Monday 29 April 2019

தொல்காப்பியத்தில் சிரிப்பு


                           தொல்காப்பியத்தில் சிரிப்பு
                  எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
                தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (தொல்.பொருள்.பொருளியல்1168)                  
எல்லா உயிர்க்கும் இன்பம் தேவைப்படுகிறது .பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல் முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவான அகத்தெழுச்சி உணர்வுகள்.சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள். இவற்றில் நிறைவுறும் போது இன்பம் தோன்றும் அந்த இன்பமே மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
 ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகைகளில்  இன்பம் கிடைக்கிறது ஆனாலும் அந்த இன்பம் அறத்தின் வழிப்பட்டதாக இருக்கவேண்டும்.அதனால்தான் வள்ளுவரும் அறத்தான் வருவதே இன்பம் என்றார்  இன்பம் வரும்போது மகிழ்ச்சியாய் இருப்பதை சிரிப்பால் வெளிக்காட்டுகிறான். ஒவ்வொரு உயிரினமும் மகிழ்ச்சியை விதவிதமாக  வெளிப்படத்தி வந்துள்ளன. மனிதனே எல்லா உயிரினும் மேம்பட்டவன் அவனிடமே ஐம்பொறி அறிவோடு மனம் என்னும் ஆறாவது அறிவு உள்ளது. அவனே பண்புடையவன். சிரிப்பு என்பது பண்புடையவர்கள் செயல், என்பதாலே  பண்புடைமை அதிகாரத்தில்
நகல்வல்லர் அல்லார்க்ககு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள் (பண்புடைமை999)  என்னும் குறளை வள்ளுவர் கூறியுள்ளார்  .இதன்பொருள்.சிரிக்கத் தெரியாதவனுக்கு இந்தப் பெரிய உலகத்தில் பகற்பொழுது கூட இருட்டாகவே இருக்கும் என்பதாகும்.
பூமியில் வாழும் எந்த உயிரனங்களுக்கும் கொடுக்காமல், மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்திருக்கும் விலைமதிக்க முடியாத மிக உயர்ந்த வரம் சிரிப்பு. சிரிப்பு தான் மனித சமூகத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து. மொழி, சாதி, சமயம், ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரே மொழி சிரிப்பு மட்டும்தான். வார்த்தைகளற்ற மொழிகளான அன்பு, மௌனம், காதல் என்று நீளும் பட்டியலில் சிரிப்புக்கும் சிறப்பான ஓர் இடம் உண்டு. சிரிப்பு மொழிக்கு முன்னதாக மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் அகில உலகத்துக்கும் பொதுவான மொழி சிரிப்பு சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கு, மனிதன்தான்.  பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு     
                  சிரிப்பு நம்மிடம் இருக்கும்  போது அழுக்காறு, அவை, வெகுளி, இன்னாச்சொல் என்னும் நான்கும் இல்லாமல் போய்விடுகின்றன.. சிரிப்பு உலகை ஆளும் உன்னத சக்தி; மனதை மயக்கும் மந்திர சக்தி; அனைவரையும் கவரும் அற்புத சக்தி; ஒவ்வொருவரையும் நீண்ட நாள் வாழவைக்கும் நிரந்தர சக்தி; பூட்டிக் கிடக்கின்ற வாழ்க்கையைத் திறக்கின்ற மந்திரச்சாவி சிரிப்பு மட்டும்தான்.
     'வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது. சிரிப்பு சத்தம் கேட்கும் பொழுதில் அது திறந்து கொள்கிறது' என்பார் கவிஞர் வைரமுத்து. 'நகைச்சுவை உணர்வு என்னிடம் இல்லை என்றால், நான் எப்போதே தற்கொலை செய்திருப்பேன்' என்றார் காந்தியடிகள்.  
'
சிரித்து  வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னம்பிக்கையை ஊட்டியவர் சினிமாப் பாடலாசிரியர் புலமைபித்தன். கலைவாணர், சிரிப்பு - இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு கறுப்பா - வெளுப்பா என்பதை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடி சிரிப்பு களைப்பை நீக்கி, கவலையைப் போக்கி,மூளைக்கு தரும் சுறுசுறுப்பு  இதை துணையாகக் கொள்ளும் மக்களின் முகத்தில் துலங்கிடும் தனிச்செழிப்பு”'என்றார் உலகையே தனது அற்புத நடிப்பாற்றலால் சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் கூட, தனது பேட்டியில், ' உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது எனக்கு எப்போதாவது அழவேண்டிய சூழ்நிலை வந்தால், மழையில் நனையும் போதுதான் அழுவேன். ஏனென்றால் மழையில் நனையும்போது அழுதால் யாருக்கும் தெரியாது' என்பார்.
     

