம்பாடல்.

                      எழுதிங்கள்சீர்
கொங்கு  இனத்தில், பெண்ணிற்குப் பெண்பிள்ளை பிறந்து, அந்த குழந்தை பெரியவளாகி ருதுவாவதற்கு முன் அப்பெண்ணிற்கு அவள் தகப்பன்-தாய் வீட்டீல் செய்யும் சீர்தான் எழுதிங்கள்சீர். கொங்கு  இனத்தில் இது ஒரு திருமண நிகழ்ச்சி போல் நடைபெரும். திருமணம் போல அனைத்து சொந்தகாரர்களையும் நேரில் சென்று அழைப்பர். குறித்த நல்ல நாளில் மாலை நல்ல நேரத்தில் உறவினர்சூழ அருமைக்காரர் முகூர்த்தகால் நடுவார். பின்வரும் சடங்குகள் எழுதிங்கள்சீர் பாட்டாக

    கற்பு குலையாத காராள வம்சம்
    வேற்பு குலையாத வேளாளர் வம்சம்
    காப்பு குலையாத கவுண்டர்கள் வம்சம்
    காராள குலதிலகர் கவுண்டர்கள் வம்சம்
    கொங்கு  கவுண்டர்கள் வம்சம்
    ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி
    பட்டி மரவு
    எலந்த மரம் குடை மரவு
    நுகம்
    கொலுவு
    குழவி லிங்கம்
    உரல் லிங்கம்
    அம்மி
    நிறைக்குடம்
    புடைச்சட்டி
    வாணைச்சட்டி
    பிறந்தான் பிறந்த மணைக்கு எழுதிங்கள்சீர் செய்ய பிறந்தாளை ஊரிலிருந்து அழைத்துவர
    புது துணி எடுத்து விரத விருந்து வைத்து
    வெள்ளைமாத்தில் எழுகுடம் வைக்க எழுதிங்கள்காரிகள் அருமைக்காரருடன் ஏழு கிணற்றிலிருந்து சீர்தண்ணீர் கொண்டு வந்து
    வெள்ளைமாத்தில் வைத்து, கங்கணம் கட்டி, மூன்று முறை அரிசி போட்டு  கணபதி பூசை செய்து
    உரல், நுகம் அம்மி குழவி புடைச்சட்டி வாணைச்சட்டி பூசை செய்து
    பாலக்கால் வெட்டி வந்து முகூர்த்தகால் நட்டு
    வாசல் தொளித்து வண்ண கோலமிட்டு செம்மண் சுண்ணாம்பினால் சீராக கரைகட்டி
    எழுதிங்கள்காரிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து
    ஐந்துபடி திணை மாவில் நீர்விட்டு நன்றாகப் பிசைந்து, இருகூராக்கி, இடையில் ஆச்சுவெல்லமிட்டு மாவால் நன்கு மூடி, ஆரச இலையிலிட்டு,
    மூன்று படி தண்ணீர் விடு, குறுக்கே குச்சி வைத்து, கோதை மாவை மூழ்காமல் புதுப் புடைச்சட்டில் வைத்து
    பிறந்தான் புடைச்சட்டியை எடுத்து அடுப்பில் வைத்து, கோதைமாவை வேகவிட
    எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, அரூமை பெரியவர் அருகுமணம் எடுக்க
    எழுதிங்கள்காரியை மரஉரல் முன் நிறுத்தி, எலந்தமுள் குடையை உடன்பிறந்தான் தான் பிடிக்க
    நல்ல நாவிதன் கொழுமுனையை காய்ச்சி, எழுதிங்கள்காரி முன்வைத்து சுட சுட மோர்விட
    எழுதிங்கள்காரி உரலை உதைத்து தள்ளி வீட்டினுள் சென்று அமர
    நங்கை கொழுந்தியாள் குழவிகல் எடுத்து வந்து எழுதிங்கள்காரியின் மடியிலிட
    எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, பட்டிமாவு பந்தலில் நுகத்தருகே ஒருசிந்திவிட (விரத விருந்து வைத்தல்)
    வீட்டு வாசல் நிலவுமேல் பேழை கூடையில் கோதைமாவை வைக்க, கோடாரியில் துணி சுற்றி அறுமை பெரியவருடன் சீர்காரி கோதையை பிளக்க, சீர் வெல்லம் குழையாமல் முழுதாக இருக்க நல்லதென்பார்.
    பின், சீர்காரி படி சாதம் பானையில் சமைத்து உறவினற்கு பரிமாறி, கோதை மாவுடன் ஒருசிந்திவிட்டு (விரத விருந்து வைத்தல்) கணபதி பூசை செய்து பெரியவரை வணங்கியதுடன் எழுதிங்கள் சீர் இனிதே முடிந்தது.

எழுதிங்கள் சீருக்காகும் செலவுகள் அனைத்தும் தாய் வீட்டாரே செய்வர். சீர்காரியின் சகோதரன் பணமுடுப்பு, நகை மற்றும் சீர்குடையில் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றலை, பாக்கு, பட்டுபுடவை வைத்து பிறந்தான் ஏடுத்துவர ஊர்பிள்ளையரை வணங்கி சீருடன் கணவன் வீடு செல்வாள்.
கொங்குவேள்ளாளர்களில் எழுதிங்கம் செய்துகொண்ட பெண்கள்தான் சுபகாரிங்களில் முன் நிற்பார்கள். அப்பெண் அருமைகாரருடன் நல்லகாரியாங்களில் சீர்-சடங்கு செய்யும் தகுதியை பெறுகிறாள். இதனால் அவள் முழுச்சுமங்கலியாகிறாள். படித்தலில் பிடித்தது புலவர் ஆ.காளியப்பன் 9788552993