Friday 28 October 2022

தொல்காப்பியத்தில் அகம்

              தொல்காப்பியத்தில் அகமும் புறமும்   

 முன்னுரை: 

சொல்லெனும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்

நல்லிரும் தீந்தாது நாறுதலால் – மல்லிகையின்

வண்தார் கமழ்தாமம் அன்றே மலையாத

தண்தாரான் கூடல் தமிழ். – மதுரைக்காஞ்சி 

என்ற வாக்கின்படி இலகுவது நம் செந்தமிழ் மொழி இதன்கண் மக்கள் பிறப்பின் பயனான

அறம்பொருள் இன்பம் வீடுகளை அறிந்து உய்ய அறிஞர் ஆக்கிய நூல்கள் பல. அவை பண்டைய தமிழரின் வாழ்வியலையும் பண்பாட்டுக்கூறுகளையும் உயர்ந்த ஒழுக்கங்களைத் தம் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வந்த தமிழர் வாழ்வையும் எடுத்துரைக்கின்றன..

       அறம்பொருள் இன்பம் என்பனவற்றுள் அறம் பொருள் என்பன புறமாகும். இன்பம் என்பது அகமாகும். புறம் புறவாழ்வியலோடு இணைந்த புகழ் ஆண்மை, வீரம் பற்றி எடுத்துக் கூறும். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றி விவரிக்கும்.இப்படி வளமாக வாழ்ந்த  தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் தொல்காப்பியம் ஒளிர்கின்றது.  உலக மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் இருக்க தமிழ் மொழிக்கு மட்டுமே வாழ்வியல் கருத்துகள் பொதிந்து கிடக்கும் பொருளதிகாரம் தொல்காப்பியரால் அமைந்தது.       

முப்பொருள் முதன்மை:

        தமிழின் இலக்கியக் கோட்பாடும் அறம், பொருள், இன்பம் என்பனவற்றை முன்னிறுத்தியவை ஆகும். அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே என நன்னூல் உரைத்தாலும் அவற்றுள் வீடு என்பது  சிந்தையால் சிந்திக்கலாமே அன்றி மொழியால் உரைக்கப்படுதல் இல்லாதது.  மேலும் இம்மைக்கண் இல்லாதது  அதனால்  ஏடுகளால் இயம்பப்படுவன அறம் பொருள் இன்பம் என்ற மூன்றே.அக்காரணம் பற்றியே

திருவள்ளுவரும் தம் நூலை  அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றார். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு தொல்காப்பியரும்  அந்த   மூன்றையே முதன்மைப்படுத்தி உள்ளார்.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணும் காலை( தொல்காப்பியம்)

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல  (புறம். 31)

எனக் கோவூர் கிழார் வரையறுக்கிறார்..வேட்கைமுறை பற்றி இன்பம் - பொருள் - அறம் எனவும்,  செய்கை முறை பற்றி அறம் பொருள் இன்பம் எனவும் எண்ணுதல் மரபு.

.   இம்மூன்றனுள்ளும்  உலகில் தோன்றிய  ஓரறிவு உயிராகிய  பயிர் முதல் ஆறறிவு  உயிராகிய மானிடன் வரை எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன; தேடுகின்றன. அந்த இன்பம் என்பது பசி ஆறுவதலாலேயே கிடைக்கிறது. அந்தப்பசி உடற்பசி  குடற்பசி என இருவகைப்படும் அந்தப் பசியால்தான் காதலும் வீரமும் தோன்றுகின்றன.அந்தக் காதலை அகம் என்றும் வீரத்தை புறம் என்றும் தமிழர் கூறினர். அகம்,அன்பின் சிறப்புக்களைப் பாடித் தனிமனிதர்களிடையே காதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் நெறிப்படுத்தியது. புறம், பொதுவாழ்வையும் மனிதன் உயர்நிலை எய்தும் சிறப்பையும் பாடியது.

.எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதே  நோக்கம்:

இன்பம் பெருகும் இயல்பினால்  என்று . பெரியபுராணமும்.

இன்பம தெங்கும் நிலைகொண் டிருக்கவும் என்று தொல்காப்பியர் பிள்ளைத் தமிழும்  கூறுகின்றன.

உலகம் உயிர்கள் எல்லாம் இன்புற்றிருக்கவே ஞானிகள் விரும்பினர்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்  என்றும்,

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” 26. பராபரம் – 155 என்றும்,

அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே என்றும் கூறினர்.