     மனிதன் எப்போதும் கடுமையான செய்திகளைப் படிக்கவும் சிந்திக்கவும் விரும்புவதில்லை. சில தகவல்களை நகைச்சுவையோடு பார்க்கவும் படிக்கவும் விரும்புகிறான். அதனாலேயே சிரிப்புகள் சிரிக்க மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைக்கின்ற வகையில் எழுதும் எழுத்தாளர்கள் நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். உலகிலையே மிகவும் கடினமாகக் கருதப்படும் செயல் மற்றவர்களைச் சிரிக்க வைப்பதுதான் சொற்பொழிவுகளில் சில சொற்பொழிவாளர்கள் நகைச்சுவையான செய்திகளைச் சொல்வதுண்டு. நகைச்சுவை சொற்பொழிவாளர்களில் திருமுருக கிருபானந்த வாரியார் முக்கியமானவர் ஆவார்.                                                                                                    
      அக்காலத்தில் அரசவையில் சிரிக்க வைக்க விதூடகன் ஒருவரை வைத்திருப்பர். சமசுகிருத நாடகங்கள் எல்லாவற்றிலும் (விதூஷகன்) என்ற நகைச் சுவை நடிகர் இருப்பார். முதல் காட்சியே சூத்ரதாரர் என்னும் நகைச் சுவை நடிகருடந்தான் தோன்றும். சர்க்கஸ் என்னும் சாகஸ விளையாட்டில் கூட கோமாளி என்னும் சிரிப்பு உண்டாக்க ஒருவர் இருப்பார்.ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டால், நகைச்சுவை பகுதி என்பது மிகவும் முக்கியமானதாக ஒன்றானதாக உள்ளது. மக்களை சிரிக்க வைப்பதற்ககாக, நகைச்சுவை நடிகர்கள் தங்களின் முழு படைப்பாற்றலையும் பயன்படுத்துகின்றனர்.. சிரிப்பின் அருமையை மனிதன் உணராமல் இல்லை. அப்படி ஓரளவாவது உணர்ந்திருப்பதால்தான், நகைச்சுவைக்கென தனிப்பட்டத் தொலைக்காட்சிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன.. சிரிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவமும் மகத்துவமும் இருக்கின்றபடியால் சிரிப்பின் இன்றியமையாமையைக் குறிக்கவே வள்ளுவரும்  16 குறள்களில் சிரிப்பு, நகைப்பு பற்றிப் பாடி இருக்கிறார். அக்காலத். திருக்குறள் முதல் இக்காலப் புலனம் வரை அனைத்தும் அழுத்தமாகச் சொல்வது இதைத்தான் இதிலிருந்து தமிழர் வாழ்வில் சிரிப்பு எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருந்தது என்பது தெரியும்.              
    சிரிப்புஎன்றால்என்ன?                                                                                                 
                  
