Saturday 15 May 2021

சும்மா

 

                          சும்மா 14-5-21

உலகில் தோன்றிய எண்ணற்ற மொழிகள் அழிந்து,  இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன. இன்னும் சில மொழிகள் பேச்சில் வழக்கொழிந்து எழுத்தில் மட்டுமே உள்ளன. சில மொழிகள் பேச்சில் மட்டும் வழங்கி எழுத்தில் இல்லாமற் போயின. இரண்டிலும் வழங்கினாலும் இலக்கிய வளம் இல்லாமல் உள்ளன

இலக்கண இலக்கிய வளங்கள் மிக்கது நம் தாய் மொழியாம் தமிழ்

தொல்காப்பியர் காலமுதலாக தன் கன்னித்தன்மை மாறாத பழம்பெரும் மொழி நம் தமிழ்மொழி.  தொல்காப்பியர் ஒருவரே வழக்கும் செய்யுளும் நாடி இலக்கணம் உரைத்தவர். ஏனையோர் ஒருபோதும் வழக்கை நாடியதாகத் தெரியவில்லை. வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

எல்லாச் சொல்லும்  பொருள் குறித்தனவே என்று தொல்காப்பியர் கூறுகிறார். அவற்றுள் ஒன்றே சும்மா. இந்தச் சும்மா என்ற சொல்லைச் சும்மா(சாதாரணமாக) நினைத்து விடாதீர்கள். இந்தச் சும்மா  என்ற சொல்லும் சும்மா சொல்லவில்லை அதற்குப் பதினைந்திற்கும் மேற்பட்ட பொருள்கள் உள்ளன. அதைப்பற்றி சும்மா சொல்கிறேன் கேளுங்கள்.  கேட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்.

    தமிழ் மட்டும் இன்றளவும் தன் சீரிளமை கெடாது பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.

சும்மா சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!

அடிக்கடி நாம் பாவிக்கும் சொல் தான்,  இந்த சும்மா.

அது சரி சும்மா என்றால் என்ன?

பேச்சு வழக்குச் சொல்லாக இருந்தாலும்,  தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு சொல் இந்தச் சும்மா!

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல். நாம்  பயன் படுத்தும் இடத்தின் படியும்…. தொடரும் சொற்களின்

படியும்..  பதினைந்து விதமான பொருள்களைக் கொடுக்கிறது என்றால் அது    "சும்மா" இல்லை.

வேற்று மொழிகளில் இல்லாத சிறப்பினை,

நாம் அடிக்கடி கூறும் இந்தச் "சும்மா" எனும் சொல் எடுத்துக் காட்டும்.

 

1. கொஞ்சம்  "சும்மா" இருடா? (அமைதியாக/Quiet)

 

2.கொஞ்ச நேரம் "சும்மா" இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு/ Leisurely)

 

3.அவரைப் பற்றிச் "சும்மா" சொல்லக் கூடாது!

 (அருமை/in fact)

 

4.இது என்ன "சும்மா" கிடைக்கும்னு நினச்சியா? (இலவசமாக/Free of cost)

 

5. "சும்மா" கதை அளக்காதே?  (பொய்/Lie)

 

6. "சும்மா" தான் இருக்கு.நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் -

(உபயோகமற்று/ Without use)

 

7. "சும்மா"   "சும்மா" கிண்டல்  பண்ணுறான். (அடிக்கடி/Very often)

 

8.இவன் இப்படித்தான்.. சும்மா சொல்லிக்கிட்டுஇருப்பான். (எப்போதும்/Always)

 

9.ஒன்றுமில்லை "சும்மா" சொல்கின்றேன் - (தற்செயலாக/Just)

 

10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது

(காலி/Empty)

 

11.சொன்னதையே "சும்மா" சொல்லாதே.(மறுபடியும்/Repeat)

 

12.ஒன்றுமில்லாமல்  "சும்மா" போகக் கூடாது - (வெறுங் கையோடு/Bare)

 

13. "சும்மா" தான் இருக்கின்றோம் -  (சோம்பேறித் தனமாக/ Lazily)வேலையின்றி

 

14.அவன்  "சும்மா" ஏதாவது உளறுவான் (வெட்டியாக/idle)

 

15.எல்லாமே  "சும்மா" தான் சொன்னேன் -(விளையாட்டிற்கு/Just for fun)

 

 

சும்மா வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச,  செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை.ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் செம்மொழியாம்.  நம்தமிழ் மொழியே.

 செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப்  படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்

        ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கிறது.

  1. இலக்கியப் படைப்புகள்
  2. கலைப் படைப்புகள்

ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான்  அறிய முடிகிறது. ஒரு மொழி செம்மொழித் தகுதியை, உயர்வை அடைய சில தகுதிப் பாடுகள் மொழியியல் வல்லுநர்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை, 1.தொன்மை, 2. தனித்தன்மை,                                  3. பொதுமைப்பண்பு, 4. நடுநிலைமை, 5. கிளைமொழிகளின் தாய், 6. பட்டறிவு இலக்கியங்கள், 7.பிறமொழித்தன்மை, 8. சமயச் சார்பின்மை, 9. உயர்சிந்தனை, 10. கலை, 11. மொழிக் கோட்பாடுகள் என்பனவாகும். இந்த பதினொரு தகுதிகளுள் முற்றிலும் பொருந்தக்கூடிய ஒரே மொழியாகத் 'தமிழ்மொழி' திகழ்கின்றது. அதாவது, மனித நாகரீகம் தோன்றிய பகுதியில் முதலில் தோன்றிய தொன்மை. 2500 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணமும் அதற்கு முன்னரே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கியமும் தோன்றிய ஒரே மொழி.  நம் தமிழ் மொழியே    புலவர் ஆ.காளியப்பன் 9788552993

 

 

 

 

No comments:

Post a Comment