 

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது              

தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்  -தொல்.பொருளதிகாரம்-219.

என்பது தொல்காப்பிய இலக்கணப்படி அமைந்த இன்பியற் கோட்பாடாகும்.

ஆகவே இன்பத்தை அடைதலே எல்லா உயிர்க்கும் இறுதி முடிவு.

      தொல்காப்பியம். உள்ளமும் உடலும் ஒன்றாய்த் தோய்வதில் வரும் இன்பமே எல்லா உயிர்க்கும் இன்பம். உடலும் உள்ளமும் ஒன்றாய்த் தோயும் இன்பம் எது? மனிதர்களுக்குக் கல்வியில் தோயும்; தவத்தில் தோயும்; தானத்தில் தோயும்; மற்ற உயிர்களுக்கோ? காமத்தில் மட்டுமே தோயும். எனவே, எல்லா உயிர்களுக்கும் பொதுவான தோயும் இன்பம் காமமே.

கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ  கம்பன்   பொன்மொழிகள் 

கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும்  ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள (குறள்1101)     

இந்தக் காம உணர்வு என்பது அந்தந்த உயிரிகளின் பிறப்பிலேயே தானாக விரும்பிப் பொருந்தி வருவதாகும். இந்த உணர்வு இருப்பதால்தான் எதிர்பால் ஈர்ப்பு உண்டாகி ஒன்றினுள் கலந்து உலகில் உயிர்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.இதுவே இறுதியான முடிவு அதனால்தான் திருவள்ளுவரும் இறுதிக்குறளில்

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெரின் என்றார்(குறள்1330) உயிரினம் பெருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை அவற்றுக்கு ஆண், பெண் எனத் தனித்தனி வடிவங்கள் கொடுத்தது. ஒன்றின் மீது மற்றதற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று மகாபாரதத்தில் காம கீதங்கள்கூறுகின்றன். பிள்ளைப் பேற்றிற்றாக இயற்கை ஆக்கிவைத்த ஆண் / பெண் ஈர்ப்பு என்ற உணர்வு அன்றாட தேவையில் ஒன்றாக மாறிப்போனது. ஏனென்றால் மனித இனத்தைத் தவிர்த்து மற்ற உயிரனங்களுக்கு மனம் சார்ந்த தேவையாக காமம் இருப்பது இல்லை. உறவின் உச்ச நிலையில் மட்டும்தான் மனிதன் தன்னையே மறக்கிறான். சில நொடிகளோ, நிமிடமோ,  ஆண்-பெண் உறவின்போதுதான்,  நான்என்பது அறவே மறைந்த,  எந்த சிந்தனையும் இல்லாத நிலையை, அவனால் அடைய முடிகிறது. 

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படும் தோறும் இனிது (குறள்.1145)

காமமானது ஒருவருக்கு தாம் கற்ற கல்வியையும் மறக்கச் செய்யும் அளவிற்கு மாற்றும் தன்மை உடையது. விரும்பிய பெண்ணை அடைவதற்குத் தடை வரும் போது தலைமகன் மடலேறும் வழக்கம் பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்தது. தலைவியின்பாற்  காதல் கொண்ட தலைவன் தன் காதலுணர்வை அவளுக்கு வெளிப்படுத்த மடலேறுதல் நிகழ்த்துவான். மடலேறுகின்ற தலைமகன் எருக்கம் பூவை தலையில் கண்ணியாகத் தொடுத்து அணிந்துகொண்டு பனங்கருக்கினால் செய்த குதிரை மீதேறி ஊரார் அறியும்படி தன் காதலை வெளிப்படுத்துவான். இதனை, 

       பொன்ஏர் ஆவிரைப்  புதுமலர் மிடைந்த

       பல்நூல் மாலை பனைபடு           

     கலிமாப் பூண்மணி கறங்க ஏறி என்பர்   

     இன்பம் என்பது காதல் உணர்வு..பருவம் அடைந்த ஆடவர் பெண்டிர் அகத்தே பூத்து மலரும் பொற்பு உடையது. இவ்வகப்பொருள் இத்தன்மைத்தன என்று சிறப்பாக எடுத்துக்கூறுவது ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும், குடிநீரும் போல ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மைப் பெற்று, வளர்த்து விடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பத் தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை.அஃது  ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஓர் ஆண்.   கடைசி வரை ஓர்  உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை.