                                                                                                      சிரிப்பு (Laughter) என்பது  மனிதனோடு கூடப்பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு. "சிரிப்பு" என்பது பல வித ஒலிகளுடன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதாகும், இது ஓர் ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று.. ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியை அவர் மனமே தீர்மானிக்கிறது. அந்த மனம் பக்குவப்பட, மனம் லேசாக நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடை தான் சிரிப்பு நவரசங்களில்(ஒன்பான் சுவை) ஒன்றான நகைச்சுவை, ஒருவராலோ அல்லது குழுவினராலோ மேற்கொள்ளப்படும் சொல், செயல், காட்சி, நினைவூட்டல் மூலம் நகைச்சுவை உணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைப் பெருக்குகிறது. சிரிப்பு என்பது மாந்தர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் காணப்படுகிறது. ஒவ்வொரு உயிரினமும் சிரிப்பை விதவிதமாக வெளிப்படத்தி வந்துள்ளன. குறிப்பாக, மனிதர்கள் தங்களது மகிழ்ச்சியை புன்னகையாகவும், புன்முறுவலாகவும், முகமலர்ச்சியாகவும், இன்முகம் காட்டியும் தெரிவிக்கிறார்கள்.இதில் அன்பு கலந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் ஓர் உணர்ச்சியின் வடிவமே நமக்கு உதட்டில் புன்னகையாக வெளிப்படுகிறது. ஒருவருக்கு மகிழ்ச்சி வந்தால் சிரிப்பு அல்லது புன்சிரிப்பு மூலம்தான்  வெளியிட வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனந்தக் கண்ணீர் மூலமும் அதை வெளிப்படுத்தலாம். தினமும் கொஞ்ச நேரம் குழந்தைகள் மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400 தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள்என்று ஒரு புள்ளி விவரம்கூறுகிறது..நகைச்சுவை ஆற்றலை குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிறந்த 16 மாதங்களிலேயே கற்றுக் கொள்கின்றனர்                             
      அன்பின் தொடக்கப் புள்ளி ஒரு புன்னகையில்தான் ஆரம்பிக்கிறது. புன்னகை  என்பது எந்தவிதமான ஓசையையும் செய்யாமல் உள்ளத்தில்  ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்கும் ஒர் உணர்ச்சியின் வெளிப்பாடாகும்.
உலகம் முழுதும் உள்ள மக்கள், புன்னகை என்பதனை, மனத்தில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படத்தும் ஒரு சாதனமாகவே கருதுகிறார்கள். மனதில் உள்ள மகிழ்ச்சியானது புன்னகையின் வடிவில் தானாகவே வெளிவருகிறது. சில சமயம் புன்னகையானது கண்களிலும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. புன்னகை வருவதற்கு முக்கிய காரணம் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியே. மனிதர்கள் பொன்நகையினால் தங்கள் முகங்களை அலங்கரிப்பதைக் காட்டிலும் புன்னகையினால் அலங்கரித்தல் சிறந்தது. ஒருவர் மற்றவரைப் பார்த்து புன்னகைக்கும் போது அடுத்தவர் முகத்தில் ஓர் ஒளியைப் பிரதிபலிக்கிறது. அஃது ஒளியாய் பரவித்  துக்கமென்னும் இருளை நொடியில் நீக்கக்கூடியது. சிரிப்பெனும் ஒளியைச் சிதறச் செய்து உலகை உன்னதமாக்குகிறது.                                                        
   வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது முதுமொழி  நகைச்சுவையை கூறும் போதோ அல்லது கேட்டபோதோ வாய்விட்டுச் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படையாகக் காட்டுவதாகும்" சிலர் பற்கள் வெளியே தெரியும்படி சிரித்து தெரியப்படுத்துவர் இதனையே நகைப்பு என்பர்.                                           
    சிரிப்பு அசட்டுச்சிரிப்பு, ஆணவச்சிரிப்பு, ஏளனச்சிரிப்பு, சாகசச்சிரிப்பு, நையாண்டிச் சிரிப்பு புன்சிரிப்பு (புன்னகை) எனப்பல வகைப்படும் சிரிப்பு, புன்சிரிப்பு ஆகிய இரண்டும் நல்ல பொருளிலும் நகைப்புஎன்பது கெட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப் போனால் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இடத்தைப் பொறுத்தே வேறுபாடு வருகிறது. ஆகவே நகைப்பும் சிரிப்பும் கூட இடத்துக்குத் தக்க பொருளை மாற்றும் வல்லமை வாய்ந்தன.ஆனால் புன்சிரிப்பு, குறைகளுக்கு அப்பாற்பட்டது. எப்போதும் நற்பொருளைப் பெற்றது.
        நாம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும், ஒரே நிமிடத்தில் கோபப்பட வைத்துவிடலாம். ஆனால், அந்த நபரை ஒரே நிமிடத்திற்குள் சிரிக்க வைக்க முடியாது. அதுதான் கோபத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ள பெரிய வித்தியாசம். எனவே நகைப்பின் எதிரியே சினந்தான். சிரிப்புக்கு நேர் எதிரானது கோபம். கொஞ்சமே கொஞ்சம் சரியான கோபம் தவறு அல்ல. ஆனால், எங்கே, எப்படி, எந்த அளவில், யாரிடம், எப்போது, எங்ஙனம்... என அலகுகள் தெரியாமல் காட்டப்படும் கோபம், கோபப்படுபவனைத்தான் அழிக்கும்எனச் சொன்னவர் அரிஸ்டாட்டில். திருவள்ளுவரும்
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமாப் புணையைச் சுடும் என்றார். மிகுதியான கோபம் வந்தால், குருதிக்கொதிப்பு எகிறி வாயைக் கோணவைக்கும் பக்கவாதம், வாழ்வையே கோணலாக்கும் மாரடைப்பு போன்றவை வர வழிவகுக்கும்.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.(குறள்304) வாய்விட்டுச் சிரிக்கும் நகையையும் உள்ளத்தாற் சிரிக்கும் உவகையும் சினம் கொன்று விடும் இந்த நிலை மாற, குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க, வீடுதோறும் புன்னகை என்ற செடியை நட்டு, மகிழ்ச்சி என்ற தண்ணீர்   இதயங்களுக்குள் பாய்ச்சி, கவலை என்ற களையை வேரோடு பிடுங்கி, சந்தோஷம் என்ற மலரை மலரச்செய்தால் இல்லம் சொர்க்கமாகும். உள்ளம் கோவிலாகும்-
                          சிரிப்பே சிறந்த மருந்து   
     எந்த பக்க விளைவுகளும் இல்லாத போதை மருந்து சிரிப்பு. மகிழ்ச்சியை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருவது சிரிப்பு சிரிப்பின் நீளம் எவ்வளவோ - அந்தளவு ஆயுளின் நீளம் என்பார்கள் "இடுக்கண் வருங்கால் நகுக" (குறள் 621), எனும் குறள் துன்பங்களைக் களையும் மருந்தாக நகைச்சுவை உணர்வு மேலோங்கியிருத்தலை உணர்த்தும். சிரிக்கும் போது நாம் அதிக அளவில் உயிர்வளியைச் சுவாசிக்கிறோம். சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய மூச்சினை உள்வாங்கிக் கொள்கிறது.



