Thursday 27 April 2017

கல்வி



     
         

இந்தக் கல்விதான் இனிமேல் வேண்டும்
தமிழரும் தமிழும் தழைத்தினி தோங்கிட
இன்றைய குழந்தைக்கு இனிநாம் கொடுப்போம்
கற்றபடி நிற்கவும் கருதியதை இயற்றவும்
உற்ற கல்வியை உடனே கொடுப்போம்
ஐந்து வயதுவரை ஆடட்டும் பாடட்டும்
அதற்கேற்ற வழிமுறை அரசும் செய்யட்டும்
அறிஞர்கள் நிறைந்த அரசுப் பள்ளியில்
திறன்வளர் கல்வியை இயல்பறிந்து தருவோம்
இலவசக் கல்வியை எல்லார்க்கும் கொடுப்போம் 
பணப்பயிர் செய்யும் பள்ளியை மூடுவோம்
பாபருடன் அக்பரைப் படித்தது போதும்
பாரதப் போரில் பெருஞ்சோ றிட்டதும்
பாரியுடன் கபிலர் பைந்தமிழ்ச் சான்றோர்
நேரிய வாழ்வை நிரல்படச் சொல்வோம்
மதுரைக் கோவிலும் மல்லைச் சிற்பமும்
கல்லணை முதலாய்க் கட்டிய முறையும்
பெரிய கோவிலும் பேரிசைத் தூணும்
கடல்கடந்து கம்போடிய நாட்டில் தானே
காசினி வியக்கும் கற்கோவில் தன்னை
கட்டிய தமிழன் கற்பனை வளத்தையும்
அரிய சிற்பம் அழகிய ஓவியம்
வந்த வழிமுறை வழுவாது உரைப்போம்
ஊருக்குச் சோறிடும் உழவின் முறையும்
பாருக்குப் பயன்படும் பற்பல பொருளையும்
வலவன் ஏவா வான வூர்தியும்
கலமும் கட்டக் கற்றே கொடுப்போம்
விளையாட்டு மைதானம் விரிவாய் இருந்தால்
வெள்ளியும் தங்கமும் வேண்டியது கிட்டுமே
அண்டத்தை ஆயும் அறிவியல் தன்னையே
தண்டமிழ் மொழியில் தேடித் தருவோம்
ஆத்திகம் நாத்திகம் அனைத்தையும் அகற்றி
சாத்திரத் தோத்திர சழக்கினை நீக்கியே
எல்லார்க்கும் தெய்வம் இயற்கை என்றே
தொல்காப்பி  யமுரைத்த இல்வாழ்க்கை முறையும்
வள்ளுவன் காட்டும் வாழ்வியல் நெறியும்
பள்ளிப் பருவத்தில் பாடமாய்த் தருவோம்
திரைகடல் ஓடியே திரவியம் தேடினும்
தரைவழி சென்றே தனம்பல நாடினும்
பைந்தமிழ்ப் பண்பினை மறவா திருக்க
இன்றைய குழந்தைக்கு இனிதாய்க் கற்பிப்போம் 
      புலவர் ஆ.காளியப்பன்
               9788552993

No comments:

Post a Comment