Wednesday 21 June 2017

நிலமே மூலமுமுதற்பொருள்-கவிதை




நிலமே மூலமுதற்பொருள்    18-06-2017                              
பத்தோடு ஆறாண்டுப் பருவ மங்கையாய்
முத்தமிழ் அரங்கை வளர்த்தெடுத்த வாணிகரே!          
சித்தத்தில் எந்நாளும் சிவனையே எண்ணுகிற
முத்தான கவியரங்கின் மூலவரே! கோவைநம்பி       
தூய்மைப் பாரதத்தைத் தொலைக்கும் மாசதனை            
காய்சினம் கொண்டிங்கு கவிபாட வந்தோரே!
தெருவிலே தமிழ்வளர்க்கும் முத்தமிழ் அரங்கிற்கு
வருகை புரிந்துள்ள அருந்தமிழ் ஆன்றோரே!
தொல்காப்பியச் செம்மல் தொழுகிறேன் கையெடுத்து
நிலமுறு மாசுதன்னை நீருரைக்க வேண்டுமென
கூல வாணிகர் கூறிய காரணத்தால்
நிலத்தின் தன்மைதனை நீள்கவியாக் கிவந்தேன்
செம்பரிதிக் குழம்பின் சிதறிய ஒருதுளியாம்
ஐம்பெரும் பூதத்தின் அனைத்திற்கும் முதற்பொருளாம்
ஐந்திணை ஒழுக்கத்து ஆதாரக் கருப்பொருளாம்
பைந்தமிழர் பண்பாட்டை காக்கும் உரிப்பொருளாம்
பண்டையராம் பாண்டியர் ஆண்ட நிலந்தன்னை
குமரிக் கண்டமெனக் கூறினர் அந்நாளில்
ஆழிப் பேரலையால் அடுத்தடுத்து துண்டாகி
ஆறேழு கண்டமாய் ஆங்காங்கே சிதறியது
தண்டமிழ் நாட்டைவிட்டுத் தள்ளிய கண்டங்கள்
தமிழ்மொழி திரித்து தனிமொழி பெற்றன
கலங்கமிலா எண்ணத்தான் காய்கனி உண்டவன்தான்
விலங்காய்த் திரிகையிலே வில்லங்க மேதுல்லை
மரம்விட்டு இறங்கியே மண்மீது கால்வைத்தான்
பரம்பரை பெருக்கத்தால் பற்றாக்குறை மேலீட்டால்
பரநலத்தைக் கைவிட்டுச் சுயநலத்தை மேற்கொண்டான்
இயற்கைச் செல்வத்தை எந்நாளும் கொள்ளையிட்டான்
செயற்கைப் பொருளாலே சீர்கெடுது நிலமெல்லாம்
எரிபொருள் எந்திரத்தால் ஓசோனும் ஓட்டைவிழும்
கரிமில வாய்வுருஞ்சும் கனமரத்தை வெட்டியதால்
கணக்கிலா நோயாலே கடும்அவதிப் படுகின்றான்
வெப்ப மேலீட்டால் வெண்பனி உருகுவதால்
வெள்ளப் பெருக்கால் வெகுசனம் மடிகின்றார்
நெல்விளைந்த பூமிதனை கல்நட்டி விற்பதாலே
செல்வதெங்கே சோற்றுக்கு சொல்லுங்கள் அவையோரே!
மரத்தின்கீழ் தெய்வத்தை வைத்தான் மறத்தமிழன்
உரம்போட்டால் போதுமென்றான் இக்கால விஞ்ஞானி
பழுதுநீக்கிப் பயன்படுத்தும் பக்குவத்தை மறந்துவிட்டு
உழுதொழிலை புறம்தள்ளும் எந்திரக்  குப்பைதனை
எங்கே கொட்டுவது விழிபிதுங்கி நிற்கின்றோம்
சந்ததியை எண்ணியே சுயநலத்தை விட்டிடுவோம்
இந்தப் பூமிதனை இனியாவது காத்திடுவோம்

