Sunday 25 December 2022

ஒழுக்கமுடைமை வள்ளுவர் குறள்வழிக் கவிதை

 

 

                             ஒழுக்கம் உடைமை                          17-08-2015

அவரவர் பணியை அவரவர் நாளும் 

     அலுப்பின்றிச் செய்தல் ஒழுக்கம்

தவறுகள் இன்றித்  தகுமுறைப் படியே

     தவறா தொழுகல் ஒழுக்கம்

புவனத் தோடு ஒட்ட ஒழுகி

     புரிவது தானே ஒழுக்கம்

கவனத் தோடு கருத்தினைச் செலுத்தி

    காரியம் செய்திடல் ஒழுக்கம்

 

விழுப்பம் தருவதை விரும்பி நாளும்

    வேண்டிப் புரிதல் ஒழுக்கம்

அழும்பு செய்வோர் அழிதல் உண்மை  

   அதனை உணர்தல் ஒழுக்கம்

நழுவல் இன்றி நன்மை புரிதல்

   நமது கடமை ஒழுக்கம்

கழுவாய் இல்லை ஒழுக்கம் தவறின்

   கவனம் இருக்கனும் உலகீர்

 

கற்ற கல்வி மறந்து போனால்

    கவலை யில்லை கண்டீர்

பெற்ற பிள்ளை ஒழுக்கம் தவறின்

    பெரும்பிழை ஆகும் உணர்வீர்

உற்றார் உறவினர் சுற்றம் தழுவி

   ஒழுகுதல் வேண்டும் உலகீர்

அற்றவர் பெற்றவர் அனைவர் நாளும்

   அவர்நிலை நிற்றல் ஒழுக்கம்

 

சான்றோர் சொல்லைச் சட்டமாய் நினைத்து

    சலிப்பின்றி நடத்தல் ஒழுக்கம்

ஆன்ற குலத்தில் பிறந்து விடுதல்

    அதுவன்று உயர்வு அறிவீர்

சான்றோர் உரைக்கும் சலமது நீக்கிச்

    சகத்தில் வாழ்தல் ஒழுக்கம்

ஊன்று கோலாய் உறுதுணை ஆகும்

     உண்மை வழுவா ஒழுக்கம்

 

 தானமும் தவமும் செய்வதைக் காட்டிலும்

     தவறின்றி நடத்தல் ஒழுக்கம்

ஊனம் என்பது பெருங்குறை இல்லை

     உண்மை  போற்றல் ஒழுக்கம்  

ஈனச் செயல்கள் இழுக்கினைத் தருமே

   என்று உணர்தல் ஒழுக்கம்

ஏனம் ஏந்தி பிச்சை எடுப்பினும்                                     இழிசெயல் நீக்கல் ஒழுக்கம் 

 அறனெனப் படுவது ஆன்றோர் உரைத்தது

    அதன்படி நடத்தல் அதுவே ஒழுக்கம்                        

மறவழி கொண்டு ஒழுக்கம் பிழைத்தோர்

    மனித னாயினும் மரக்கட்டை தானே

உறவினர் ஊரார் ஒழுகிய படியே

    ஒத்து நடத்தலே ஒழுக்கம் ஆகும்

குறவ ராயினும் குலக்குரு வாயினும்

    குலவழக்கம் தவறின் குப்பைக்கு நிகரே.

 

மழுவைக் காட்டினும் மறலியே வரினும்

    மானமே பெரிதென ஒழுக்கம் தவறார்

அழுது  புரளினும் அழிந்த ஒழுக்கம்

    அடைதல் என்பது ஆற்றில் கரைபுளி

அழுக்காறு கொண்டான் அழிதல் போலவே

    ஒழுக்க மில்லான் ஒழிதல் உறுதியே

விழுப்பம் வேண்டுவோர் விழைவுடன் மகிழ்ந்து

    ஒழுக்கக் கொடியை உயர்த்திப் பிடிப்பரே

 

படிப்பதை மறத்தல் பாவம் இல்லை

    பண்பினில் வழுவல் படுநரக உய்க்கும்

குடிப்பிறப்பு என்பது ஒழுக்கம் உடைமையே

    குன்றத்தில் வைத்துக் குவலயம் போற்றிடும

அடித்து நொருக்கினும் அணுவாய் நூறினும்

    அவரவர் நிலையில் நிற்றலே ஒழுக்கம்

நடிப்பால் வருவது ஒழுக்கம் அன்று

நாணமும் அடக்கமும் நல்கிடும் ஒழுக்கமே

 

ஒழுக்கம் உயர்வினைத் தருததால் தானே

      உயிரினும் மேலாய் உயர்த்தப் பட்டது

கழுமரம் ஏற்றினும் கைவிடார் ஒழுக்கத்தைக்

    கற்புநெறி தவறாக் காரிகை போல

ஒழுக்க உள்ளோர் நற்செயல் புரிவர்

    ஒற்றுமை வளரவும் உறுதுணை ஆவார்

வழுக்கியும் வாயாற் வசையும் பாடார்

    வாழ்க வளத்துடன் வாழ்க என்பார்.

 

ஆக்கம் தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்

 தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்

         பேரூர் ஆதீனம்  9788552993

 

                                                  

 

 

No comments:

Post a Comment