Thursday 27 April 2017

பண்புடைமை



         

.                    பண்புடைமை                                                                                                 வள்ளுவன் உரைத்த வான்மறையின் நூறாவது
             அதிகாரம் பண்புடைமை. அதன் பிழிவேஇக்கவிதை
     (எண்சீர் ஆசிரிய விருத்தம்)                              
பண்பெனப் படுவ பாங்குறப் பகரின்
    பல்லோர் தன்னொடு பழகும் பான்மை 
நண்பர் தன்னிடம் நகைத்தல் செய்திட     
   நயமிலா மொழிகளை நவிலல் குற்றம் 
சண்டையில் பகைவன் ஆயுதம் இழந்தால் 
   சட்டெனச் சமரினை நிறுத்தல் பண்பே
தண்டனை பெறுகிற கைதியே யாயினும்
    தனதுசொல் உரைக்கவே இடந்தரல் நலமே.

உறுப்பால் ஒத்ததால் மனிதன்  அல்லவே
    உயர்குடிப் பிறப்பும் அன்பொடு அருளையும்
பொறுமையும் உடையோன் பண்புடை மனிதன்
    பொருந்தும் நன்மையே புரியும் மாந்தனால் 
அறுந்து வீழா(து) அண்டம் உள்ளது
   அரும்பண் பின்றியே அரிதில் ஈட்டிய                                                    
உறுபொருள் அனைத்தும் ஊரினர் தமக்கு       .           
     ஊறுசெய்யும் உண்மையும் யதுவே  
 
  படித்தும் பட்டும் தேடிய அறிவு
        பல்லினைப் உடைய கூரரம்பு எனினும்
  துடிக்கும் மாந்தர் துன்பம் போக்காத் 
                                   துட்டன் பட்ட காய்மரம் யுலகினில் 
  மடிவரும் பசுப்பால் உள்ள செம்பில்  
      மாய்க்கும் நஞ்சினைக்  கலந்தாற் போன்றது
  இடித்துக் கூறும் நண்பர் இல்லா
      பண்பிலான் அடைந்த  செல்வம் தானே

நகுதல் அறியா பண்பிலான் தனக்கு
    நண்பகல் கூட நள்ளிருள் ஆகும் 
தகுதி யற்றவன் பதவி தன்னால்
    தரணி மாந்தர் துன்பம் கொள்வர்   
பகுத்துண் டறியா பண்பிலான் பெரும்பொருள்
    பயன்படா தழியும் உச்சிமரத் தேனென
வகுத்த குறட்படி வானுறை தெய்வமாய்
   வளம்பட வாழ்வோம் பண்புடன் நாமே.
26-07-2015அன்று முத்தமிழ் அரங்கில் வாசிக்கப்பட்டது                                                                            ஐஸ்வரியம் ஆகஸ்டு   இதழுக்குஅனுப்பி வைக்கப்  பட்டது

 

நாணுடைமை



              நாணுடைமை
மங்கையர் குணமதில் நாணமும் ஒன்றே
     மற்றதைக் கூறாது மற்றவர்க்கு வேண்டிய
எங்கும் தீயதைச் செய்ய நாணுதல்
     என்பது பற்றியே எடுத்துரைக் கின்றேன்
தங்கும் வீடும் தானணி  ஆடையும்
     தரணியில் யாவர்க்கும் பொதுவது தானே
பொங்கிவரும் நாணமோ பொல்லாங்கு யாருக்கும்
     புரியாத பெரியோரின் பண்பது தானே.

உடம்பால் உயிரும் பயனுறுதல் போல
உயர்சால்பும் நாணால் அடையும் பெருமையை
தடம்காட்டும் சான்றோர்க்கு நகையன்றோ நாணுடைமை
     தப்பியே நடப்போர்க்குத் தணியாத பிணியாகும்
குடத்தினில் பாம்பாய் பழியை அடக்கியோர்
     குவலயம் தன்னால் கும்பிடப் படுவார்
மடமையால் பழிபாவம் மாநிலத்தில் செய்யாது
     மதிலாய்க் காப்பதும் நாணமது தானே.

உயிரதைக் காட்டிலும் உயர்ந்ததும்  உளவோ
      உளதென உலகினில் உரைத்தனர் பெரியோர்
மயிரது நீங்கின் மாண்டிடும் கவரிபோல்
      உயிரது நீப்பர் நாணது நீங்கின்
அயில்வேல் கொண்டு ஆழமாய்க் குத்தினும்
      அடாத பழியை யார்க்கும் செய்யார்
உயர்குலம்  கெடுமென  ஒருபோதும் செய்யார்
      உலகினில் நாணிணை கொண்டோர் தாமே.

 

அன்புடைமை



                                    அன்புடைமை        13-12-2015
 அன்பால் தாயைத் தந்தை அணைந்ததால்
           ஆருயிர் எல்லாம் அடைந்தன உலகை
 துன்பம் துயரம் துடைத்து எறிந்து
           தொல்லை போக்குவ(து) அன்பது தானே
 இன்பம் எல்லாம் எடுத்துக் காட்டி
           இன்னுயிர் வளர்ப்பதும் அன்பது தானே 
 அன்பினை அடைக்கும் தாளும் உண்டோ
           அவரவர் கண்ணீர் அதற்குச் சாட்சி

 உலகம் அனைத்தும் எமதே என்பார்
           உற்றார் மீதினில் அன்பே இல்லார்
 இலகுவில் அழியும் உடலைக் கூட
           எளிதில் ஈவார் அன்பினை உடையார்
 சலமிகு உலகில் சடலம் ஆவியைச்
           சார்ந்து இருப்பதும் அன்பால் தானே
 நலமிகு நட்பும் நிலவாய் வளர்வதும்
           நல்லவர் கொண்ட அன்பது தானே

 அறியார் செய்யும் அவலம் தன்னை
           அறமாய்ச் செய்வதும் அன்பது தானே
 சிறிய புழுவும் சிதையும் வெயிலால்
           அன்பில் லாரும் அழிவது உறுதி
 வறண்ட பாலையில் உலக்கை துளிர்ப்பதும்
           வன்மனம் கொண்டோர் செழிப்பதும் ஒன்றே
 அறத்தைச் செய்யக் கைகள் நீளா
           அகத்தில் அன்பு இல்லாப் போழ்தே.
 தாயால் தொடங்கி தரணியில் விரியும்
தன்மை கொண்டது அன்பது தானே
 காயும் மரத்தைத் தளிர்க்க வைப்பது
           காரது கொண்ட அன்பது தானே
 சேயும் மண்ணில் செழிப்புற வளர
           தாயது கொண்ட அன்பது தானே
 ஆயும் அறிஞரும் ஆய்வில் தோய்வது
           அகில மீது கொண்ட அன்பே.