பொழப்புக் கதையெ கேட்டயா சிறுகதை



                 பொழப்புக் கதையைக் கேட்டயா!
 “அக்கா அக்கா ரக்கிரி பொறிக்கலாமுனு கொண்டைம்மா காட்டுக்குப் போனே. சீமை முள்ளு ஏறி முறுஞ்சிடுச்சு.கெலஞ்சு எடுக்கலாமுனா பின்னூசி வேறே இல்லே.என்றாள் செம்பாத்தாள்
 “செருப்பு என்னாச்சு?” என்றாள் வள்ளியம்மாள்.
“அது பிஞ்சு போய் ரண்டுமூனு நாளாச்சு. கட்டரதுக்குக் கருப்பன் கிட்டக் குடுத்திருக்கேன் அதை ஊட்டுக்குள் வெச்சுப் பூட்டிட்டு மக ஊருக்குப் போயிட்டான்”. என்ன செய்யறது”  என்றாள் செம்பாத்தாள்
 “செரிசெரி போயிக் கருவேலாமுள்ளைப் புடுங்கிட்டு வா கெழஞ்சு உடறேன் ”  என்றாள் வள்ளியம்மாள்
செம்பாத்தாள் கருவேல முள்ளைப் பிடிங்கிக் கொண்டுவந்தாள்.
“அடி யாத்தி என்ன இவ்வளவு ஆழம் போயிருக்கு சீமெண்ணையைக் .கொஞ்சம்கொண்டுவா அதை ஊத்துனா கால் மறத்துப் போகும் அப்பரம் கெழஞ்சா வலி இருக்காது” என்றாள் வள்ளியம்மாள்.
செம்பாத்தாள் சீமை எண்ணைச் சீசாவைக் கொண்டுவந்து கொடுத்தாள்.அதை வாங்கி முள்பட்ட காயத்தின் மீது வள்ளியம்மாள் கொஞ்சம் ஊற்றினாள்.பிறகு முள்ளைக் கருவேலான் முள்ளால் களைந்தாள்.
“இப்பக் கெழைய முடியாது ஆழமாப் போயிடுச்சு எருக்கலை எலைலைப் பாலோடு புடுங்கிட்டுவா எருக்கம் பாலெ வச்சு மேலெ அந்தப் பொங்கெப் போட்டா பழுத்துச் சீப்புடிக்கும் அப்பக் கெழஞ்சா அளுங்காமெ வந்திரும். வலிதெரியாம இருக்க ராத்திரிக்கு உப்பெண்ணெய் காச்சி ஒத்தனம் குடுவலி தெரியாது. ஆமா நேத்து எதுக்குப் மொளகு செலவு அரைச்சே?” என்றாள் வள்ளியம்மாள்.
    “அந்தக் கூத்தெ ஏங்கேட்கரே. தேங்காபோட சின்னப்பண்ணன் தோட்டத்திற்குப் போச்சு உங்கண்ணன். அப்போ ஆத்துலே அஞ்சாறு நண்டே புடுச்சிட்டு வந்திருச்சு அதுக்க வேண்டித்தே மொளகாக் கூட்டு அரச்சே.நண்டுச் சாத்தெ குடுச்சிட்டு உங்கண்ணன் பசடுத்தன பாடு இருக்கே! வெளியெ சொன்னா வெட்கம் உள்ள போட்டா துக்கம் உங்கண்ணன் பக்கத்தாலெ வந்தாலே ஒரே பீடி நாத்தம் ஒரே இருமலு” என்றாள் செம்பாத்தாள்.
“பீடி குடிக்கிற ஆம்பளைகளுக்கு அடிக்கடி அகத்திக்கீரை வேவுச்சுக் குடுக்கோனும் தெரிமா?   எங்கூட்டுலே சின்னப் பையன் ராத்திரி முச்சூடு ஒரே வாந்தி வயித்திலிம் போச்சு. மத்தியானம் பள்ளிக்கொடத்திலே என்னவாங்கித் தின்னானோ தெரியிலே குத்திக்குத்தி வாந்தி எடுத்தான்”. என்றாள் வள்ளியம்மாள்
“ஆமா குகிக்கிரியோ கிக்கிரியோ ன்னு சொல்ராங்களே அந்த எளவத் தின்னிருப்பான்” என்றாள் செம்பாத்தாள்
 “அந்த நேரத்தலெ என்ன பண்ணறது ஐயாத்தம்மாவெ போயி எழுப்பிட்டு வந்தேன். அந்த ஆத்தா வந்து மாங்கொட்டையெக் கருக்கி அந்தக் கரியை கொழச்சு குடுத்தாங்கோ..அப்பரந்தே வாந்தி நின்னுச்சு. காத்தாலே எந்திருச்சு அவரத் தழெச் சாத்தே நாலுசொட்டுத் தயிருலே கலக்கிக் குடுத்த பொறகுதெ வயித்திலெ போறது நின்னுது. நாம இந்த ரெண்டெ வெச்சிட்டே இந்தப்பாடுபடறோமே ஆனா
அந்தக்காலத்திலே எப்படிதே ஏழெட்டெப் பெத்துக் காப்பாத்துனாங்களோ” என்றாள் வள்ளியம்மாள்.
“என் பெரிமக மாரிக்கு நெஞ்சுச்சளி வேரெ இரும்பிட்டே இருக்கிறா என்ன செய்யரதுனே தெரியிலே” என்றாள் செம்பாத்தாள்
“சுத்துக் கொழுப்பு எடுத்து மஞ்சவெங்காத் தண்ணிவெச்சுக் குடுக்கிறதுதானே .இல்லாட்டி ஒருகோழிக்குஞ்செ கழுத்தெத் திருகவேண்டியது தானே” என்றாள் வள்ளியம்மாள்
“இந்தமாசம் பெரட்டாசியாப் போச்சே என்ன பண்ணறது அதுக்குத்தே தூதுவளை சாறு வெச்சுக் குடுத்தேன்” என்றாள் செம்பாத்தாள்.
“நண்டுச்சாறு குடிக்கீலே பெரட்டாசி தெரிலே செரி செரி போயி கொள்ளுப்போட்டு வேக வைக்கோனு நான் போறே பொளப்புக் கதையெ கேட்டயா புள்ளெயெ திப்புனு போட்டையா ங்குற மாதிரி வெறு வாய் பேசி கடவா கிழிஞ்சுதுதான் மிச்சம் நடப் போலா” என்றாள் வள்ளியம்மாள்.
“எப்பப் பாத்தாலு கொள்ளுப் பருப்பே கடையிரியெ உங்க ஊட்டுக்காருக்கு அவ்வளவு கொழுப்பா?.நான்போயி இருவாட்சி சாறுதே வெய்க்கபோரே எங்க மாமனாருக்குக் கைகால் கொடச்சலாமா அதெச் சொல்லிட்டே கெடக்கது அதுக்கு வேண்டித்தே. அப்பரோ மாரியே வரச்சொல்ரே வெள்ள வெங்காயம் நாலு பல்லுக் குடுத்துடு ” என்றாள் செம்பாத்தாள்
”செரி செரி நட போலா பொழப்பைப் பாக்கலாம்” என்றாள் வள்ளியம்மாள்.
சொற்பொருள்: ரக்கிரி—கீரை,  சீமெண்ணை –மண்ணெண்ணை, சுத்துக் கொழுப்பு –ஆட்டுக்கொழுப்பு, பெரட்டாசி—புரட்டாசி மாதம்
     ஆக்கம் புலவர்.ஆ.காளியப்பன்
               முத்தம்மாள் நிலையம்
                79(1)பூலுவபட்டி(அஞ்)
                  கோயமுத்தூர் 641101
                   அலைபேசி 9788552993


