Saturday 18 November 2017

நமக்குக்கிடைத்த முதல் நூல்



                           நமக்குக் கிடைத்த முதல்நூல்
உலகின் முதல் நூல்; திருக்குறளின் முன்னோடி; ஆழிப்பேரலைக்கு அகப்படா நூல்; அனல்  புனல்  அத்தனையும் வென்ற நூல்; அதங்கோட்டாசான் தடைக்கு விடை கூறி வெளிவந்த நூல்; பனம்பாரனாரின் பாயிரம் கொண்டதுநூல்; எல்லா இயங்களுக்கும்(இயம்=இசம் கம்யூனிசம், சோசலிசம் உள்பட) வேராய் விளங்கும்நூல் உயிருக்கு விளக்கம் விளம்பிய நூல்; வள்ளுவனையும் கம்பனையும் வளைத்துப் போட்ட நூல்; சிலம்பு தந்த இளங்கோவை சிந்திக்க வைத்தநூல்; இடைச்சங்கத்தாருக்கும், கடைச்சங்கத்தாருக்கும் இதுவே இலக்கண நூல்; இன்றைக்கும் அந்நிலைதான்; பண்டைத் தமிழர்களின் பண்பாட்டைப் பகரும்நூல்,  நாகரிகச் சிறப்பை நவிலும் நூல்; ' இத்தனை பெருமைகளையும் பெற்ற நமக்குக் கிடைத்த முதல்நூல்; அதுவே தொல்காப்பியம். தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம். காப்புத் (காவல்) பழந்தமிழர் தொன்மையைக் காக்கும்நூல். 
       தொல்காப்பியம் ஏன் அறியப்படா (பாமரருக்கு) நூலானது. பண்டிதர் மட்டுமே புரியமுடி.யும். அஃது ஒர் இலக்கணநூல். அதைப் பயில்வது உளி கொண்டு மலை பிளப்பதற்கு ஒப்பாகும் என்று உரைத்து வைத்தனர். வாழைப் பழமாய் உள்ளதைப் பலாக்கனி எனச் சொல்லி மிரட்டினர். அதனால் படிப்பு மட்டுப்பட்டோர் பயந்து நின்றனர். உரை எழுதியோர் தன் மொழிப்புலமையை வெளிப்படுத்த, உத்தி என்னும் விதி காட்டி, தம் எண்ணத்தை எல்லாம் கொட்ட நினைத்ததாலும், கைபர் கணவாய் வழியாகக் கால்நடை மேய்க்க வந்தோர் சூழ்ச்சியாலும் பரண்மேல் போடப்பட்டது. மொத்தத்தில் அனைவராலும் எழுத்திலும், சொல்லிலும் எடுத்து ஆளப் படாததே முதற்காரணம். 
       ஏன் தொல்காப்பியத்தை முதன்மைப் படுத்தவேண்டும்? எழுத்தையும் சொல்லையும் அவை தரும் பொருளையும் புலவர்கள் படிக்கட்டும். நமக்கு எதற்கு என்ற மழுங்கிய வாதத்தை விட்டு உண்மை யாதென உணர்வோம்.
   தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப் பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும்,  இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழி நூல்களும் சார்பு நூல்களும் தோன்றின. எல்லா நூல்களையும் திருக்குறள் ஆண்டது. திருக்குறளையே ஆண்டது தொல்காப்பியம்.
     தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றின் இலக்கணங்களை முறைப்படக் கூறுவது. உலக மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் இருக்க தமிழ் மொழிக்கு மட்டுமே வாழ்வியல் கருத்துகள் பொதிந்து கிடக்கும் பொருளதிகாரம் தொல்காப்பியரால் அமைந்தது. பண்டைத் தமிழர் வாழ்வியலை அகம், புறம். என வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம் புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை, வீரம் பற்றி எடுத்துக் கூறும். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றி விவரிக்கும். இப்படி வளமாக வாழ்ந்த தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இஃது ஒளிர்கின்றது
   தொல்காப்பியம் என்னும் நூலை 'ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்படுபவரும் தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) அறுநூற்றி எண்பதாம் (680 - கி.மு.711 உலகம் ஒப்பியது.) ஆண்டில் வாழ்ந்தவருமான தொல்காப்பியனார் இவ்வரிய இலக்கியவடிவில் இலக்கண நூலைப் பாடியருளினார். நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்னும் ஐந்திரம் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்' (அகத்தியம் ஆதாரம் இல்லை) கண்டிருந்தார். .                                 இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம்மிடையே உலா வரவேண்டும் தமிழ் மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்கும் தொல்காப்பியம்  ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் இருக்கச் செய்வதே தொல்காப்பியப் பேரவையின் நோக்கம். நோக்கம் நிறைவேற தமிழ்கூறு நல்லுலகம் உதவுக.
     தொல்காப்பியமே துணை                             தொல்காப்பியரே வழிகாட்டி.       
                           தொல்காப்பியச்செம்மல் புலவர். ஆ.காளியப்பன்
                           தலைவர் தொல்காப்பியர் பேரவை
                           முத்தம்மாள்நிலையம் பூலுவபட்டி(அஞ்சல்)
                           கோயமுத்தூர் 641101.
                           அலைபேசி 9788552993 / 8610684232