இதனால் உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதோடு இதயத்தில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்பைத் தருகிறது.உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன.மனம் விட்டு சிரித்தால் மார்பு நோய் வருவதில்லை.
        மனம் விட்டு சிரிக்கும் ஒவ்வொரு முறையும் மரணம் ஒத்திப் போடப்படுகிறது. சிரிக்கும்போது அது மன அழுத்தத்தை தரும் கார்டிசோல் எனும் ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்கிறது மேலும் நம் மனநிலையை மாற்றக்கூடிய எண்டோர்பின்ஸ்  எனப்படும் மூளை இரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கிறது. ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது.தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த வளரூக்கிகளும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைந்து உடல் ஆரோக்கியமடையும். சிரிப்பு மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும்.பெண்களுக்கு மாதவிடாய் முடிவை ஒட்டி பயமுறுத்தும் புற்று நோய்களுக்கும், அடிக்கடி சளி, இருமல், தும்மல், வரும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவுக்கும் வாய்விட்டுச் சிரிக்காததும் ஒரு காரணமே.
     உயர் இரத்த அழுத்தம் தரும் மாரடைப்பைக் காட்டிலும், மகிழ்ச்சிக் குறைவால் வரும் மாரடைப்புகளே அதிகம் எனப் பல ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மாரடைப்பைத் தள்ளிபோடும் விலையில்லா மருந்து, வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு!  சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்; தசைகளைத் தளர்வாக்கும்; வலி நீக்கும்; உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல் போன்ற மூளையின் செயல்திறனைக் கூர்மையாக்கும்.
வாய்விட்டுச் சிரித்தால் இரத்த ஓட்டம் சீராகி உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும். சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன.. குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன.நோயெதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. மூளை அதிகமான சந்தோச ஆர்மோன்களை உடலுக்குள் தெளிக்கிறது..சிரிக்கத் தெரிந்த மனிதனுக்கு நகைச்சுவை மன இறுக்கம் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மன நிலையைப் பேண உதவும் வாய் விட்டு சிரி, நோய் விட்டுப் போகும்என்ற பழமொழி ஏதோ வாய்ப்போக்கில் சொன்ன ஒரு வாக்கியம் இல்லை. சிரிப்பின் மதிப்பை அறிந்து, உணர்ந்து, புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இதைக் கூறி இருக்க முடியும். ஒரு சிறு புன்னகை புரிதல், வாய் விட்டு சிரித்தல் போன்றவை நம் வாழ்கைத் தரத்தை மேம்படுத்தி நோய் நொடி இல்லாத நாட்களை நமக்கு அளித்து மகிழ்விக்கும் என்பதே இதன் பொருளாகும். மரணத்தைத் தள்ளிப்போடும் வழிதான் சிரிப்பு. மனம் விட்டு சிரிப்பது ஹார்மோன்களை துாண்டிவிட்டு உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது உன் சிரிப்பின் நீளம் எவ்வளவோ - அந்தளவு உன் ஆயுளின் நீளம் என்பார்கள் சிரிப்பு மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும். மரணத்தைத் தள்ளிப்போடும் மார்க்கம்தான் சிரிப்பு எனவே முடிந்த வரை சிரிக்க முயலுங்கள். மன அழுத்தத்தை புன்னகையால் தோற்கடியுங்கள்
                        நகுக நலம் பெற                                                                                    
    சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை. (comedy; என்போம் தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த வளரூக்கிகளும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைந்து உடல் ஆரோக்கியமடையும். (அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை அரைமணி நேரம் பார்த்தாலே போதும் என வழிமுறையும் சொல்லியுள்ளார்கள்).