      .பழந்தமிழர் வாழ்வியலில் அகம் என்பது இன்ப நுகர்ச்சி, அதனால் விளையும் பயனை நுகர்வோர் மட்டுமே அறிய முடியும் அது உணர்வால் அறிவதன்றி  இவ்வாறு  இருந்தது என  வெளிக்கு எடுத்துரைத்தல் இயலாதது. அதனால் அகம் என்று தொல்காப்பியர் உரைத்தார். அப்படிப்பட்ட அகத்திணையை ஏழு வகைப்படுத்தி உள்ளனர். அவற்றுள் நிலம் சார்ந்த ஐந்து திணைகளை (குறிஞ்சி முல்லை, மருதம்,நெய்தல், பாலை) அன்பின் ஐந்திணை என்றும் எண்ணத்தைச்(உள்ளத்தே,இல்லத்தே) சார்ந்த திணை (பெருந்திணை, கைக்கிளை) என்றும் இரண்டும் சேர்த்து அகத்திணை ஏழு என்றனர்.இதைப் பொருளதிகாரத்தின் முதல் நூற்பா கூறுகிறது.அந்நூற்பா

             கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

       முற்படக் கிளந்த எழுதிணை என்ப என்பதாகும்

அவற்றுள் ,

   நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்

   படுதிரை வையம் பாத்தியப் பண்பே (அகத் -2)

என்பதால் குறிஞ்சி முல்லை, மருதம் ,நெய்தல்,பாலை,என்று ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்ற ஐந்திணைகள் மட்டுமே அன்பின் ஐந்திணை என்று போற்றப்பட்டது

   அகத்திணை என்பது காதல் சார்ந்த  ஒழுக்கம். அந்த ஒழுக்கம் வாழும் இடத்திற்கும் வாழும் காலத்திற்கும ஏற்றபடியே நிகழும். எனவேதான் நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆயிற்று. திணைகளின் பொருள்களைக் கூறவந்த தொல்காப்பியர்,

“முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலுங் காலை முறைசிறந் தனவே

                பாடலுட் பயின்றவை நாடுங் காலை”(அகத்3)                                                என்ற மூன்று பொருள்களைக் குறிப்பிடுகின்றார்  மேலும்

முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே(அகத்4)

என்று கூறுகிறார். அவற்றுள்ளும்  முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும் நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலம் கூறுகிறார். பாலைக்கு நிலம் கூறவில்லை. ஏனெனில் பாலை என்பது இயற்கை ஆனது அன்று மரத்தை மறந்த மனிதனாலும் மழையின் மாற்றத்தாலும் வருவது.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து,
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்து,
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்
என்கிறது சிலம்பு  உலகில் நான்கு நிலங்கள் மட்டுமே உள்ளதால்தான் இவ்வுலகிற்கு நானிலம்.என்னும் பெயருண்டாயிற்று.

மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.(அகத்5)

        கருப்பொருள் என்பது அந்தந்தத் திணைக்கு உரியனவும், அவற்றின்கண் உள்ளனவும் ஆகிய பொருள்கள். ஒவ்வொரு நிலத்தையும் சார்ந்து அங்கு விளங்கும்,வாழும், திகழும் பொருள்கள் யாவும் கருப்பொருள்களே. அவற்றைத் தொல்காப்பியர்

தெய்வம் உணாவே  மா மரம், புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப  என்று கூறுகிறார்

 . கருப்பொருள் அகத்திணைக்குக் கருவாய் அமைவன. உரிப்பொருள் சிறந்து விளங்க கருப்பொருள் அமைகிறது. மனிதனின் வினை நிகழ்ச்சிக்குத் துணையாக இருப்பவைகளும் நிலம் பொழுது இவற்றின் இயல்பால் தோன்றுபவைகளும் படைக்கப்படும் மானுட நிகழ்ச்சியை விளக்குவதற்குரிய வாயிலாக அமைபவைகளும் கருப்பொருள்களாகக் குறிக்கப்படுகின்றன

      ஐந்து நிலத்திணைகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப உரிப்பொருள்கள் உள்ளன

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே(அகத்16)

இலக்கண நூல்கள் மக்களின் மனநிலையை 'உரிப்பொருள்' என்று கூறுகின்றன

களவு:

அகம் என்பது உள்ளத்தையும் இல்லத்தையும் குறிக்கும்..அகப்பொருள் என்பது காதல் வாழ்வைக் குறிக்கிறது காதல் இன்பத்தைத் துய்ப்பதில், களவு, கற்பு என்ற இரு வேறு நிலைகள் உள்ளன.                                            

களவு கற்(பு)எனக் கண்ணிய ஈண்டையோர்
உளம்நிகழ் அன்பின் உயர்ச்சி மேன(இறையனார் அகப்பொருள்60
 )     

   தொல்காப்பியர் கூறும் களவு அறத்திற்கு மாறில்லாதது. அறமாகவே கொள்ளப்படுவது  பெருமையும் உரனும் உடைய ஓர் ஆணும், செறிவும் நிறையும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் உடைய ஒரு பெண்ணும் 

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப                                                                     மிக்கோ னாயினும் கடிவரை இன்றே (தொல் பொருள் 90)

என்ற தொல்காப்பியர் கூற்றுப்படி

காதலனும் காதலியும் முன்பின் அறியாதவர்களாக இருந்தாலும் ஒரிடத்தில் சந்தித்துக் காதல் கொள்ளுகின்றனர் .கலந்து இன்பம் துய்க்கின்றனர். நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது ஆகும்

  எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது              

   தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்  -தொல்.பொருளதிகாரம்-219.

என்பது தொல்காப்பிய இலக்கணம்  

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே(குறுந்40)

    நெஞ்சம் கலக்கக்காரணம் என்ன?   அறிவியல் அறிஞர்கள்  உலக இயற்கை, பொருள்களின் சேர்க்கை முறையால் புதுப்புதுப் பொருள்களை உண்டாக்கி உலகை வாழ்விப்பது போல ஆண்பால் பெண்பால் என்னும் வாழ்வியல் அறிவர்கள் ஆண்,பெண் கருவை, ஒன்று சேரும் பருவமறிந்து ஒன்றுசேர்த்து உருவாக்கி உயிராக்கி உலகை வாழ்வித்து வருகின்றனர். ஆகவே கரு உருவாகும் நிலை அடைந்ததும் தானாக எழும்ஓர் உணர்ச்சியாகிய காமத்தால் தூண்டப்பட்டு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நாடிக் கூடிக்கழிக்கும் புணர்ச்சியே உலகுயிர்த் தோற்றத்திற்கும் வாழ்க்கை நலத்திற்கும் இன்றியமையக் காரணமாக இருக்கிறது”  

    பருவம் அடைந்த சமயத்தில், உடலும் மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும்.எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்ப்பின் பெயர் காதல்!’ - இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு பெரும் பசி கொண்டவன், உணவைக்  கண்டவுடன் உலகை வென்றது போல் மகிழும் உள்ள நிலை தான். காதலில் வீழ்வது என்பது ஒருவித வேதியியல் மாற்றம். அது நம் மனித உயிர்த் தொகுதியின் இனவிருத்தியை நிலைநிறுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித வேதியியல் மாற்றங்களை உண்டுபண்ணுகிறது” என்கின்றனர் அறிவியலாளர்கள் 

    இயற்கை நம்மை ஒருவகையான நபருக்கு மட்டும் தயார் செய்து வைத்திருக்கிறதாம்.  ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்திலும் ஒரு தனிப்பட்ட  நாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள் அவர்கள் எதிர்ப்படும்போது. புணர்ச்சிக்குக் காரணமாகிய காதல் அரும்பவே ஒருவனும் ஒருத்தியும் தாமாகவே எதிர்ப்பட்டு கூடுதல் இயற்கை."முற்செய் வினையது முறையா வுண்மையின் , ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து எதிர்ப்பட்டுக் கூடுவது இயற்கைப்   புணர்ச்சி அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது.

.இந்தக் காம வேட்கை மிகுதியால் தான்  காதல் உருவாகிறது. இதுவே காமப் புணர்ச்சி எனப்படுகிறது. இது நல்வினைப் பயனால் தன்னியல்பில் நிகழும் புணர்ச்சியாதலின் இயற்கைப் புணர்ச்சி எனவும், தெய்வப் புணர்ச்சி எனவும்படும். முன்னுறு புணர்ச்சி எனவும் இது வழங்கப்படும்.  .   நல்லூழின் ஆணையால் ஒத்த பிறப்பு, குடி, ஆண்மை , ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்துப் பண்புகளுடன் இருக்கும் ஓர் ஆணும், பெண்ணும் கண்டு காதல் வயப்படுவர்.

