Tuesday 7 March 2017

இடைநிலை



                       இடைநிலை
                 இன்றைய இலக்கணம்    .               28-02-2017                           
 புலவர்.ஆ.காளியப்பன்                                                    
                         இடைநிலை
பலருக்குச் இடைநிலை என்றால் என்ன? என்று ஐயம் வந்துள்ளது. ஆகவே அதையே இன்றைய இலக்கணத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
   இடை என்பதற்கு, நடு, இடுப்பு, துன்பம், பக்கம், வழி, இடையர், காலம், சமயம், அளவு இடையினமெய் எழுத்து, ஓர் உருபு, ஓர் எடுத்தல் அளவைப் பெயர் (நூறுபலம் கொண்டது) மருங்குல் ,மரக்கன்றுஎனப்பலபொருள் உண்டு.
        இடை மேலுக்கும் காலுக்கும் இடையில் இருப்பதால் அந்த உறுப்பை இடை என்கிறோம். இடுப்பு என்றும் கூறுவர். அரை என்றும் இடுப்பைக் கூறுவர். அதனால் தான் இடுப்பில் கட்டும் கயிற்றை அரைநாண் கயிறு என்றனர்.
உயரமான குறிஞ்சிக்கும் பள்ளமான மருதத்திற்கும் இடைப்பட்ட முல்லையில் வாழும் மக்களை இடையர் என்றனர்.இடையை நடு என்றும் கூறுவர்.வாதிக்கும் பிரதிவாதிக்கும் நடுவில் நிற்கும் நீதிபதியை நடுவர் என்றனர்.அதனால் தான் வள்ளுவர் நடுவுநிலை என்ற அதிகாரத்தை வைத்தார்.
    கணித்திலும் இடைநிலை என்ற ஒன்று வருகிறது.அதை கணக்கு கற்பிக்கும்போது விளக்கப்படும்.
     நால்வகை சொற்களுள் இடைச்சொல் என்பது ஒன்று. பெயர்ச் சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையில் நிற்கும் சொற்களை இடைச்சொல் என்பர். அந்த இலக்கணம் முன்னர் உரைக்கப்பட்டது.
     இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
     நடைபெற்று இயலும் தமக்கு இயல்பிலவே  (தொல்-சொல்249)
நன்னூலும் இடைச்சொற்கள் எவைஎவை எனப் பட்டியல் இடுகின்றன. அந்த நூற்பா
வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
தத்தம் பொருள இசைநிறை யசைநிலை
குறிப்பெனனெண் பகுதில் தனித்திய லின்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத்து
ஒன்றும் பலவும்வந் தொன்றுவது இடைச்சொல்(நன்னூல்-420)  அதுபோக மொழியின் நடுவில் நிற்கும் எழுத்துகளை இடை(நன்னூல்-420)  நிலை மயக்கம் என்றஇலக்கணத்தைப் பின்னர் கற்போம்.
     இவை எல்லாவற்றைக் காட்டிலும் பகுபதத்தின் ஓர் உறுப்பு ஆகிய இடைநிலை பற்றிக் கூறுவோம்.
 பகுபதத்தின் உறுப்புக்கள் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி சாரியை, விகாரம் என்னும் ஆறும் ஆகும். அவற்றுள் இடைநிலை பற்றிப் பார்ப்போம்.
 எல்லாப் பகுபதத்திலும் இடைநிலை வரும் என்று கூறமுடியாது.
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பு ஆகையால் அதை இடைநிலை எனப்பட்டது.
     இடைநிலை பற்றி நன்னூலார்