பலர் குழுமியுள்ள இடத்தில் ஒருவர் சிரித்தால் அதைப்பார்த்து பலர் சிரிக்க வாய்ப்புண்டாகும். வாய்விட்டுச் சிரித்தால் இரத்த ஓட்டம் சீராகி உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும். பல பெருநகரங்களில் தற்போது பலர் ஒன்றுகூடிச் சிரிப்பதை ஒரு வகையான பயிற்சியாக மேற்கொண்டுள்ளனர்.                                                                      
        நம்மால் வெளியிடப்படும்சிரிப்புஎன்ற வெளிப்பாட்டிற்கு நிகர் இவ்வுலகில் எதுவும் இருக்க முடியாது ஒவ்வொருவரின் எதிர்மறையான எண்ணங்களையும் ஆற்றலையும் கூட நேர்மறையானதாக மாற்றியமைக் கூடும் சக்தியைக் கொண்ட ஒரே முக வெளிப்பாடு சிரிப்புமட்டுமே ஆகும்   பரபரப்பான இல்லற வாழ்க்கை சிறக்க குடும்பங்களில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும்.  அப்போது மனம் மகிழ்ச்சி அடைகிறது. மனம் மகிழ்ச்சி அடையும்போது சிரிப்பு தானாக வரும். சிரிப்பு தானாக வரும்போது நிறைகள் தெரியும் குறைகள் தெரியாது. இதனால் குடும்பங்களில் புரிதல் இருக்குமே தவிர பிரிதல் இருக்காது
     யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.  சங்ககாலம் தொட்டே இக்கலை பின்பற்றப்பட்டு வருகிறது.நோன்பியர் எனப்படும் தவ முனிவர்கள் கைகளை ஊன்றிக் கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தது பற்றி நற்றிணைப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. இதனை அது கையூண் இருக்கை என்று குறிப்பிடுகிறது இதனை உயிர்ப்புப் பயிற்சி எனக் கருதலாம் சிரிப்பு யோகா  பல ஆராய்ச்சிகளில் இவை உறுதி செய்யப்பட்டு, ‘சிரிப்பு சிகிச்சைஎன்று கூட தொடங்கப்பட்டு விட்ட நிலையை பெற்றுள்ளது. பல ஹார்மோன் செயல்பாட்டிற்கு உகந்த சிகிச்சை அளிக்கும் திறனைப் பெற்றுள்ளது. முக வசீகரத்தை மெருகேற்றி சுமாராக இருப்பவர்களைக் கூட மிகவும் அழகுடையவர்களாக காட்சி அளிக்கிறது தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை, பல கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டோர்களையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது. இதற்கு காரணம், போதிய அளவிற்கான சந்தோச சூழ்நிலை குறைபாடே ஆகும்.
        எனவே தொல்காப்பியர் சிரிப்பின் முக்கியத்துவத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து நகை என்றவொரு மெய்ப்பாட்டை அமைத்துள்ளார்.  உள்ளத்து உணர்வுகளை ஆய்ந்து அவற்றால் உடலில் தோன்றும் மெய்ப்பாடுகள் இவையிவை என்று எடுத்தோதிய முதல் நூல் தொல்காப்பியமே. மெய்ப்பாட்டைத் தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் ஒருவகை உளவியல் கோட்பாடு. தொல்காப்பியம் காட்டுவன உணர்ச்சிகள் உந்திய வெளிப்பாடு   முகத்தில் தெரியும் வெளிப்பாடு அன்பு, மகிழ்ச்சி, செருக்கு, இறுமாப்பு, தற்பெருமை, அகம்பாவம், அவமதிப்பு, புறக்கணிப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எல்லோரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்துவது மெய்ப்பாடு எனப்படும் அவற்றை                                                                                  நகையே அழுகை இளிவரல் மருட்கை                                                அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று                                                   அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப(பொருள்247)என்று தொல்காப்பியர் உரைக்கிறார் உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு.  மெய்ப்பாடு என்ற சொல் மெய்யின்கண் தோன்றும் அவிநயம் எனப்பொருள் கூறப்படுகிறது. என்பார் இளம்பூரணர் (பொருள்.மெய்ப்பாட்டியல்.3, இளம்) மெய்ப்பாடு என்பது உடம்பில் தோன்றும் அசைவுகளே நினைவுக்கு வருவதால் அது நாடகத் தொடர்புடையது.  என்பர்.   
உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்        (தொல்.பொ.செய்யுளி.196)
ஒன்றைப்பற்றி ஆராயாமல் கூறியவுடனேயே அதன்பொருளை மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப்பாடாகும்                           
  மெய்ப்பாடு என்பது பொருட்பாடு அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல், ... பேராசிரியர்,    இதில் அன்பு கலந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் ஒரு உணர்ச்சியின் வடிவமே நகை
     எட்டுவகை மெய்ப்பாட்டில் முதலில் அமைவது நகையாகும். பெரும்பாலும் கூட்டத்தோடு
விளையாடும் போதே வாய்விட்டுச் சிரித்தல்  நிகழும் என்பதால்
பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்                                              கண்ணிய புறனே நான்கான் கென்பா(தொல்.பொருள்-245)என்கிறார். ‘‘இன்ப விளையாட்டின் நிகழ்ச்சிகளோடு தொடர்புடைய விளையாட்டுப் பொருளாவது நகை என்பதால் அதனை முதற்கண் வைத்தார். நகை என்பது சிரிப்பு. .நகை என்பதற்குப் பேராசிரியர் அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும் என மூன்றாகும். என்று விளக்கம் தருகிறார்.. சிரிப்பின்வகைகள் சிலர் சிரிக்கும் போது தங்களது மகிழ்ச்சியை புன்னகையாக உதட்டின் மூலமாக தெரியப்படுத்துவர்.
சிலர் பற்கள் வெளியே தெரியும்படி சிரித்து தெரியப்படுத்துவர்.  ...நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறும். தமிழும்,குருடரும்முடவரும் செல்லும் செலவும் பித்தரும் களியரும் சுற்றத்தாரை இகழ்ந்தாரும் குழவி கூறும் மழலையும்போல்வன(இது பேராசிரியர்  உரைத்தது இக்காலத்திற்கு ஏற்புடையதல்ல). நகைப்புக்குக் காரணம்  பருமனான பாவை பழத் தோலால் வழுக்கி விழும்போதும், பல்லில்லாதவன் தந்தம் என்று சொல்லும் போதும்   சிரிப்பு வரும்.  நகைச்சுவை தோன்றும் இடங்களாக செயிற்றியம் என்னும்நூல்கீழ்வருமாறு கூறுகிறது                                                          
உடனிவை தோன்றும் இடமியா தெனினே
முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும்
மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணும்
கவற்சி பெரிதுற் றுரைப்போர்க் கண்ணும்
பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ்
சுற்றத் தோரை இகழ்ச்சிக் கண்ணும்
மற்று மொருவர்கட் பட்டோர்க் கண்ணுங்
குழவி கூறு மழலைக் கண்ணும்
மெலியோன் கூறும் வலியின் கண்ணும்
வலியோன் கூறும் மெலிவின் கண்ணும்
ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணுங்
கல்லார் கூறுங் கல்விக் கண்ணும்
பெண்பிரி தன்மை யலியின் கண்ணும்
ஆண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணும்
களியின் கண்ணுங் காவாலி கண்ணும்
தெளிவிலார் ஒழுகும் கடவுளார் கண்ணும்
ஆரியர் கூறுந் தமிழின் கண்ணும்
காரிகை யறியாக் காமுகர் கண்ணும்
கூனர் கண்ணும் குறளர் கண்ணும்
ஊமர் கண்ணும் செவிடர் கண்ணும்
ஆன்ற மரபின் இன்னுழி எல்லாந்
தோன்றும் என்ப துணிந்திசி னோரே. இவை யாவும் இக்காலத்திற்கு ஒவ்வாதவை இருப்பினும் இலக்கண நூலில் சொல்லப்பட்டதால் இங்கு எடுத்தாளப்பட்டன.இவ்வாறு  உரைக்கப்பட்டஇந்நகையானது  எள்ளல், இளமை, பேதமை, மடமை என்பதன் அடிப்படையில் வெளிப் படுவதாகும்       
 “எள்ளல் இளமை பேதைமை மடனென்று                                                                       உள்ளப் பட்ட நகைநான் கென்ப   (தொல்.பொருள்-248).