  இவ்விருவகை உணர்வும் இளமையில் முகிழ்ப்பனவே. காமம் என்பது அழியும். உடம்பைப் பற்றி நிகழும் அவா ஆகும் .காதல் என்பது அழியாத உயிருணர்வைப் பற்றி  நிகழும் அன்பு ஆகும் வாழ்க்கையில் சிலநாள் கழித்தபின் காமம் தொலைவுறும் காதல் இறுதிவரை நிலையுறும் என்கிறது தொல்காப்பியம்

இருவேறுருவினரான ஓர் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி ஈருடல் ஓருயிராம் என்னும் நிலையை உண்டாக்கி ஒருவர்க்குண்டான நலம்,கேடு இருவருக்கும் ஒத்தபங்காகக் கொண்டொழுகும்படிச் செய்வது  இருவரையும் மூன்று காலோட்ட விளையாட்டின் நிலையில் வைப்பது இருபாலாரிடத்தும் தோன்றி ஒன்று பட்ட காதலன்பே ஆகும். 

 

  பிணி மூப்புகளின்றி, எப்பொழுதும் ஒரு தன்மையராய், உருவும் திருவும் பருவமும் குணமும் குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமையுடையவராய் தலைமகனும் தலைமகளும், பிறர் கொடுப்பவும் பெறவுமின்றி, ஊழ் வகையால் தாமே எதிர்ப்பட்டுக் கூடுவது." தமது மகள் பிறர்க்கு உரியவள் என்று  பெற்றோரால் கொடுக்கப்பட பெறுவதற்குரிய தலைவியை, அவர் கொடுப்பக் கொள்ளாது, இருவரும் கலந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் பிறர் அறியாது புணர்தலின் களவு எனப் பெயர் பெற்றது களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை. நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும்  தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது.  களவுக்காலத்தில்  நிகழும் செயல்பாடுகளைத்  தொல்காப்பியம் விளக்குகிறது.

     தலைவி தன்னுடன் ஒத்த நலன்களால் சிறந்து தோன்றிய வழி தலைவனுக்கு 'இவள் - தெய்வ மகளோ?' என்ற ஐயம் தோன்றும். ஆனால் அவள் அணிந்துள்ள மாலை, அணிகலன் ஆகியவற்றைக் கண்டு அவள் மானிட மகளே எனத் தெளிவான்.' பிறகு அவள் தன்மேல் விருப்பம் கொண்டிருக்கிறாளா என அறிய அவள் கண்களை நோக்குவான். காம வேட்கையினால் அந்நான்கு கண்களும் தாம் கொண்ட காதலை உரைக்கும். ஒருவரை ஒருவர் காணும் முதற்காட்சியிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது, உள்ளப் புணர்ச்சி அளவிலேயே ஒழுகி மணந்து கொண்ட பின்னரே கூடி மகிழ்வர்.    

        . காதல் காலத்தில்ஆசை மிகுதல், ஒருவர் மட்டும் நினைத்தல், நினைவால் உடலும் உள்ளமும் மெலிதல், இன்னது செய்தால் இன்னது நேருமோ என எண்ணுதல், நாணம் வரம்பைக் கடத்தல், பார்க்கும் பொருள்களிலெல்லாம் காதலர் நினைவே வருதல், தன்னையே மறந்து பித்தாதல், எண்ணச் சோர்வால் மயங்கி விழுதல், காதல் நிறைவேறாதபோது சாகத் துணிதல் முதலான நினைவலைகள் களவுக் காலத்திலில் காதலர் உள்ளத்தில் மோதிக்கொண்டே இருக்கும். காதலன் காதலியிடம் பேச்சுக் கொடுத்தல், தன் சொல்லுக்கு அவளைக்  கட்டுப்படுமாறு செய்தல், கட்டுப்பட்டால் இன்ன நன்மை என விளக்குதல், அவளது புன்னகையின் பொருளை  உணர்ந்துகொள்ளுதல், அவளை நினைத்துத் தான் மெலிவதை உரைத்தல், அவள் இல்லாவிட்டால் தனக்கு நிகழப்போகும் தீங்கை எடுத்துரைத்தல், தன் கைவிடாத் தன்மையை அவளுக்குத் தெளிவுபடுத்துதல் முதலான பேச்சுக்களால் காதலன் காதலியை வயப்படுவான் காதலியைத் தொடுதல். அவள் அழகைப் பொய்யாகப் பாராட்டுதல். அவள் ஒப்புதலுடன் அணைத்துக்கொள்ளல். அவளிடம் வருவதற்குத் தனக்கு நேர்ந்த இடையூறுகளை எடுத்துரைத்தல். அவள் உறவு கிடைக்கவில்லையே எனப் பெருமூச்சு விடுதல். உடலுறவு கொள்ள முயல்தல், காதலியைத் துய்த்தல், ஆசை அடங்காமை என்னும் இவை எட்டும் ஒரு வகை

