Friday 9 November 2018

சிவத்தொடு கலந்த சிவமே போற்றி!பேரூர் சாந்தலிங்க அடிகள்


  சிவத்தொடு கலந்த சிவமே போற்றி!  
உலகம் உய்யவே உளமிகக் கொண்டு
     ஊண்தனை ஊட்டிடும் உழவரும் அவரே!
மலரது மாட்சியாய் மாந்தர் மனமதில்
     மாசிலா ஒளியாய் ஒளிர்பவர் அவரே!
இலமென வந்த ஏழையர் தமக்கு
     இன்முகம் காட்டும் வள்ளலும் அவரே!
பலரும் போற்றிப் பரவும் தேவரும்!
     பணிமொழி பேசிடிடும் பண்பாளரும் அவரே!       1

என்னைப்போல் உள்ள எண்ணற்ற புலவரை
     எம்தமிழ் நாட்டிற்கு ஈந்த வள்ளலவர்!
அன்னார்போல் யாருளார் அருந்தமிழ் ஆசிரியர்
     உயர்பதவியும் ஊதியமும் பெற்றிட உதவியோர் !
அன்னார் தன்னால் நிமிர்ந்தோம் தமிழரென
     அவரால் தானே ஆரியர் அடங்கினர்
கன்னல் மொழியால் களிப்பினைத் தந்தவர்!
     கடைசாதி என்பாரை கருவறைக்குள் விட்டவரே !              2.

அனைத்துயிரும் வாழவே அனுதினம் உழைத்தே
     ஆவுக்கும் அறச்சாலை வைத்துக் காத்தவர்
தினைத்துணை தீங்குமே சிந்தையில் கொள்ளாத்
     திடமான எண்ணத்தால் கல்லூரி தந்தவர்!
மனிதனை மையமாய்க் கொண்டிவண் பணிசெயும்
     மாணிக்கக் குன்று மறுவிலா முழுநிலா
கனிமொழி தமிழில் கலக்கும் அயல்மொழியை
     களையாய் பறித்துக் காத்த காவலரே !.            3

அங்கம் தன்னில் லிங்கம் தரித்தே
     அருளொடு அறத்தினை அருளும் நாயகர்!
பங்கமிலா வாழ்வினைப் பாரோர் பெற்றிடப்
     பண்புகொள் சொல்லினை என்றும் பகர்ந்தவர்!
கொங்கு  நாட்டு வரலாற்றைக் கோவைகிழார்
     கொண்டு  எழுத வைத்த கொண்டலவர்!           4         

திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும்
     தீந்தமிழ் நாட்டு தெய்வமாம் முருகனும்
புரிநூல் குறுமுனி அகத்தியப் புலவனும்
     புன்மைதீர் சிந்தைகொள் தொல்காப் பியனும்
விரித்து உரைத்த சங்கத் தமிழை
     வையத்தில் வளர்க்கவே கல்லூரி வைத்ததை
அரிய செயலாய் அகிலமே போற்றுதே
     அன்பின் கொழுந்தே அடிதனைப் பணிகின்றோம்!    5.

ஆரிய மொழியின் அர்ச்சனை தன்னை
     அருந்தமிழ் மொழியில் மலர்வழி பாடாக்கி
நேரிய வழியில் குடமுழக்கு நிகழ்த்தி
     நெற்றிக்கண் ஈசனார் பாசுரம் அனைத்தும்
சீரிய தமிழர் நிகழ்வில் எல்லாம்
     செப்ப வழிகண்ட செந்தமிழ்த் தேவரவர்!
பாரிடம் எங்கும் பைந்தமிழ் வளரவே
     பணிதனைச் செய்த பைந்தமிழ்ப் பாவலர்!          6.

உலகப் பொதுமறை தன்னைப் போற்றியே
     உயர்மிகு பொழிவுகள் நிகழ்த்திய மன்னரவர்!
பலபரிசை நல்கினீர் பயிலும் மாணவர்க்கே   
     பல்சமய மாந்தரும் பாராட்டும் வேந்தவர்!
நலம்பெற நாட்டினில் நன்மாரி பெய்ய
     வேள்விகள் நிகழ்த்திய எங்கள் அரசவர்!
அலமரும் மக்களின் அல்லல் நீங்கிட
      அருளாசி தந்த எங்கள் கோவே!                  7

பிறந்தாலே முக்திதரும் பேரூர்த் திருநகரில்
     பிஞ்ஞகன் கழல்போற்றும் சாந்தையர் திருமடம்
அறச்சாலை தன்னில் அன்றாடம் நீங்காமல்
     அன்னம் பாலிப்பு அளித்திடும் அருளார்!
திறந்தே இருந்திடும் தாளறியா நெடுங்கதவம்
     திருக்கூட்ட வரவை எதிர்நோக்கி நின்றிடும்!
துறவிகள் கூடியே துதித்துப் போற்றிடும்
     துவராடைச் செல்வத்தை துதிப்பார்கள் நாளுமே!         8 

சிறப்பொடு பூசனை நடவாக் கோவிலைச்
     சீர்திருத்தித் திருக்குட நீராட்டு செய்வித்தவர்
மறந்திடச் செய்தவர் உயிர்ப்பலி தன்னை
     மாக்களைக் கொல்லல் மக்களும் தவிர்த்தனர்                
அறவே நீக்கினாய் சாதிக் கொடுமையை
     அனைத்து சமயத்தார் அண்டினர் அவரிடம்
பறவைகள் நாடிடும் பழமரம் ஆனதே
     பேரூர்த் திருமடம் அவரது அருளாலே!.            9

விண்ணகத் தேவரும் வேண்டிக் கொண்டதால்
      விரிசடைக் கடவுள் மேன்மை விளங்கிட
மண்ணகத் தேவர் சாந்தலிங்கர் உரைத்த
     நாற்பெரு நூல்களை நவிலச் சென்றவர்!
தண்டமிழ்க் குறளும் பன்னிரு திருமுறையும்
     தேவர்க்குச் செப்பவே தேடிச் சென்றவர்!
அண்டர் நாயகர் அன்பினில் கலந்து
     அவனுடன் அவனாய் ஆக்கிக் கொண்டவர்!         10

தொல்காப்பியர் பேரவைத் தொண்டன் சொல்லிய
     பாடல்கள் பத்தும் பதமலர் காணிக்கை!
இல்லவர் உள்ளவர் வேற்றுமை நீக்கி
     இன்னுரை பகர்ந்த இறைக்குக் காணிக்கை!
கல்லா ஏழையர் கற்ற அறிஞரும்
     கைதொழு தேத்தும் கடவுளின் காணிக்கை!
வில்வம் சூடிய விரிசடைக் கடவுளின்
     திருவடி கலந்த சிவமே காணிக்கை!                    11        
எங்கள் குலவிளக்கு தொல்காப்பியர் பேரவையின் மூலத்தின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து அவர்புகழ் பாட வாய்ப்பளித்த ஈரோடு தமிழ்ச்சங்க பேரவைக்கு என்நன்றியைக் காணிகைஆக்கி அமைகின்றேன். 
 திருவடி வணங்கி நிற்கும்
தொல்காப்பியச் செம்மல்
புலவர்ஆ.காளியப்பன்,
தலைவர் தொல்காப்பியர் பேரவை,

No comments:

Post a Comment