இதில் எள்ளல் என்பது தான் பிறரை எள்ளி நகையாடுவதும், பிறரால் எள்ளப் பட்ட போது தான் நகுதலும் என இரண்டாகும்.
இளமை என்பது தான் இளமையாகப் பிறரை நகுதலும், பிறர் இளமை கண்டு தான் நகுதலும் என இரண்டாகும்.
 பேதமை என்பது அறிவின்மையாகும், இது தன் பேதமையால் பிறர் நகுதலும், தான் நகுதலும் என இரண்டாகும்.
மடமை என்பது ஒருவர் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனை விடாது கடைப்பிடித்தல் ஆகும்.  இதனைக் கொடுத்தற் கொண்டு கொண்டது விடாமை என்பர். தன் மடமையால் பிறர் நகுதலும், பிறர் மடமையால் தான் நகுதலும் என இரண்டாக அமையும். இவ்வாறு நகை பற்றிய இலக்கணத்தைத் தொல்காப்பியர் தருகிறார்.
இவற்றுள்,
எள்ளல் என்பது எள்ளி நகையாடுவது ஆகும். பிறரை ஏளனம் செய்தல்  இதனைக் கேலிமொழி என்றும் கூறுவதுண்டு. இது பிறரைப் புண்படுத்தாத வண்ணம் விளையாட்டாகக் கூறப்படுவதாகும். பிறரது செயலைக் கண்டு எள்ளும்போது பிறரால் எள்ளப்பட்ட வழியும் நகை பிறக்கும். இளம்பூரணர், “எள்ளல் என்பது நகைப்படு பொருள் கண்டதன் வழி முறுவலோடு வரும். மகிழ்ச்சிப் பொருள் எள்ளல் காரணமாக வரும்என்கிறார்.  .
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே                                              புறனழீஇ பொய்த்து நகை(182)இதற்குச்சான்று
தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைக் கண்டு தலைவி எள்ளி நகையாடுவதை,              
 இனிப்புணர்ந்த எழில்நல்லார்இலங்கெயிறுஉறாஅலின்
   நனிச்சிவந்த வடுக்காட்டி நாணின்றி வரின்எல்லா”   (மருதக்.2:14-15)
என்னும் கலித்தொகைப் பாடலடிகளின் மூலம் அறியமுடிகின்றது. இதில், பரத்தையர் இருக்கும் சேரியிலே சென்று ஒவ்வொரு வீடாகப் போய், நீ இருக்கும் இடம் தெரியாமல் கேட்டுக்கேட்டுத் தேரோடு திரியும் உன்னுடைய பாகனைக் கண்ட நாங்கள் குறை கூறுவோமோ? எனத் தலைவி  தலைவனிடம் கூறுவதன் மூலம் தலைவிக்கு எள்ளல் காரணமாக நகை வெளிப்படுகின்றது
இளமை காரணமாக வரும் நகைப்பு    இளமை என்பது குழந்தைத் தன்மையாகும். அக்குழந்தை கூறும் மழலைப் பேச்சைக் கேட்கும் போது கண்டிப்பாக நகை தோன்றும். பேச்சு மட்டுமல்லாமல் அது செய்யும் குறும்புத்தனமும் நகையை உண்டாக்கும். குழந்தையின் மழலைகாரணமாக இன்பம் உண்டாவதை வள்ளுவர்,
குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல்கேளாதவர்     (குறள்.66)
என்னும் குறளில் குறிப்பிட்டுள்ளார்
பேதைமை அறிவின்மை பேதைமை என்பது அறிவில்லாமல்செய்யும் செயல் ஆகும். இதனை அறிவின்மை என்றும் கூறுவர். பொதுவாகக் கூறின் வாழ்க்கையின் இன்றியமையாது அறிய வேண்டியவற்றை அறியாதிருத்தல் ஆகும். பேதைமை என்பதற்கு இளம்பூரணர், “கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக்கோடல்‘’ என்கிறார். பேராசிரியர், “பேதைமை என்பது அறிவின்மைஎன்கிறார்
மடம் ஐயுறாது நம்புமியல்பு பொருண்மை யறியாது திரியக் கோடல்;   பேராசிரியர்மடன் என்பது எதைக் கூறினாலும் எளிதில் நம்புவது ஆகும். பிறர் சொல்லுவதை அறிந்து கொண்டாலும், தான் அறிந்ததைப் பிறருக்கு விளங்கக்  கூறத் தெரியாததாகும். எது கூறினாலும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்பி விடுவதே மடமையாகும். மடன் என்பதற்கு இளம்பூரணர், “பொருண்மை யறியாது திரியக்கோடல்என்கிறார்
சோமசுந்தரபாரதியார், “மடம்-ஏழ்மை அதாவது ஆராயாது, ஐயுறாது நம்புமியல்புஎன்கிறார். இவ்வாறு நகைச்சுவை தோன்றும் இடங்களைத் தொல்காப்பியர் உரைக்கிறார். அவர்வழி நிற்போம்.
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம். பறவைக்கு அழகு சிறகு. நமக்கு அழகு சிரிப்பு..