பெற்றவழி மகிழ்தல், அவள் பிரிந்து செல்லும்போது கலங்குதல், நிகழவேண்டியதை எடுத்துரைத்தல், தன்னைக் குறை கூறும் பாங்கனுக்கு எடுத்துரைத்தல், பாங்கன் உதவியை வலியுறுத்தல், தன் ஊர், பேர், அவள் இல்லாவிட்டால் தனக்கு நேரும் கெடுதி முதலானவற்றைக் கூறித் தோழியின் உதவியை நாடல், தோழி தன் தலைவியை இணங்கச்செய்தல், தலைவி இணங்காவிட்டால் மீண்டும் மீண்டும் கெஞ்சுதல், இணங்கியபின் அரவணைத்தல், அவள் தயங்கும்போது தனக்கு நேரும் கெடுதியையும், தன் பெருமைகளை எடுத்துரைத்தல், மடலேறிப் பெறுதல் பற்றி நினைவூட்டுதல் முதலானவை அப்போது பேசப்படும். செல்லும் வழியில் நிகழும் சிலவும் உண்டு.  களவு என்பது இன்ப உணர்வின் அடிப்படையில் நிகழக் கூடியது. தலைவியிடம் தோன்றும் ஏழு வகையான வேறுபாடுகள் தலைவிக்கும் தலைவனுக்கும் உள்ள உறவைக் காட்டிக் கொடுத்துவிடும். அவை (1) உடலில் தோன்றும் மணம், (2) தோற்றத்தில் பொலிவு, (3) உணவு செல்லாமை, (4) மறைவாகச் செயல்படுதல், (5) தோழியை விட்டு விலகிச் செல்லுதல், (6) தோழியிடம் புதுமையாகப் பழகுதல், (7) புணர்ச்சியை எதிர்பார்க்கும் உணர்ச்சி வெளிப்படுதல் ஆகியவை அந்த ஏழு.மெய்யாகவும் பொய்யாகவும் பார்க்கும் பார்வை.அவனை அறியாதவள் போல நடித்தல்பொதுப்பட உலகியல் பேசுதல்விலக்க முடியாமல் அவனை விலக்கல்அவனைப் பின்னர் வா என்று கூறுதல்அவனை ஏமாற்றிப் பித்தனாக்கல்முன்பே உள்ள உறவைக் கூறி அச்சுறுத்தல். இக் களவு ஒழுக்கம் நான்கு வகையாகப் பகுத்துக் கூறப்படும் 

   இந்த உலகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் வியப்பான ஒருநிகழ்வு தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு,  பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் அந்தக் காதல் வாழ்வுதான். காதல் காலத்தில் ஆசை மிகுதல், ஒருவர் மட்டும் நினைத்தல், நினைவால் உடலும் உள்ளமும் மெலிதல், இன்னது செய்தால் இன்னது நேருமோ என எண்ணுதல், நாணம் வரம்பைக் கடத்தல், பார்க்கும் பொருள்களிலெல்லாம் காதலர் நினைவே வருதல், தன்னையே மறந்து பித்தாதல், எண்ணச் சோர்வால் மயங்கி விழுதல், காதல் நிறைவேறாதபோது சாகத் துணிதல் முதலான நினைவலைகள் களவுக் காலத்திலில் காதலர் உள்ளத்தில் மோதிக்கொண்டே இருக்கும்.