Wednesday 14 June 2017

பொறாமை



                                பொறாமை (அழுக்காறு)     
     அறம் என்பது அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல் இந்நான்கும் இல்லாது இருப்பதே.அவற்றுள் பொறாமை(அழுக்காறு)கொண்டவன் தருமத்திலிருந்து தவறுவதோடு தன்னையும் தன் சுற்றத்தையும் அழிப்பவன் ஆகிறான். பொறாமை கொண்டவன் என்ன ஆவான்..பொறாமை என்ற சொல்லை திருப்பி படித்துப் பாருங்கள். ஆம்அப்படித்தான் போவான். இனிய சொற்களைப் பேசுகிறவன் அதிக நண்பர்களைப் பெற்று இருப்பதைப் போல பொறாமை இல்லாதவனே புகழைப் பெறுகிறான்
     வானமே இடிந்து வீழ்ந்தாலும் அஞ்சாதவன் பொறாமைப்படும் போது அவன் மனம் கல் மலை ஒன்று  வெப்பத்தால் உருகி குழம்பாவது போலவும் பூமிக்குள் உள்ள வெப்பம் வெளிப்படுவதைப் போலவும் புழுங்கும்.. பொறாமை கொண்டவன் மானம் ,குலம்,கல்வி தானம் உயர்ச்சி வீரம் புகழ் அனைத்தையும் மறந்த பேடி ஆகிறான். பொறாமை கொண்ட துரியோதனன் என்ன ஆனான் என்பதை நாம் அறிவோம்.பொறாமை கொண்டவன் வீட்டில் திருமகள் தன் தமக்கை மூதேவியைக்  குடி அமர்த்தி விட்டு, தான் வெளியேறி விடுவாள்..பொறாமை தன் செல்வத்தை அழிப்பதோடு தீய வழியில் மனதைச் செலுத்தும். பொறாமை கொண்டவன் பெருஞ்செல்வந்தன் ஆனதாக வரலாறு இல்லை.பிறர் வாழ்வு கண்டு பொறாமை கொண்டவன் சுற்றாத்தார் உடுக்கத்துணியும் உண்ண உணவும் இன்றித் தவிப்பார்கள்.பொறாமை கொண்டவன் தன் வளர்ச்சியை எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறான்.எனவே நாம் பிறர் ஆக்கம் கண்டு பொறாமை கொள்ளாது நம் வாழ்வையும் வளத்தையும் எண்ணிச் செயல் படுவோம்
    செல்வம் வரும் போது நாடக அரங்குக்குக்  கூட்டம் வருவதைப் போல மெதுவாக வரும். போகும் காலத்தில் நாடகம் முடிந்தவுடன் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு போவதைப் போல ஒரே அடியாகப் போய்விடும்.செல்வம் நம்மிடம் வரும்போதே செல்வோம்(உன்னைவிட்டுச் செல்வோம்)என்று வருவதால்தானே அதற்குச் செல்வம் எனப் பெயர் வைத்தோம் நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைவன் என்றாலும் நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்டக் காட்டுக்குப் போகத்தான் வேண்டும். மாமரத்தின்  உச்சியில் ஏறி மடார் எனக்  காட்டாற்று வெள்ளத்தில் குதித்து கையில் மணல் கொண்டு வந்து காரிகைகளுக்குக் காட்டிய காளை கடைசியில் ஒருநாள் தடியூன்றித்  தள்ளாடி நடக்கத்தான் போகிறான். ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன் கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன் என்பதை உணர்ந்து இருக்கும் செல்வத்தை இல்லார்க்கு ஈந்து பொறாமை இன்றிப் புகழோடு வாழ்வோமாக.