Thursday 29 October 2020

கூற்றுக்குரிய மாந்தர் தொல்காப்பியம்

 

               கூற்றுக்குரிய மாந்தர்     தொல்காப்பியம் -   2-8-20  36 ஆம் அமர்வு

தண்டமிழ் செழிக்க தொல்காப்பியர்  பேரவையைத் தோற்றுவித்து, இட்டலிங்கம் சேர்ந்திட்ட கயிலைக்குருமணி தாள் போற்றி, அப்பேரவையின் மூன்றாம்ஆண்டு நிறைவு விழாச் சிறப்புற நடந்தேற அருளுரை வழங்கிய பேரூர் ஆதீனம் திருத்தாள் போற்றி, வாழ்த்துரை  வழங்கிய சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் திருத்தாள் போற்றி, தொல்காப்பியத்தை உலகறியச் செய்வதில்  முன்னேர் பிடித்து உழைத்து வரும் அமெரிக்கா நியுசெர்சியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தையும் அதன் புகழ் உலகெங்கும் பரவிட இணைய தளத்தை அமைத்து மிகச்சிறப்பாகப் பணியாற்றி வரும்  நாச்சி.க நிதி ஐயா அவர்களையும் முனைவர் உமாபதி ஐயா அவர்களையும் வழிபடு தெய்வம் நிற்புறம் காக்க எனப் போற்றுகின்றேன்.

தலைமை உரையை வழங்கிய செக்கிழுத்தசெம்மல் வ.உ.சி அவர்களின் கிளைவழிப் பெயரர் தமிழ்வாணன் ஐயா அவர்களையும்,டாக்டர் எம்ஜிஆர் ஜானகி அம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சத்தியபிரியா அவர்களையும் மற்றும் நன்றி உரை வழங்க உள்ள முனைவர் சண்முகபிரியா பாரதி, வாழ்த்துப்பா இசைத்த திரு இராசேசு வரேற்புரை வழங்கிய கவிச்சுடர் கா.உமாபதி இணைப்புரை வழங்கும் வழக்குரைஞர் இந்துமதி,செல்வன் சேந்தன் அமுதன்  மற்றும் கவிதை வழங்கும் கவிதாயினிகலைநிலா  இணையத்தில் இவ்வமர்வு நிகழ்வுகளைக்  கேட்டுப் பாராட்ட உள்ள தமிழ்ச்சான்றோர்கள் ஆகியோர் அனைவரையும் வாழ்த்தி வணங்குகின்றேன்,

 

5-9-2017 மக நன்னாளில் தொடங்கப்பட்ட  தொல்காப்பியர் பேரவை தடையின்றி மடைமாறாமல் சென்று மூன்றாம் ஆண்டு நிறைவு விழாக் காண்கிறது. கைக்கினை முதலா என கயிலைக் குருமணிமணி திருவாக்கால் தொடங்கப்பட்டது அன்றுமுதல் இன்றுவரை தொல்காப்பிய நூற்பாக்களைப் பாமரனும அறிந்து கொள்ளும் வகையில் 35 தலைப்புக்களில் முழங்கியபின் 36 ஆவது தலைப்பாக கூற்றிற்கு உரிய மாந்தர் யாரெனப் பேசப் போகிறோம்.

   அந்த அடிப்படையில் கூற்றினைப் பற்றி கூறுபோட்டுக்கூற உள்ளேன். கூறும் கூற்று கூறுகெட்டு போகையிலே கூற்றுவன் வந்து உடலை விட்டு உயிரைக் கூறுப் போட்டுச் செல்வான். என்பதை யாவரும் அறிவோம்,   சிலருக்குக் கூற்றே கூற்றவனாக அமைவதும் உண்டு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

  கூற்று என்பது பலபொருள் குறித்த ஒரு சொல்லாகும். அஃது  இயல்பு, கூறுபாடு, துறை,  கூறுதல் ,சொல், மொழி, காலன் நமன்  கொலைத்தொழில் செய்வது எனப் பல  பொருள்களைக் குறிக்கும்,