      இவ்வாறு களவு முறையில் காதல் புரிபவர்கள்  பிறகு, பல்லோரறிய மணந்துகொள்வர். இதனைக் கற்பு என்று கூறுவர், இதனையே களவும் கற்று மற என்றனர் அறநிலைவழாமல் நிற்றலால் இஃது அறமெனப்பட்டது.  

கற்பு:

கற்பு என்பது-  இல்லற ஒழுக்கம் அதாவது களவொழுக்கம் ஒழுகி மணம்செய்து கொண்டோர். கூடியும் ஊடியும் வாழ்வதே கற்பெனப்படும் அவ்வொழுத்தின் பாற்படும் மன உறுதியே கற்பெனப்படும் .கற்பெனும் திண்மை உண்டாகப்பெறின்(குறள்54) தொல்காப்பியத்தில் கற்புஎன்று வரும் இடங்களை யெல்லாம் ஆராயின் அது இல்லறம்" என்ற பொருளையே குறித்தல் அறியலாம் அவர் களவியல் ஒன்றை வகுத்தது போலவே  கற்பியல் என்ற ஒன்றையும் வகுத்துள்ளார். திருவள்ளுவரும் காமத்துப்பாலில் களவியலுக்குப் பின் கற்பியல் வைத்துள்ளார். திருமணம் முடிந்து இல்லறத்தை நல்லறமாக வாழும் கணவன் மனைவி வாழ்க்கை முறை கற்பு எனவும் கொள்ளப்பெறுகின்றது ஆண் பெண் இருவரும் காதலுக்குப்  பிறகு, இருவருடைய உறவையும் உறுதிப் படுத்த நிகழ்த்தும் சடங்கினையே கற்பு' என்கின்றனர். தொல்காப்பியர் .

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதே(பொருள் 140)

கற்பு என்பது தான் இல்லறவொழுக்க மாகும்.அதை

மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய இயல்நெறி பிழையாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே
” (தொல்.செய்யுளியல் 179)

என்று குறிப்பிடுகின்றார்.

தமிழர் பண்பாட்டில் உயர்ந்த நிலையில் இருப்பது  இல்லறமாகும். அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை. துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. இல்லறத்தைப் பேணுகின்ற கணவனும் மனைவியும் ஒத்த அன்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மனைக்கு அழகென அமைவது தலைவனும் தலைவியும் தன்னுள் கொண்ட புரிதலே அகம் வாழ்வு எனப்படும். ஆணும்,பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு இல்லறத்தின் பயனாக நுகர வேண்டிய இன்பங்களை நுகர்ந்து அறிவறிந்த மக்களைப் பெற்று, அன்போடு சுற்றத்தாரை ,விருந்தினரைப் பேணி, இறுதியாகப் புகழ் பெறுதலே ஆகும். இதனை மனதில் கொண்டே வள்ளுவரும் இல்லறவியலின் இறுதி அதிகாரமாகப் புகழ் என்னும் அதிகாரத்தை அமைத்தார்   .

   ஈதல் இசைபடவாழ்தல் இல்லறத்தின் பயன் என்று வள்ளுவர் கூறுவது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் 190ஆம் பாடலில்,

காமம் சான்ற கடைக்கோட் காலை

 ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

 அறம்புரி சுற்றமொடு கிழவனும், கிழத்தியும்

 சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பியல் – 51) 

களவிலும், கற்பு வாழ்க்கையிலும் இல்லற இன்பமெல்லாம் நுகர்ந்து பெயரன் பெயர்த்திகள் பெற்று அவர்களுக்கு வேண்டிய சிறப்புக்களை எல்லாம் செய்தபின் கடைசிகாலத்தில் தமக்குப் பாதுகாவலாக இருக்கும்  மக்களோடு அவர்களை விட்டு என்றும் பிரியாமல் சுற்றத்தாரும் சேர்ந்திருக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அகவை முதிர்ந்த மனைக் கிழவனும் மனைக் கிழத்தியும் இப்படித்தான் வாழவேண்டும் என்று அனைவருக்கும் பயிற்றுவிக்கும் பாங்கோடு  உலகியலோடு ஒன்றாமல் தாமரை இலைத்தண்ணீர் போல் விலகியிருந்து வாழ்வதுதான் 'இறந்ததன் பயன்' என்கிறார் தொல்காப்பியர்.இதிலிருந்து வீட்டில் மூத்தோர்கள் உடன் இருத்தல் வேண்டும் என்பதும்,அவர்கள் தம் பட்டறிவால் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதும் அறியலாம்.  கற்பு என்பதற்கு இல்லறவொழுக்கம் எனப்பொருள் கொண்டு வீட்டின்கண் மனையறம் புரிதலை பெண்களும், வினையறம் புரிதலை ஆடவரும் மேற்கொண்டு இல்லறம் சிறக்க வாழ்வோமாக  