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலிற்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைப்பெயர் அல்பெயர்க் கிடைநிலை எனலே(நன்னூல்-142)
பகுபதத்தை உறுப்புகளாகப் பிரிக்கும் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தனித்து நிற்கும் எழுத்தே இடைநிலை எனப்படும்.இந்த இடைநிலையைப் பெயர்ப் பகுபத இடைநிலை வினைப்பகுபத இடைநிலை எனப்பிரிப்பர்.
 பெயர்ப்பகுபத இடைநிலை
   அறிஞன்=அறி+ஞ்+அன் இதில் அறி பகுதி, அன் விகுதி, இடையில் நிற்கும் ஞ் இடைநிலையாகும்.ஓதுவான் (பெயர்ச்சொல்) இதில் வ் பெயரிடைநிலையாகும்.
இடைச்சி இதில் ச் இடைநிலை,செட்டிச்சி இதில் இச் இடைநிலையாகும். 
வினைப்பகுபதத்தில் உள்ள இடைநிலையின் பயன் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது. காலம் மூன்று வகைப்படும்.அவை
1.இறந்த காலம்
2.நிகழ்காலம்
3.எதிர்காலம்
இறந்த கால இடைநிலை த்‘, ‘ட்‘, ‘ற்‘ ‘இன்என்ற நான்கும் ஐம்பால் மூவிடங்களில் இறந்த காலம் காட்டும் வினைப்பகுபத இடைநிலை
நிகழ்கால இடைநிலை ஆநின்று‘, ‘கிறு‘, ‘கின்றுஎன்ற மூன்றும் ஐம்பால் மூவிடங்களில் நிகழ் காலம் காட்டும் வினைப்பகுபத இடைநிலை
எதிர் கால இடைநிலை ப்‘, ‘வ்‘, என்ற இரண்டும் ஐம்பால் மூவிடங்களில் எதிர் காலம் காட்டும் வினைப்பகுபத இடைநிலை

இறந்த கால இடைநிலை த்‘, ‘ட்‘, ‘ற்‘ ‘இன்
படித்தான்=படி+த்+த்+ஆன் இதில் விகுதிக்கு முன்னால் உள்ள த் இடைநிலை
உண்டான்=உண்+ட்+ஆன் இதில் விகுதிக்கு முன்னால் உள்ள ட் இடைநிலை
சென்றான்=செல்+ற்+ஆன் இதில் விகுதிக்கு முன்னால் உள்ள ற்இடைநிலை
உறங்னான்=உறங்கு+இன்+ஆன் இதில் விகுதிக்கு முன்னால் உள்ள இன்இடைநிலை

நிகழ்கால இடைநிலை ஆநின்று‘, ‘கிறு‘, ‘கின்று
நடவாநின்றான்=நட+ஆநின்று+ஆன் இதில் விகுதிக்கு முன்னால் உள்ள ஆநின்று இடைநிலை
நடக்கின்றான்=நட+கின்று+ஆன் இதில் விகுதிக்கு முன்னால் உள்ள கின்று இடைநிலை
நடக்கிறான்=நட+கிறு+ஆன் இதில் விகுதிக்கு முன்னால் உள்ள கிறு இடைநிலை
எதிர் கால இடைநிலை ப்‘, ‘வ்
படிப்பான்=படி+ப்+ப்+ஆன் இதில் விகுதிக்கு முன்னால் உள்ள ப் இடைநிலை
இதில் விகுதிக்கு முன்னால் உள்ள ப் இடைநிலை
வருவான்=வா+வ்+ஆன் இதில் விகுதிக்கு முன்னால் உள்ள வ் இடைநிலை

சில முற்றுவினைகளுக்கும் ,எச்ச வினைகளுக்கும் இடைநிலைகள் வருவதில்லை.
சில சமயம் பகுதியோ,விகுதியோ காலத்தைக்காட்டும்.மேற்கண்ட யாவும் உடன்பாட்டு வினைகளுக்கே சொல்லப்பட்டன. சிலசமயம் செய்யுளில் இசின்,மன் என்ற இடைநிலைகளும் வரும்
எ-டு என்றிசினோர், என்மனார்

எதிர்மறை இடைநிலைகளும் உள்ளன. அ,, இல் என்ற மூன்றும்
 படியான்=படி+ஆ+ய்+ஆன் இதில் பகுதிக்கு பின்னால் உள்ள ஆ எதிர்மறை இடைநிலை
சென்றிலன் இதில் இல்என்பது எதிர்மறை இடைநிலை.                       


      

2 comments: