Friday 9 November 2018

இயற்கையே வெல்லும்


     இயற்கையே வெல்லும்!
நீதிநூல் கற்றாலும் நிலையாமை உணர்ந்தாலும்
நீக்கார்கள் ஆசைதனைக் கிளியே!
ஆதிமுதல் இன்றுவரை ஆண்டவரும் மாண்டவரும்
    அதனுள்ளே அடக்கமடி கிளியே!
பாதிமதி சடையானை பன்னாட்டு ஞானிகளும்            
     தேடி அலைந்தாரடி கிளியே!                                  
வீதிவாழ் துறவிகளும் வேண்டுபணம் உள்ளவரும்
     விதிமுன் ஒருவரடி கிளியே!

காற்றடைத்த பையெனவே கடுவெளியார் சொன்னதையே           
    கணக்கற்றோர் சொன்னாரடி கிளியே!
ஏற்றவரும் மிஞ்சவில்லை எமனுந்தான் துஞ்சவில்லை                 பிறந்தநாள் 20-10-1943
      இயற்கையே வென்றதடி கிளியே!
போற்றுமிசை தினம்பாடி போதனைகள் மனம்கூடி
      புத்தியே தெளியாரடி கிளியே!
ஆற்றலுறு ஆசையும் அருள்பெறு  பூசையும்
      அன்றாடும் செய்வாரடி கிளியே!

சக்கரமே பெரிதென்றும் சக்திமழு பெரிதென்றும்
        சழக்கிட்டு சாவாரடி கிளியே!
முக்காலம் உணர்ந்தாலும் முன்தன்னை உணராமல்
      முழுஞானி என்பாரடி கிளியே!
அக்காலம்  வென்றவரும் இக்காலம் தோற்றிடுவார்
      முக்கால உண்மையடி கிளியே!
எக்காளம் கொண்டிங்கு ஏமாற்றித் திரிந்தாலும்
      இறுதியில் தோற்பாரடி கிளியே!
  
ஆக்கம்
  அகவைமுதிர்ந்த தமிழறிஞர் புலவர் ப.வேலவன்  
      72- சி சிறுவாணிச்சாலை
      பேரூர்(அஞ்)
      கோவை 641010   
      அலைபேசி 7200155621
    

No comments:

Post a Comment