சிரித்துச் சிந்தும் கண்ணீரில்                                                                                                                                                                       உப்புச் சுவை தெரிவதில்லை                                                                 'சிரிப்பு என்பது கலை
சிரிப்பு என்பது கருவி
சிரிப்பு என்பது மந்திரம்
சிரிப்பு என்பது மகத்துவம்
சிரிப்பு என்பது மருத்துவம்'
எப்போதும் நம் உதடுகளில்
புன்னகை இருக்கட்டும். அது
தரும் தன்னம்பிக்கையை வேறு
எதனாலும் தரமுடியாது. வாய்விட்டு சிரிப்பதனால்,நோய்விட்டு போவது மட்டுமல்ல.நோய் பட்டு போகும்.எனவே சிரிப்போம், வாழ்வில் சிறப்போம் மற்றெம் மொழிகட்குமில்லாத சொல்லாடல் நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பாகும்.சிரிப்போம் சிரிப்போம் சிரித்துக்கொண்டே இருப்போம்.

வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்                                                                                                               
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து                                                                                        
 பொலிமின்!   (தொல்.பொருள்.செய்யுள்422)
தொல்காப்பியச் செம்மல
புலவர்ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
தலைவர் தொல்காப்பியர் பேரவை,
முத்தம்மாள் நிலையம்,
பூலுவபட்டி(அஞ்சல்),
கோயமுத்தூர் 641101.
அலைபேசி 9788552993 / 8610684232                                                         Email amuthankaliappan@gmail.com
www tholkappiyam.org
pulavarkaliappan.blogspot.in






    





நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற304

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து694

நகைஈகை இன்சொல இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மை குடிக்கு953

நகைவகைய ராகிய நட்பிந் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் 621

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்774

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புளபாடறிவார் மாட்டு995

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇ பொய்த்து நகை182


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் இடித்தற் பொருட்டு784

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்621