ஊடலும், கூடலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை                                             

  பெண் ஊடுதல் பற்றிய செய்திகள் திருக்குறளின் கடைசியில் உள்ள புலவி,  புலவி நுணுக்கம், ஊடல் உவகை என்னும் மூன்று அதிகாரங்கள்   ஊடல் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன

களவு வாழ்க்கையின்போது இருவரும் கூடுவதற்குக் காதலி குற்றிட்ட இடத்துக்கு அவள் வரத் தவறியபோது காதலன் ஊடுவான். இந்த ஊடல் புலவி என்னும் போலிப் பிணக்காகவும் இருக்கும் .கற்பு வாழ்க்கையின்போது தலைவனின் பரத்தமைப் பிரிவாகும் தன்னைத் தவிக்கவிட்டு பரத்தையிடம் இன்பம் துய்த்து வந்த தலைவனிடம் தலைவி சினம் கொண்டு ஊடல் கொள்வாள்

அப்போதெல்லாம் தலைவியின் தோழி பக்குவமாக எடுத்துரைத்து அவர்களைக் கூட்டிவைப்பாள் புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்
சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய
(தொல்காப்பியம்கற்பியல் 16) தோழியின் ஊடல் நீக்கமானது களவு வாழ்க்கையில் காதலைத்தொடரச் செய்யும், கற்பு வாழ்க்கையில் இல்லறத்தைச் சிறக்கச் செய்யும்.

   கற்பு வாழ்க்கையில் தலைவனின் பரத்தை ஒழுக்கத்தைக் கண்டிக்கும் விதமாகத் தலைவி ஊடுவாள். திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழும்போது மனைவி தன் ஆவலைத் தணிக்காதபோது கணவன் ஊடுவான் இந்த மனப்பாங்கு ஆண்களிடமும்  இருப்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.                                 

 உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும்
புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய (தொல்காப்பியம் கற்பியல்

தலைவன், தலைவிக்குள் ஏற்படும் ஊடலை நீக்கும் தோழிக்கே
   ஊடல்
  தோழி தலைவனுக்காகப் பரிந்து பேசுவாள்.இதைத்தொல்காப்பியம்

உணர்ப்பு வயின்வாரா ஊடலுற்றோள் வயின்                                          

 உணர்த்தல் வேண்டி கிழவோன் பால்நின்று                                           

 தான் வெகுண்டாக்கிய தகுதி. ( தொல் கற்பு 148)

 ஊடலைத்தணிக்க தலைவண் பல்வேறு முயற்சிகளைச் செய்வான் காலில் விழக்கூடத் தயங்க மாட்டான்.   இதைத் தொல்காப்பியர்                                                                

கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி                                                

அடிமேல் விழுந்த கிழவனை ( தொல் கற்பு 145)                                   

.இப்படி நாயகி ஊடல் செய்யும்போது நாயகன் அவள் காலிலேயே போய்விழுவதாகச் சொல்வது கவி மரபு  ஊடல்  கூடலின் தத்வார்த்தம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மனைவியிடம் தோற்பவன் வாழ்க்கையில் அபார வெற்றி பெறுவான்

ஊடலிற் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்

இவ்வாறு இல்லறத்தில் திளைக்கும் கிழவனும் கிழத்தியும்

நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி

வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை

இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை

என்றிவை யின்மை யென்மனார் புலவர்.(தொல்.பொருள்மெய்ப்பாடு 274)

பிறப்பு முதலிய பத்துப்  பொருத்தங்களும் ஒத்துள்ள தலைவனும் தலைவியும் மனையறம் பேணி இருவரும் கூடி இன்பவாழ்வு வாழ்கின்ற போது தம்மிடையே வரக்கூடாப் பன்னிரண்டு தீய ஒழுக்கங்களை விட்டு  வாழ்பவர் மனையறம் காத்து மாநிலம் போற்ற வாழ்வர்.  

 

No comments:

Post a Comment