பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல்.பொருள்.கற்பு1091)
திருமண நிகழ்வு ஏற்படக்காரணம் என்ன என்பதை எடுத்துரைக்கும் நூற்பா.
ஊழ் வினையால் ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டு காதல் கொண்டனர்.கண்ணால் பேசியவர்,கரம் கோத்தனர். களிப்பும் எய்தினர். இவ்வாறு தனிமையில் இனிமை கண்டஇருவரும், களவினை நீக்கி பலரும் அறியக் குடும்ப வாழ்க்கையை வாழத் தொடங்கிய நிலையே கற்பு எனப்பட்டது. இல்லற வாழ்க்கையையே கற்பு என்றனர்.அவ்வாறு தம் வாழ்க்கைத் துணைவரைத் தாமே தேர்ந்தெடுத்து வாழத் தொடங்கிய காலத்தில்,ஒருசில தலைவர் இவளை நான் காதலிக்கவில்லை எனப் பொய் பேசியும் (பொய் என்பது செய்தலை மறைத்தல்), ஒருசிலர் பிறர் அறிய வாழ்க்கை வாழும் போதே அவளைக் கைவிட்டும் வந்தனர். (வழு என்பது செய்வதில் கடைசி வரை உறுதியாக நில்லாது இடையில் தவறிவிடுதல்) இவ்வாறு பொய்யும் வழுவும் தோன்றி ஏமாற்றுத்தனங்கள் நிகழ்ந்தன.வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்கத்தான்தண்டனை என்பதாலும் மலருக்கு மலர்தாவும் வண்டாகச் சில ஆடவர் மாறியதாலும்.ஏமாற்றுத்தனங்கள் மலிந்தன.ஆனால் மலரோ காய்களைத் தாங்க வேண்டியதாயிற்று. தந்தை மகற்காற்றும் நன்றிகளும் இருந்ததாலும் களவொழுக்கம் ஒழுகி இல்லறம் நடத்தத் தொடங்குவோர் இனிப் பலர் முன்னிலையில் பெற்றோர் உடன்பட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர். இதனையே தொல்காப்பியர் “கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வது” என்றார். இக்கட்டுப்பாட்டின் படியே பின் எல்லாத் தமிழர்களும் ஒழுகி வந்தனர். இதுவே திருமண நிகழ்வுகளுக்குக் காரணம் ஆயிற்று. இதில் ஐயர் என்பதை இக்காலத்தில் உள்ள பார்பார்களாகக் கொண்டதால்தான் இந்நூற்பா இடைச் செருகல் எனக்கொண்டனர் சிலர். ஐயன் என்றால் தன் தந்தையின் தந்தை எனக் கொங்குநாட்டில் குறிப்பர் ஐயா என்பதை மேன்மை பொருந்திய குலப்பெரியோர், ஆசிரியர்,வயதில் மூத்தோர் என எடுத்துக்கொள்வதே மிகவும் சிறப்புடையதாகும் இவ்வாறு சமுதாயச் சான்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட வாழ்க்கையே கற்பு. இதனையே இயல்பினால் இல்வாழ்வான் என்றார் வள்ளுவரும். (1-9-19 பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993