   அதே சமயம் தொல்காப்பியர் கூற்று என்பதைக் கிளவி கிளத்தல் கிளந்த, ,கூறல், மொழிதல் எனப்பல சொற்களால் குறிப்பார், தொல்காப்பியர் கூற்று என்னும் சொல்லை எழுத்ததிகாரத்தில் எந்த இடத்திலும் கூறவில்லை

 

 சொல்லதிகாரத்தில் 5 இடங்களிலும் பொருளதிகாரத்தில்  14 இடங்களிலும் கூற்று என்னும் சொல்லைப் பயன் படுத்துகிறார் 

கூற்று என்றால் பேச்சு இதை ஆங்கிலத்தில் speach என்பார்கள் ஸ்பீச்சும் பேச்சும் ஒரே ஒலிப்பு முறைதான். கூற்றாவது ஒன்றைப் பற்றி வாய்மொழியாகவோ எழுத்து வடிவிலோ வெளிப்படுத்துவது.

  தொல்காப்பியம் உலக வழக்கிற்கும் செய்யுள் வழக்கிற்கும் நாடக வழக்கிற்கும் இலக்கணம் கூறுவது. தொல்காப்பியர் கூற்று என்பதை நாடக வழக்கிற்காக கூறி உள்ளார். நாடகத்தின் கூறுகளுள் முதன்மையானது உரையாடல்.அதாவது ஒருவர் கூற்றிற்கு மறுமொழி பகர்வது.  கூற்றமும் மாற்றமும் என்பது உரையாடல் வடிவத்தைக் குறிப்பதாகத் தொல்காப்பியம் கூறுகிறது.தொல்1412)

  தொல்காப்பியத்தில் நாடகத் தலைமைக் கூறுகளாக, கூற்று  நிகழ்த்தும் சூழல், இயற்கைக் குறியீடுகள், கூற்று நிகழ்த்தும் அகமாந்தர், கேட்போரிடம் உரைத்தல் போன்றவை காணப்படுகின்றன. கூற்றால் காதல் மாந்தரின் உள்ளோட்டங்களாகிய உணர்வுகள் உணர்ச்சிகள் வேட்கைகள் பற்றி அறியலாம்.

   இங்கு கூற்றாவது அகத்திணைக்கு  உரிய பேச்சு நிகழ்த்துவது இன்னார் எனக்கூறுவது அவற்றுள்  களவில் கூற்றுக்குரியர் யார் என்றும் கற்பில் கூற்றுக்குரியர் யார் என்றும் இரண்டிலும் கூற்று நிகழ்த்துவோர் யார் என்றும் தொல்காப்பியர் தனித்தனியாக்க் கூறுகிறார்

            தொல்காப்பியர்  கூற்று நிகழ்த்துவோர் 12 பேர் எனச்சட்டுகிறது. அகத்திணை களவு கற்பென இருவகைப்படும். அவற்றுள் களவில் கூற்று நிகழ்த்துவோர் யாரெனக் காண்போம்

பார்ப்பான் பாங்கன் தோழி,செவிலி

சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியோடு

அளவியல் மரபின் அறுவகை யோறும்

களவினில் கிளவிக்கு உரியர் என்பர் 1445

களவினில் கூற்று நிகழ்த்துவோர் பார்ப்பான் பாங்கன் தோழி,செவிலி கிழவன் கிழத்தி ஆகிய அறுவரும் ஆவர்

 

கற்பில் கூற்று நிகழ்த்துதற்குரியர் யார் என்றால்

பாணன் கூத்தன் விறலி பரத்தை

யாணம் சான்ற அறிவன் கண்டோர்

பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா

முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇஇத்

தொல்நெறி மரபின் கற்பிற்குரியர் 1446 என்கிறது நூற்பா

 

