Wednesday, 22 November 2023

திருமண நிகழ்வு ஏற்படக்காரணம்

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல்.பொருள்.கற்பு1091)

                    திருமண நிகழ்வு ஏற்படக்காரணம் என்ன என்பதை எடுத்துரைக்கும் நூற்பா.

    ஊழ் வினையால் ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டு காதல் கொண்டனர்.கண்ணால் பேசியவர்,கரம் கோத்தனர். களிப்பும் எய்தினர். இவ்வாறு தனிமையில் இனிமை கண்டஇருவரும், களவினை நீக்கி பலரும் அறியக் குடும்ப வாழ்க்கையை வாழத் தொடங்கிய நிலையே கற்பு எனப்பட்டது. இல்லற வாழ்க்கையையே கற்பு என்றனர்.அவ்வாறு தம் வாழ்க்கைத் துணைவரைத் தாமே தேர்ந்தெடுத்து வாழத் தொடங்கிய காலத்தில்,ஒருசில தலைவர் இவளை நான் காதலிக்கவில்லை எனப் பொய் பேசியும் (பொய் என்பது செய்தலை மறைத்தல்), ஒருசிலர் பிறர் அறிய வாழ்க்கை வாழும் போதே அவளைக் கைவிட்டும் வந்தனர். (வழு என்பது செய்வதில் கடைசி வரை உறுதியாக நில்லாது இடையில் தவறிவிடுதல்) இவ்வாறு பொய்யும் வழுவும் தோன்றி ஏமாற்றுத்தனங்கள் நிகழ்ந்தன.வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்கத்தான்தண்டனை என்பதாலும் மலருக்கு மலர்தாவும் வண்டாகச் சில ஆடவர் மாறியதாலும்.ஏமாற்றுத்தனங்கள் மலிந்தன.ஆனால் மலரோ காய்களைத் தாங்க வேண்டியதாயிற்று. தந்தை மகற்காற்றும் நன்றிகளும் இருந்ததாலும் களவொழுக்கம் ஒழுகி இல்லறம் நடத்தத் தொடங்குவோர் இனிப் பலர்  முன்னிலையில் பெற்றோர் உடன்பட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர். இதனையே தொல்காப்பியர் “கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வது” என்றார். இக்கட்டுப்பாட்டின் படியே பின் எல்லாத் தமிழர்களும் ஒழுகி வந்தனர். இதுவே திருமண நிகழ்வுகளுக்குக் காரணம் ஆயிற்று. இதில் ஐயர் என்பதை இக்காலத்தில் உள்ள பார்பார்களாகக் கொண்டதால்தான் இந்நூற்பா இடைச் செருகல் எனக்கொண்டனர் சிலர். ஐயன் என்றால் தன் தந்தையின் தந்தை எனக் கொங்குநாட்டில் குறிப்பர் ஐயா என்பதை மேன்மை பொருந்திய குலப்பெரியோர், ஆசிரியர்,வயதில் மூத்தோர் என எடுத்துக்கொள்வதே மிகவும் சிறப்புடையதாகும் இவ்வாறு சமுதாயச் சான்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட வாழ்க்கையே கற்பு. இதனையே இயல்பினால் இல்வாழ்வான் என்றார் வள்ளுவரும். (1-9-19  பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993

 

 

 

 

 

 

சொல் என்றால் என்ன?

 

                                                    சொல் எனப்படுவது  

சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. ஒருமொழிக்கு முதற்காரணமாக இருப்பதுசொல்.  ஒலி அணுக்களின் காரியத்தால் உண்டாவது.

சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும்  மொழிக்கூறு. சொல்,கிளவி,மொழி, பதம், வார்த்தை, வாசகம் என்பன ஒரே பொருளுடையன. எழுத்துகளால் உருவானதாக இருந்தாலும் பொருள் தருவதாக இருந்தால் மட்டுமே அது சொல் எனப்படுகிறது. பொருள் தராதவை சொல் எனப்படுவது இல்லை என்பதால்தான் ’எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

    சொல்லைத் தொல்காப்பியம்   ஓரெழுத்தொருமொழிஈரெழுத்தொருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி எனப் பாகுபடுத்திப் பார்த்தது

உயர்தனி செம்மொழியாய் விளங்கும் நம் தமிழ்மொழிக்குப் பெருமைசேர்ப்பது அதன் சொல்வளமாகும்.. சொற்களின் இலக்கணத்தை உலகவழக்கு செய்யுள்வழக்கு என இரண்டாகப் பகுப்பர். அவ்விரண்டையும் போற்றி இலக்கணம் கண்டநூல் தொல்காப்பியம்.

                                சொல்லெனப் படுப பெயரே வினையென்று

                                ஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே.      (தொல். சொல். பெயரியல். 4)

        பொருள்:   தமிழ் போன்ற ஓர் உயரிய செம்மொழியில் சொல் எனச் சிறப்பித்து  அறிந்தோரால் கூறப்படுவது,  பெயர்ச்சொல், வினைச்சொல் என இரண்டு வகைப்படும். பெயர்ச்சொல் என்பது மனிதர்கள் உலகில் பார்க்கும், உயர்திணை அஃறிணைப் பொருள்கள், செயல்கள், காலம், இடம்,  எண், நிலை போன்ற அனைத்திற்கும் ஒரு நிலையான பெயரிட்டு அடையாளம் கண்டு கொள்வதற்காக உண்டான ஒருகுறியீடு எனலாம்

வினைச்சொல் என்பது பல்வேறு செயல்    வகைகளை அடையாளம் கூறப் பயன்படுவது. மற்ற சொல்வகைகள்   இடைச்சொல், உரிச்சொல். இவை       அனைத்தும் பெயர், வினைச் சொற்களின் இடமாகத்தான் தோன்றும். எழுத்துகளில் முதல் எழுத்துகளான  உயிர், மெய் இருப்பது போல், இவ்விரண்டு சொல் வகைகளும் தமிழ் மொழியின்      அடிப்படைச் சொல் வகைகள் எனலாம். மற்ற இடைச்சொல்லும்  உரிச்சொல் யாவும்  சார்புச்சொற்களே..

சொல்லை இலக்கணவகையால் பெயர்ச்சொல் வினைச்சொல்,இடைச்சொல் உரிச்சொல் எனப்பகுத்தாலும் இலக்கியவகையால் இயற்சொல் திரிசொல் வடசொல் திசைச்சொல் என்றும் பிரிப்பர்

       எனவே சொல் எனப்படுவது தனிமொழி தொடர்மொழி, பொதுமொழியாக நின்று,இருதிணை ஐம்பால் பொருள்களையும் தன்னையும் உணர்த்தி தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடத்திலும் உலக(பேச்சு) வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வெளிப்டையாகவும் குறிப்பாகவும் விரித்துச்சொல்வது சொல் எனப்படும். பதிவு தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் சார்பாக புலவர் ஆ.காளியப்பன் 9788552993