Tuesday 3 October 2017

புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்து



      வள்ளுவன் குறள்போல் வாழி                 
ஆர்த்தெழுந்து வந்த அசோகன் புனிதனாகி
     அறவினை செய்யவே ஆக்கியது கலிங்கம்
போர்தொடுத்தே பரங்கியரை விரட்ட நினைத்த
     சுபாசுசந் திரபோசைத் தந்ததும் கலிங்கம்
போர்வெல் போட்டே புவனேசு வரம்செழிக்க
     புரவலர் துரைசாமி சென்றதும் கலிங்கம்
பாரோர் போற்றும் புவனேசுவர் தமிழ்ச்சங்கம்
     படர்ந்து செழித்துச் சிறப்பதும் கலிங்கமே.

அன்னைத் தமிழ்வளர அரும்பணி ஆற்றிடும்
     ஆர்வலர் பல்லோரை ஆதரிக்கும் தமிழ்ச்சங்கம்
வன்புயல் தாக்கலால் பின்னப்பட்ட ஒடிசாவில்
     வழியற்ற மக்களை காத்த தமிழ்ச்சங்கம்
துன்புரும் மக்கள் துயரினை ஓடியே
     துடைத்திடும் பூரிநகர் வளர்தமிழ்ச் சங்கம்
அன்பெனும் நாராலே அனைவரையும் சேர்த்தனைத்து
     வெள்ளிவிழாக் கண்டு விளக்கமுறும் தமிழ்ச்சங்கமே

வள்ளுவனும் பாரதியும் வளர்த்தெடுத்த வண்டமிழ்தான்
     வேரூன்றி ஒரிசாவில் வெகுவாக வளர்வதற்குப்
பள்ளத்து நீரூற்றைப் பார்த்தறியும் விஞ்ஞானி
     பட்ட பாட்டாலே விளைந்த செல்வத்தை
உள்ளூரின் கனிமரமாய் ஒருமனதாய் தந்ததனால்
     ஒடியாவில் தமிழ்மகளும் ஓங்கி வளர்கின்றாள்
தொல்காப்பியப் பேரவைதான் வாழி வாழியென்று
     வள்ளுவன் குறளாலே வாழ்த்துகிறோம் வாழியவே.
    

No comments:

Post a Comment