இதன்பொருள்,களவில் கூறபட்ட பார்ப்பான் பாங்கன் தோழி,செவிலி கிழவன் கிழத்தி என்னும் அறுவரோடு பாணன் கூத்தன் விறலி பரத்தை அறிவன் கண்டோர் அறுவரும் சேர்ந்து 12 பேர் கற்பில் கூற்று நிகழ்த்துவர்

 

ஊரிலுள்ளாருஞ் சேரியிலுள்ளாரும். அயன் மனையுள்ளாரும் நோய்ப்பக்கங் குறிப்பினாலறிவாரும்  தந்தையுந்தமையனும் களவு கற்பு இரண்டிலும் வெளிப்படையாக் கூற்று நிகழ்த்துதல் இல்லை                                          ஊரும் அயலும் சேரி யோரும்

நோய்மருங்கு அறிஞரும் தந்தையும் தன்னையும்

கொண்டு எடுத்து மொழியப்படுதல் அல்லது

கூற்று அவண் இன்மை யாப்புறத் தோன்றும் 1447 என்பது நூற்பா

 

பெற்ற தாயாகிய நற்றாய்  தலைவன் தலைவியோடு நேரடியாகப் பேசுதல் இல்லை. கிழவன் தன்னொடும் கிழத்தி தன்னொடும்

நற்றாய் கூறல் முற்றத்  தோன்றாது 1448என்பது நூற்பா

 

தலைவனும் தலைவியும் உடன்போக்கு நிகழ்த்தும் போது இடைச்சுரத்தில் கண்டோர் நற்றாய் தோழி செவிலி. இவரொடும் தலைவனொடுந் தலைவியொடுங் கண்டோர்  கூற்றுநிகழ்த்துவர். அதற்கான நூற்பா

ஒண்தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு

கண்டோர் மொழிதல் கண்ட தென்ப  1449

 

இடைச்சுர மருங்கில் கிழவன் கிழத்தியொடு

வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன என்பதால்

இடைச்சுரத்தில் செல்லும்போது தலைமகன் தலைவிக்கு நீதிநூற்கருத்துகளை எடுத்துச்சொல்வது உண்டு என்றும் அறியலாம்

 

இவ்வாறு கூற்று நிகழ்த்துவோரைக் கூறிய தொல்காப்பியர் கூற்றினைக் கேட்போர் யார் யாரெனக் கூறிகிறார்  கூற்றிற்கு உரிய 12 பேரில் தலைவன் தலைவி  நீங்கலாக உள்ள 10 பேரும் கூற்றினைக் கேட்போர் ஆவர்.                                                                                                                                                                                                                                                                                                                  

மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்

நினையுங் காலைக் கேட்குநர் அவரே  1452

 பார்ப்பார் அறிஞர் ஆகிய இருவர் கூற்றுகளையும் அனைவரும் கேட்பர்

பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி

யார்க்கும் வரையார் யாப்பொடு  புணர்ந்தே 1453

மக்களைத்தவிர

மக்கள் அல்லாதோர்களையும் கேட்டற்குரிய  பொருள்களாக தொல்காப்பியர் கூறுகிறார். அவை

 

ஞாயிறு திங்கள் அறிவே நாணே

கடலே கானல் விலங்கே மரனே

புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே

அவையல பிறவும் நுதலிய நெறியால்

சொல்லுன போலவும் கேட்குந போலவும்

சொல்லி யாங்கு அமையும் என்மனார் புலவர்.

இந்த அமர்விலே   தொல்காப்பியர் கூறும் கூற்றிற்குரிய மாந்தர்களைப் பற்றி அறிந்தோம்   அவர்கள் எந்த எந்த இடங்களில் கூற்று நிகழ்த்துவர் தனித்தனியாக  அடுத்த அமர்வுகளில் காண்போம் இதுவரை உங்களோடு உரையாடியவர்  புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் நன்றி வணக்கம்

 

 

 

 

 

 

No comments:

Post a Comment